Skip to main content

ஓடிடியில் கலக்கும் சுயாதீன திரைப்படம் ‘காதலிசம்’

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

 Kadhalism movie review

 

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். தற்போது தானே இயக்கி நடித்துள்ள சுயாதீன திரைப்படமான ‘காதலிசம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

 

சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் காரணமாக திருமணத்தையே வெறுக்கும் புகைப்படக்கலை மீது பெரும் காதல் கொண்ட புகைப்படக் கலைஞரான சந்தோஷ் நம்பிராஜன் ஒரு பெண்ணிடம் காதல் வயப்படுகிறார். இருவரும் அவர்கள் காதல் வாழ்வில் மிக சந்தோஷமாக இருக்கின்றனர். இவர்கள் காதல் மிக ஆழமாக செல்லும்பொழுது நாயகியின் தந்தை இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதை அடுத்து நாயகி வீட்டை விட்டு வெளியே சென்று காதலனுடன் லிவ்விங் வாழ்வில் இணைகிறார். 

 

இருவரும் கணவன் மனைவி போல் லிவ்விங் டுகெதர் வாழ்வில், அன்பாகவும் காதலோடும் வாழ்கின்றனர். இதன் பலனாக நாயகி கர்ப்பம் அடைகிறார். அந்த சமயம் தான் கர்ப்பம் ஆகிவிட்டதால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நாயகன் சந்தோஷ் நம்பிராஜனிடம் நாயகி கேட்கிறார். திருமணத்தையே அறவே வெறுக்கும் நாயகனோ அதை மறுக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் பிரிவு ஏற்படுகிறது. இதை அடுத்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா, இல்லையா? கருவில் உருவான குழந்தையின் நிலை என்னவானது? என்பதே காதலிசம் படத்தின் மீதி கதை.

 

நாயகன் சந்தோஷ் நம்பிராஜனே இப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். இவரைத் தவிர படத்தில் அனைவரும் புது முகங்களாக நடித்திருக்கின்றனர். இப்படம் வெளிநாடுகளில் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இன்றைய இளைஞர்களின் பல்சை பிடித்து அதற்கு ஏற்றார் போல் கதை தேர்வு செய்திருக்கிறார். திரைக்கதை, வசனம் ஆகியவையும் இக்கதைக்கு ஏற்றதாக அமைந்து படத்தை நம்முடன் ஒன்ற வைத்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் வசனம் மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் அமைந்து பல இடங்களில் நம்மை சிந்திக்கவும் வைத்திருக்கிறது. அதேபோல் காதல் வாழ்க்கையில் தற்போது உள்ள சூழலில் பிராக்டிக்கலான வாழ்க்கையை மிக எளிமையாக பிரதிபலிக்கும்படி இப்படத்தை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நம்பிராஜன். ஒரு சுயாதீன திரைப்படமாக வெளியாகி இருக்கும் இப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்!