Skip to main content

"அதில் தவறுதலாக கைவைத்தால் ஷாக் அடித்துவிடும் என்று அம்மா அறிவுரை வழங்கினார்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

fafa

 

சவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று, பிப்ரவரி 1ம் தேதி, சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் 'எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி' திறப்பு விழா நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கிய இந்நிகழ்வில், பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர். மேலும் தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம்.எல்.ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது...

 

“'எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி' திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான். அவர்களை சினிமாவில் பார்த்து ரசித்து, அவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களைக் கேட்டுத்தான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம். எனக்கு செய்தித் துறை அமைச்சர் பதவியை அம்மா அளித்தபோது, அதில் என்னவெல்லாம் பிற துறைகள் இடம்பெறும் என்பதைச் சொல்லி, சினிமா துறையும் அதில் இருக்கும், அதை ஜாக்கிரதையாக கையாள வேண்டும். சினிமா துறை மின்சாரம் போன்றது. நன்கு ஒளி தரும், தவறுதலாக கைவைத்தால் ஷாக் அடித்துவிடும் என்று அறிவுரை வழங்கினார்.

 

gvdvs

 

சினிமா துறைக்காக திரைப்பட ஸ்டுடியோ அமைக்க வேண்டும் என்று பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்தபோது அதனை அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் உடனடியாக பையனூரில் 5 கோடி செலவில் சினிமா ஸ்டுடியோ அமைத்து தருவதாக அறிவித்ததுடன், அதற்கு நிதியும் அளித்தார். அம்மாவின் வழியில் இன்றைக்கு ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வரும் ஸ்டியோவுக்கான தவணை தொகை அளித்தார். மற்றொரு தவணையும் விரைவில் அளிப்பார். திரைப்படத் துறைக்கு விருது வழங்குவது பற்றியும் நம் முதல்வரிடம் கோரிக்கை வைத்தபோது 150 படங்களுக்குத் தலா ரூ. 7 லட்சம் அளித்தார். 

 

அதேபோல் கரோனா காலகட்டத்தில் சினிமாதுறை பாதிக்கப்பட்டிருந்தபோது நிறைய உதவிகளை தமிழக அரசு அளித்தது. மீண்டும் தொழில் தொடங்கவும் உடனுக்குடன் அனுமதி அளிக்கப்பட்டது. தியேட்டர்களில் முதலில் 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்தது தமிழக அரசுதான். ஆனால் அன்றைக்கு 50 சதவீத டிக்கெட்தான் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியது. 15 நாட்கள் கழித்து இன்று அதே மத்திய அரசு 100 சதவீத டிக்கெட் அனுமதி அளித்திருக்கிறது. இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக அரசுதான் செயல்பட்டது என்பதை இங்கு குறிப்பிடுகிறேன்.

 

இங்கு கலந்துகொண்டு பேசிய ரோஜா எம்.எல்.ஏ ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்கபலமாக இருந்து செயல்படுகிறார். தனக்கு அரசியல் வழிகாட்டியாக அம்மாதான் இருந்ததாக கூறினார். பெப்ஸி தலைவராக ஆர்.கே.செல்வமணி சிறப்பாக செயல்படுகிறார். பெப்ஸியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்கு என்ன தேவையென்றாலும் அரசிடம் கோரிக்கை வைத்து பெற்றுத் தருகிறார். இன்றைக்குத் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மேக்கப் அகாடமி சிறப்பாக செயல்பட்டு தமிழகம் முழுவதும் கிளைகள் அமைத்து செயல்பட வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்