சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பேர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் இன்று (10.08.2023) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. அதற்கு முன்னரே கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 6 மணி முதல் இருந்தே தொடங்கியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, திரையரங்கு முன் வழக்கம் போல் பேனர் வைத்து, பட்டாசு வெடித்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதனால் திருவிழா போல் ஒவ்வொரு திரையரங்கமும் காட்சி அளிக்கிறது. இந்தக் கொண்டாட்டம் இந்தியாவைத் தாண்டி கனடா, சைனா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்களுடன் தனுஷ், அனிருத், ரம்யா கிருஷ்ணன், பாடலாசிரியர் சூப்பர் சுபு உள்ளிட்டோர் திரையரங்குகளில் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் ஒரு திரையரங்கில் வித்தியாசமான முயற்சியில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். படத்தில் ரஜினி ஜெயிலர் கதாபாத்திரத்தில் வரும் நிலையில் அதற்கேற்றவாறு 'அன்புத் தலைவரின் கைதிகள்' என்ற வாசகம் இடம்பெற்ற ஒரு பேனரைக் கையில் ஏந்தி, மேள தாளத்துடன் திரையரங்கிற்கு ஊர்வலமாக நடந்து வந்துள்ளனர். அப்போது கைதிகள் போன்று உடை அணிந்து ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வித்தியாசமான கொண்டாட்டம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.