Skip to main content

“மிரட்டுவதை விட இரக்கம் காட்டுங்கள்...” -திவ்யா ஸ்பந்தனா காட்டம்!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020
divya spandana

 

 

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்த சுசாந்த் சிங்கின் மரணத்திற்கு பின்பு நடிகை கங்கனா ரணாவத் பாலிவுட்டை சேர்ந்த பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து வந்தார். இதனை தொடர்ந்து பாலிவுட்டை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்று சர்ச்சையை கிளப்பினார்.

 

இதனை தொடர்ந்து கங்கனாவின் பதிவுகளுக்கு பல பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை திவ்யா ஸ்பந்தனா இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.

 

அதில், “கங்கனா, போதை மருந்து பழக்கத்தை ஒழிக்க நிஜமாகவே எதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், போதை மருந்துக்கு எதிரான போராளியாக மாறுங்கள்.

 

ஒரு வீடியோவில் நீங்கள் போதைமருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக சொல்லியிருந்தீர்கள், நீங்கள் தைரியம் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் பற்றி, எப்படி அதிலிருந்து மீண்டீர்கள் என்பது பற்றி, ஏன் போதை மருந்துகள் தவறு என்பதை பற்றி பேசுங்கள், சஞ்ஜய் தத் அதைச் செய்துள்ளார்.

 

நிஜமாகவே ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டுமென்றால் உங்கள் சக நடிகை தீபிகா படுகோனைப் போல் இருங்கள். அவர் மனநலம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மன அழுத்தம் குறித்த அவரது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார். அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

நீங்கள் பேசி வரும் விதத்தை பார்க்கும்போது உங்கள் நோக்கம் தவறாக இருப்பதாக தெரிகிறது. பெயரைச் சொல்லி வெளிப்படுத்துவேன் என்று மிரட்டுவதை விட இரக்கம் காட்டுங்கள், அவர்களுக்கு ஆலோசனை கொடுங்கள்.

 

உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒரு மறுவாழ்வு மையத்தை ஆரம்பியுங்கள். போதை மருந்து பழக்கம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையின் அழகும், இன்பமும் தெரிவதில்லை. நீங்கள் ஒரு ஆன்மிகவாதி, உங்களுக்கு இது தெரிந்திருக்கும்.

 

அவர்களை வெளிப்படுத்துவதே சிறந்தது என்று நினைத்தால், அதை செய்யுங்கள். காவல்துறையிடம் செல்லுங்கள். அவர்களிடம் ஆதாரத்தை கொடுங்கள். அவர்களின் வேலையை அவர்கள் செய்யட்டும்.

 

இந்த தீய செயல்களைத் தடுக்க போதை மருந்து தடுப்பு பிரிவினருக்கு அது பெரிதும் உதவும். நீங்கள் எதை செய்தாலும் நல்ல நோக்கத்தோடு செய்யுங்கள், வஞ்சத்தோடு அல்ல. கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் நம்மிடமிருந்து தான் துவங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"தற்கொலை செய்யவும் நினைத்தேன்; ராகுல் காந்தி தான் உதவினார்" - எமோஷனலான நடிகை

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

divya spandana about rahul gandhi

 

சிம்புவின் 'குத்து', தனுஷின் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகை ரம்யா. திவ்யா ஸ்பந்தனா என்ற பெயர் கொண்ட இவர் திரையில் ரம்யா என்ற பெயரை பயன்படுத்தி பின்னர் தனது பெயரிலேயே நடித்து வந்தார். நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் ரம்யா 2013 ஆம் ஆண்டு மண்டியா மக்களவை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

 

பிறகு அரசியலில் அதிக கவனம் செலுத்தி வந்த ரம்யா 2016க்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ரோஹித் பதகியின் 'உத்தரகாண்டா' என்ற கன்னடம் படம் மூலம் மீண்டும் திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் ரம்யா. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திவ்யா ஸ்பந்தனா, அவர் எம்.பி ஆனது குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "எனது தந்தையை இழந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் நுழைந்தேன். பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அங்கு யாரையும் தெரியாது. ஆனால், நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். நான் என் வருத்தத்தை என் வேலையை நோக்கி செலுத்தினேன். அந்த நம்பிக்கையை எனக்கு கொடுத்தது மண்டியா மக்கள்தான்.

 

என் வாழ்வில் முதல் வழிகாட்டி என் அம்மா. இரண்டாவது என் தந்தை. அடுத்து மூன்றாவதாக ராகுல் காந்தி தான். நான் என் தந்தையை இழந்தபோது, ​​​​நான் பெரும் துயரத்தில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளவும் நினைத்தேன். போட்டியிட்ட தேர்தலிலும் தோற்றேன். அது மிக மோசமான காலகட்டம். அந்த நேரத்தில் ராகுல் காந்தி தான் எனக்கு பெரிதும் உதவினார்" என எமோஷனலாக பேசினார். 

 

 

Next Story

'மக்கள் என்ன வருவாய் உருவாக்கும் இயந்திரங்களா?'-மருத்துவர் சர்மிகாவிற்கு ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் கண்டனம்

Published on 16/01/2023 | Edited on 17/01/2023

 

people revenue generating machines?'-Nutritionist Divya Sathyaraj slams Dr Sarmika

 

சமீபத்தில் சித்த மருத்துவர் சர்மிகா தெரிவித்திருந்த கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சர்மிகாவின் கருத்துக்களுக்கு ஊட்டச்சத்து நிபுணரும், நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளதாவது, ''ஒரு ஊட்டச்சத்து நிபுணராக மருத்துவர் சர்மிகாவிற்கு என்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். அபத்தமான விஷயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் சொல்வதற்கு அறிவியல்பூர்வமான எந்தவித நம்பகத்தன்மையையும் இல்லை. எடுத்துக்காட்டாக குலோப் ஜாமுன் சாப்பிட்டால் ஹெல்தியாக உடல் எடையை அதிகரிக்கலாம் என சொல்லியுள்ளார். நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெரிதாகும் என்பதைப் போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் வீடியோவில் வெளியிட்ட இதுபோன்ற கருத்துக்களுக்கு அறிவியல்பூர்வமான நம்பகத்தன்மை இல்லை என்று கேள்விகேட்டால் அதற்கு அவர் 'ஒரு ஃப்ளோவில் சொல்லிவிட்டேன்' என்று சொல்கிறார். ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் அவர் இப்படி பேசக்கூடாது. அழகு நிலையத்தில் ஒரு தவறு நேரலாம், ஆனால் ஒரு மருத்துவமனையை நடத்தும் மருத்துவர் 'சாரி நான் ஒரு ஃப்ளோவில் மருந்தை எழுதி விட்டேன், ஒரு மருத்துவக்  குறிப்பை சொல்லிவிட்டேன்' என சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மக்களுடைய ஆரோக்கியத்தில் அவ்வளவு அலட்சியமாக இருக்கக் கூடாது அல்லவா.

 

அவர்களுடைய டெய்சி மருத்துவமனையையும், சித்தா மருந்துகளையும் ப்ரொமோட் செய்வதற்காக மக்களை வருவாய் உருவாக்கும் இயந்திரங்களாக பயன்படுத்தி இருக்கக் கூடாது. சில சித்தா, ஹோமியோபதி மருந்துகளில் ஸ்டீராய்டு கலக்கிறார்கள். அதனால் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் சித்தா, ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். ஒரு நல்ல மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளாக இருக்கட்டும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் சாப்பிடுகின்ற மருந்துகள் நல்ல மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளாக இருக்க வேண்டும். மற்றவை எல்லாம் உடல் நலத்திற்கு மிகவும் ஆபத்தானது. அவர் அவருடைய மருத்துவமனையையும், அவரது சித்தா மருந்துகளையும் விளம்பரப்படுத்துவதற்கு தவறான மருந்துகளை சொல்லிவிட்டு பிறகு தவறாகச் சொல்லிவிட்டேன் என சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல'' என தெரிவித்துள்ளார்.