Skip to main content

உயர்ந்த ரஜினி; சரிந்த ஸ்ரீகாந்த்... ஒரே படத்தில் மாறிய வாழ்க்கை!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதன் இரண்டாம் பாகம் பின்வருமாறு... 

 

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்தை என்னுடைய படத்தில் வில்லனாக நடிக்க வைக்க அணுகியது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அவரும் சம்மதித்து விட்டதால் படத்தின் வேலைகளை தடபுடலாகத் தொடங்கினோம். பலரின் எதிர்ப்புகளுக்கு இடையே அப்படத்தில் ரஜினிகாந்தை கதாநாயகனாக அறிமுகம் செய்தேன். பைரவி படத்தின் பூஜையே பிரம்மாண்டமாக நடந்தது. சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், சின்னப்பத்தேவர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உட்பட பல பிரபலங்கள் வருகை தந்ததால் அந்த இடமே ஸ்டார்மயமாக இருந்தது. 

 

தன்னுடைய தங்கையை கெடுத்த வில்லனை வீடு புகுந்து ரஜினிகாந்த் சாட்டையால் அடிப்பதுதான் படத்தின் முதல் காட்சி. அந்தக் காட்சியில் இருந்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அதை எடுக்கும்போது ஸ்ரீகாந்திற்கு உண்மையிலேயே சாட்டை அடி விழுந்துவிட்டது. இந்தப் படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டோம் என அவர் நினைக்கும் அளவிற்கு அடி விழுந்துவிட்டது. அந்தக் காட்சி எடுத்து முடித்தவுடன் அடி விழுந்துவிட்டதா ஸ்ரீகாந்த்... சட்டையை கழட்டுங்கள் என்றேன். அதெல்லாம் ஒன்னுமில்லை... நடிப்புன்னு வந்துட்டா இதெல்லாம் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டார். அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் ஸ்ரீகாந்த். பைரவி வெளியான போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஸ்ரீகாந்திற்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் கதாநாயகனாக நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.

 

நான் பைரவி படம் முடிந்ததும் செல்லக்கிளி படம் எடுத்தேன். அப்போது எனக்கு ஃபோன் செய்த ஸ்ரீகாந்த், கலைஞானம் உன் படத்துல எனக்கு ஏதும் வேஷம் இல்லையா என்றார். என்னயா இப்படி கேட்டுடீங்க என நான் கேட்க, நீ சொன்னன்னு நான் நடிச்சேன்... உன் படம் நல்லா ஓடிருச்சு... இப்ப அடுத்த படமும் தொடங்கிட்ட... எனக்கு வேஷம் இல்லயா என்றார். எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. உடனே அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரத்தைச் சேர்த்து, அதில் அவரை நடிக்க வைத்து சம்பளம் கொடுத்தேன். எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடிய மனிதர் ஸ்ரீகாந்த். கே. பாலசந்தர் உட்பட பலருக்கும் ஆரம்பக்காலத்தில் சோறு போட்டவர் ஸ்ரீகாந்த் தான். அந்த நன்றிக்காக பின்னாளில் தன்னுடைய எல்லா படங்களிலும் ஸ்ரீகாந்திற்கு வாய்ப்பு கொடுத்தார் பாலசந்தர். 

 

தங்கப்பதக்கம் படத்தில் அப்பனை எதிர்க்கிற வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எந்த வேஷம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கக்கூடியவர். படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் இயல்பில் மிக சாதுவான மனிதர். நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புவதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதை என்னிடம் கூறியிருந்தால் நானே ரஜினிகாந்திடம் அவரை அழைத்துச் சென்றிருப்பேன். கடைசியில் அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய மரணம் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.