Skip to main content

உருவாகிறது 'ஜிகிர்தண்டா 2' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

jigarthanda 2 confirms - karthik subbaraj announced

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'ஜிகிர்தண்டா'. கேங்ஸ்டர் படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக படத்தின் வில்லன் கதாபாத்திரமான 'அசால்ட் சேது' கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்தது. ரஜினிகாந்த் கூட படக்குழுவினருக்கு அலைபேசியில் அழைத்து பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்தை தன்னிடம் சொல்லியிருந்தால் நான் நடித்திருப்பேன் என கூறினார். மேலும் அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா வென்றார். தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. 

 

இந்நிலையில் 'ஜிகிர்தண்டா' படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இதை கொண்டாடும் வகையில் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஜிகிர்தண்டா படத்திற்கான இரண்டாம் பாகம் மற்றும் அதற்கான ஸ்க்ரிப்ட் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் 'ஜிகிர்தண்டா 2' படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகளை கார்த்திக் சுப்புராஜ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

கார்த்திக் சுப்புராஜ், 'மகான்' படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகும் 'ஆர்சி 15' படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துவருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்