Skip to main content

லியோ பட விவகாரம் - ஃபெப்சி அறிக்கை

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

fefsi about leo dancers issue

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது. இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு, பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். 

 

இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி தொடர் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் படக்குழு நேற்று புது சிக்கலில் சிக்கியது. படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி தான்...' பாடலில் நடனக் கலைஞர்களாகப் பணியாற்றிய 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு ஊதியம் வந்துசேரவில்லை எனக் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். மூன்று மாதங்களுக்கு மேலாகச் சம்பளம் தராமல் இருந்ததாகவும் இது பற்றி தயாரிப்பு தரப்பிடம் கேட்டபோது, சரியாக பதிலளிக்கவில்லை எனவும் புகார் கொடுத்த கலைஞர்கள் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது அவர்களுக்கும், நடனக்கலைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்த நிலையில் இந்த நடனக் கலைஞர்கள் விவகாரம் தொடர்பாக ஃபெப்சி தலைவர் செல்வமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடனக் கலைஞர்களின் புகார்களை மறுத்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, "லியோ திரைப்படத்தில் நடனக் காட்சியில் பங்கு பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்தோம். திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2,000 நடன கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக அந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்த நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI) இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். 

 

ஏனெனில், அதிகபட்சமாக 1,000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில் பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 600 நடன கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். இதுபோன்று அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசைகளில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள் / பெண்களை பின் வரிசையில் நிற்க வைத்தும் படமாக்குவது வழக்கம். இவர்கள் ரிச் பாய்ஸ் / ரிச் கேர்ள்ஸ் என்றோ மாடல்ஸ் என்றோ உறுப்பினர் அல்லாதவர் என்றோ அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து கன்வேயன்ஸ் (Conveyance) உட்பட ரூ.1000 ஊதியமாக வழங்கப்படும். 

 

இந்த 'லியோ' திரைப்படத்தில் 1,400 உறுப்பினர்கள் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள 'ஆதி ஸ்ரீராம்' ஸ்டுடியோசில் கடந்த ஜீன் மாதம் 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750/- வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

 

இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குபடுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது. தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததைக் கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் தலா ரூ.10,500/- வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.