Skip to main content

“இந்த கவுரவம் மகத்தானது” - சூர்யாவிற்கு எம்.எல்.ஏ பாராட்டு

Published on 29/06/2022 | Edited on 30/06/2022

 

dmk mla Selvaperunthagai praised surya oscars academy membership

 

உலகளவில் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான 94-வது ஆஸ்கர் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் வில் ஸ்மித்தின் நடவடிக்கை பெரும் பேசும் பொருளாக மாறி, பின்பு வில் ஸ்மித் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பின் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இது அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 

 

இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பில் சேர உலகளவில் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில்  இந்தியாவிலிருந்து சூர்யா, பாலிவுட் நடிகை கஜோல், இந்தி இயக்குநர் ரீமா காட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சூர்யாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பல திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

அந்தவகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையும் சூர்யாவைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர். இந்த கவுரவம் மகத்தானது. நடிகர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜூம்லா நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை” - செல்வப்பெருந்தகை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
TN Congress leader Selvaperunthagai has slammed BJP election manifesto

டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் அமல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. அரங்கேற்றியிருக்கிறது. 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றைப் பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும். தற்போது நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும். ஏற்கெனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியைப் பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது.

வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது. மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்கத் தகுதியில்லை.

எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.

கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“நதிநீர் பிரச்சனையில் காங்கிரஸ் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும்” - செல்வப்பெருந்தகை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Congress will support TN govt in river water problem says Selvaperunthagai

தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. பின்னர் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை சர்தார் வேதாரத்தினம் பிள்ளையின் பேரன், வேதரத்தினப் பிள்ளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஆறுமுகம், தண்டியாத்திரை குழு தலைவர் சக்தி செல்வ கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு தலைவர்கள்  சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எல்.ரெக்ஸ், திருச்சி கலை, மாநிலத் துணைத் தலைவர் சுப.சோமு, மாநில பொதுச் செயலாளர்கள், வக்கீல்கள் சரவணன், இளங்கோ, தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு சரியான பாதுகாப்பு இந்த பாஜக ஆட்சியில் இல்லை.  இதுதான் பத்தாண்டு காலம் பாஜகவின் லட்சனமாகும். உப்பு சத்தியாகிரகத்தைப் பற்றி பிரதமர் மோடி, அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களைப் பற்றி மோடியும், தமிழக பாஜக தலைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்தப் பார்க்கிறது. இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் இன துரோகி தமிழக பாஜக தலைவர்தான். கர்நாடக எம்.பி தமிழர்களை பற்றி பேசும் பொழுது அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்? தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ  அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும், காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு, காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்தப் பாராளுமன்றத் தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும்”என்றார்.