‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்துக்குப் பிறகு கார்த்திக் யோகி இயக்கியுள்ள 'டிக்கிலோனா' படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், கலை இயக்குநராக ராஜேஷ், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப், ஆடை வடிவமைப்பாளராக கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ள இப்பட வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (18.08.2021) மாலை 5 மணிக்கு 'டிக்கிலோனா' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. நடிகர்கள் பலரும் இந்தக் கரோனா காலகட்டத்தில் வேறு வழியின்றி தங்கள் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்துவரும் சூழலில், நடிகர் சந்தனம் மட்டும் இதில் விதிவிலக்காக ‘பிஸ்கோத்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ என தன் படங்களைக் கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் தியேட்டர்களில் வெளியிட்டுவந்தார். ஆனால் தற்போது அவரும் இந்த நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் தன்னுடைய அடுத்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வது குறிப்பிடத்தக்கது.