Skip to main content

விஜய் படம் பற்றிய கேள்விக்கு கடுப்பான ஜெய்!

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

jai about vijay 68 movie

 

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் சுப்ரமணியபுரம். கேங்ஸ்டர் படமாக உருவான இந்த படத்தில், சசிகுமார், ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற 'கண்கள் இரண்டால்...' உள்பட அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

 

இந்த நிலையில், இந்த படம் வெளியாகி தற்போது 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால், இப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் சுப்ரமணியபுரம் படத்தை ரசிகர்களுடன் சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் பார்த்து ரசித்தனர். மேலும், படம் முடிந்து இறுதியில் சுப்ரமணியபுரம் படத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடினர். 

 

இதையடுத்து படம் முடிந்தவுடன் வெளியே வந்த படக்குழு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய அவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் பேசிய ஜெய், “சுப்ரமணியபுரம் வெளியான போது காலை காட்சியே கொடுக்கவில்லை. ஆனால், ரீ ரிலீஸிற்கு காலை காட்சி கொடுத்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பேசினார். 

 

அதன் பின்னர், ஜெய் தனது காரில் ஏற முற்பட்டபோது அவரை மறித்து செய்தியாளர் ஒருவர், ‘விஜய் 68 படத்தில் நீங்கள் தம்பியாக நடிக்கிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு ஜெய், “ஒருத்தன் கார்ல ஏறி உட்காரும் போது இப்படி பண்ணக்கூடாது. உங்கள மதிக்காம காரில் உட்கார்ந்து பதில் சொன்னா தப்பா போயிடும். அதுக்கான நேரத்தை சொல்றேன். அப்ப வந்து கேளுங்க” என்று சற்றுக் கோபமாகப் பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்