Skip to main content

"கமலால் கூட நடிக்க முடியாது" - பாரதிராஜா திட்டவட்டம்

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

Even Kamal can't act  Bharathiraja speech at sivaji book release function

 

தமிழ் சினிமாவின் பிதாமகனாகப் போற்றப்பட்ட மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் குறித்து மருது மோகன் என்றவர் 'சிவாஜி கணேசன்' என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(18.12.2022) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா  'சிவாஜி கணேசன்' புத்தகத்தை வெளியிட, சிவாஜி கணேசனின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

 

நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, "என் இனிய தமிழ் மக்களே... இந்த உச்சரிப்பைக் கூட சொல்லிக் கொடுத்தவர் என்னுடைய தலைவர் சிவாஜி. நடிகர் திலகம் இல்லையென்றால், ஒரு வசனத்தையோ வார்த்தையையோ எப்படி ஏற்ற வேண்டும் இறக்க வேண்டும் என்பது தெரியாது. அவர்தான் அதைக் கற்றுக் கொடுத்தவர். பாரதிராஜா பேசுகிறான் என்று சொன்னால். அது சிவாஜி போட்ட பிச்சை.  

 

அவரோடு இருந்த அனுபவங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. சாதாரண முயற்சி இல்லை இந்தப் புத்தகம். உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் வீடுகளிலும் இந்தப் புத்தகம் இருக்க வேண்டும். உலக மகா மிகப் பெரிய நடிகன். தமிழ்நாட்டுடைய சொத்து. அவருக்கான சரியான மரியாதையைக் கொடுக்கவில்லை. கடைசி நேரத்தில் ஏதோ கொஞ்சம் கொடுத்தாங்க. ஆனால் சரியான மரியாதையை யாரும் செய்யவில்லை. அந்த அரசும் செய்யவில்லை. 

 

நான் அரசியல்வாதி கிடையாது. முன்னாடி ஒருநாள் சொன்னேன். எதுக்குனே உங்களுக்கு அரசியல். நீங்க இந்த நாட்டோட பொது சொத்து. அண்ணாந்து மேலே பார்த்தால் சூரியன் தெரிகிறது. நிலா தெரிகிறது. அதேபோல் தொட முடியாத இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். எதுக்கு நீங்க தரையில் நடந்துகிட்டு என்று சொன்னேன். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட எந்த விருதும் அவருக்குப் பத்தாது. அவருக்கு ஈடு இணையாக ஒரு பட்டமும் இல்லை. இனிமேல் அவருக்கு பட்டம் கொடுக்கணும் என்று சொன்னால் சிவாஜி என்றுதான் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அற்புதமான கலைஞருடன் நான் இருந்தது மனதுக்கு பெரும் மகிழ்ச்சி. 

 

நாங்கள் எல்லாம் பாராட்டப்படுகிறோம் என்றால் உழைச்சி கடமைப்பட்டவர்கள். இந்த மண்ணுக்கு கடமைப்பட்டவர்கள். தமிழ்நாட்டிற்கு கடமைப்பட்டவர்கள். உலகம் முழுவதும் நம்மளை அடையாளம் காட்டியது இந்த மண்ணும் மொழியும். இன்னும் பத்து ஜென்மம் இருந்தாலும் சினிமா கலைஞனாகவே பிறக்க வேண்டும். நடிகர் திலகம் என்ன கல்லூரியில் படிச்சாரா... அவருக்கு யாராவது கற்றுக்கொடுத்தார்களா அந்த நவரசத்தை கடவுள் கொடுத்தார். எந்த நவரசத்தை எங்கே தொட்டால் பிரதிபலிக்கும் என்பதைக் கண்டுபிடித்தவர் சிவாஜி. அவர் குழந்தை போல. அம்மா சத்தியமா ஒரு சூதும் அவருக்கு வராது. நடிப்பை தவிர ஒண்ணும் வராது. 

 

சிவாஜியின் சத்தம் கேட்டு, அவரது வசன உச்சரிப்பை பார்த்து, நடிப்பை பார்த்து சென்னைக்கு வந்தவன் நான். நான் தின்னுகிற சோறு நீ போடுகின்ற சோறு. நீ இல்லைனா நான் சினிமாவுல இல்லை. உன்னை கடந்து எந்த நடிகனும் நடிக்க முடியாது. வருகின்ற காலத்திலும் சரி. இருக்கின்ற காலத்திலும் சரி. கமலஹாசனாக இருக்கட்டும் எந்த நடிகராக இருந்தாலும் சரி, உன்னுடைய பதிவு இல்லாமல் பாதிப்பு இல்லாமல் யாரும் இருக்க முடியாது. நான் இங்கே பேசுகிற ஏற்ற இறக்க உச்சரிப்பு கூட நீங்க கற்றுக் கொடுத்ததுதான். சிவாஜி சரஸ்வதியின் புதல்வன். இளையராஜாவும் சரஸ்வதியின் புதல்வன்." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்'-பவதாரிணி மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
'How can I console my friend' - Bharathiraja's condolence on Bhavatharini's passed away

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) இலங்கையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி.

தொடர்ந்து பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் மூலம் பிரபலமானவர். அந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அப்பா இளையராஜா ஆகியோர் இசையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தனித்துவமான குரலில் பாடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர். இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் வந்த ஹிட் பாடல்களாகும்.

பாடல்கள் மட்டுமல்லாது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார் பவதாரிணி. சனிக்கிழமை நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் இலங்கை சென்றிருந்தவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துயர சம்பவம் தமிழ் திரையுலத்தினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் குறிப்பில், 'என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

“எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது” - பாரதிராஜா இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
bharathiraja about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “சில நேரங்களில் சில விஷயங்கள் சந்தோஷமாக பகிர்ந்துகொள்ள இருக்கும். சில விஷயங்கள் வருத்ததுடன் பகிர வேண்டிருக்கும். இயற்கை மனிதனை கொண்டு செல்வது நியாயம் தான். பிரயோஜனமான சில மனிதர்களை கொண்டு செல்வது கஷ்டம். என் நண்பன், சிறந்த நடிகன், சிறந்த மனிதாபிமானி. பல நாட்களாக எந்த வித அசைவும் இல்லாமல் இருந்த போதே தமிழ்நாடு முழுவதும் வருத்தப்பட்டது. எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது. இருந்தாலும் அவர் வீட்டிற்கு சென்று சாப்பிடாதவர்கள் கிடையாது. அவரை நேசிக்காதவர்கள் கிடையாது. இவ்வளவு சீக்கிரமாக கடவுள் அழைத்து கொள்வார் என நினைக்கவில்லை. நல்ல கலைஞன், நல்ல ஃபைட்டர். சினிமாவில் அள்ளிக் கொடுத்தவன் விஜயகாந்த். அவரோடு பழகி பார்ப்பவர்களுக்கு தான் தெரியும், அவர் எவ்ளோ பெரிய மனிதர் என்று. விஜயகாந்த்தின் மறைவு தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு பெரிய இழப்பு. என்னுடைய உடல்நிலை சரியில்லாததால் போகமுடியவில்லை. கவலையளிக்கிறது. விஜயகாந்த் வெற்றி கொடி நாட்டியவன்” என்றார்.