Skip to main content

கல்வி நிலையங்களை மதங்கள் ஜாதிகளின் பெயரால் உருவாக்கியது சரியா? இயக்குனர் சீனு ராமசாமி கேள்வி 

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

director seenu ramasamy tweet about hijab issuse

 

கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன.

 

இதன் தொடர்ச்சியாக கல்லூரிகளில் காவி துண்டை அணிந்து ஹிஜாப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பும், ஹிஜாப்பிற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தச்சூழலில் கல்லூரி ஒன்றில் காவி துண்டு அணிந்தவர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட, மற்றொரு தரப்பு ‘ஜெய் பீம்’ என முழக்கமிடும் காணொளி வெளியானது. 

 

அதன்தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி ‘அல்லாஹு அக்பர்’  என கோஷமிடுவது, சிவமொக்காவில் கல்லூரி ஒன்றில் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது. ஹிஜாப் அணிந்த மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் சீனு ராமசாமி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா மதச்சார்பற்ற நாடா? அல்லது மதசகிப்பு தன்மை கொண்ட நாடா? இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்கிறது? முதலில் கல்வி நிறுவனங்கள் யாவும் மதங்கள் ஜாதிகளின் பெயரால் உருவாக்கியது சரியா? காலை பள்ளி அசெம்பிளியில் தேசிய கீதம் & தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் ஒலிக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து, "உனது உடை, உனது மொழி, உனது கடவுள், உனது உரிமை, உனது இந்தியா, நம் தாய்நாடு ஜெய் ஹிந்து" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்