லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர்
நடிப்பில் உருவான 'விக்ரம்' திரைப்படம், கடந்த 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஜாபர் சாதிக்கை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் விக்ரம் பட அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"நான் சினிமாவுக்குள் நடிக்க வந்தது எதேச்சையாக நடந்த விஷயம். பாவக்கதைகள் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அண்ணா போன் செய்து பேசினார். அவர் பாராட்டத்தான் கால் செய்திருக்கிறார் என்று நினைத்தேன். அதன் பிறகுதான் விக்ரம் படத்தில் ஒரு ரோல் இருக்கு நடிக்கிறீங்களா என்று கேட்டார். நான் நேரில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவர் ஆபிஸிற்கு போனேன். அவர் அந்த ரோல் பற்றி சொன்னதும் உடனே சம்மதம் சொன்னேன். ரீலிஸானதும் லோகேஷ் அண்ணா டீமோடுதான் படம் பார்த்தேன். படத்திற்கு கிடைத்த வரவேற்பு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய நல்ல மெமரிஸ் இருந்தது. ஒருநாள் விஜய்சேதுபதி அழைத்து, நேச்சுரலாவே உன்கிட்ட ஒரு ஆட்டிட்டியூட் இருக்குடா, எங்க யாரையுமே மதிக்கமாட்டேங்கிற, தெனாவட்டாவே சுத்திகிட்டு இருக்க என்றார். ஐயோ அப்படியெல்லாம் எதுவும் இல்லணா, உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்து ஓரமாக இருந்தேன் என்றேன். அப்படித் தெரியலையேடா, இவனுங்கலாம் பெரிய ஆளானு நிக்கிற மாதிரி இருக்கு என்றார். அம்மா சத்தியமா அப்படியெல்லாம் இல்லணா எனச் சொன்னேன். இல்லடா உன்னோட ஆட்டிட்டியூட் அப்படி இருக்கு, அதை மட்டும் என்னைக்கும் விட்டுறாத என்றார்.
பொறுமையும் அமைதியும்தான் லோகேஷ் அண்ணனோட மிகப்பெரிய பலம். ஸ்பாட்டில் வேலை நடக்கணும்னா என்ன செய்யனும்னு அவருக்குத் தெரியும். எல்லா நேரங்களிலும் அவர் அப்படி இருப்பது ஆச்சர்யமாக இருந்தது".