Skip to main content

“அங்கிள்... உங்களை நாங்கள் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம்...”- வருத்தப்பட்ட தனுஷ்

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்யப்போவதாக வெளியான தகவலை அடுத்து இயக்குனர் விசு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 

dhanush

 

 

அதில், “ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அதில் அந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியிருப்பதாகவும் மேனகா நடித்த கதாபாத்திரத்தில் அவரது மகள் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் எனக்கு வந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார். 

மேலும் அந்த வீடியோவில், தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்றார். இதன்பின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம், நாங்கள் யாருக்கும் நெற்றிக்கண் படத்தின் ரீமேக் உரிமைத்தை விற்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டது. 

அதனை தொடர்ந்து விசு புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் தனுஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடர்புக்கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். அதில், “என்னுடைய பேட்டி வெளியான 2 நாட்களுக்குப் பின் தனுஷ், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ‘அங்கிள்.. உங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியாது. எங்களது இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஏனென்றால் எங்க அப்பா 1982ல் இருந்து உங்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். பல படங்களில் வேலை செய்திருக்கிறார்’ என்று பேசினார்.

பின்பு  ‘அங்கிள்... உங்களுக்கு வந்த செய்தி உண்மையான செய்தி அல்ல. பத்திரிகை நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால், அது எந்தப் படம் என்று கேட்டார். அதற்கு 'நெற்றிக்கண்' என்று பதிலளித்தேன். அது எனக்கு ரொம்பப் பிடித்த படம்’ என்று சொன்னேன். அவ்வளவுதான்.

நான் அந்தப் படத்தின் உரிமையை யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதற்கட்டப் பணிகளையும் தொடங்கவில்லை. வந்தது தவறான தகவல்’ என்று சொன்னார். முன்னதாக கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும் தொலைபேசி வாயிலாக கீர்த்தி சுரேஷை 'நெற்றிக்கண்' ரீமேக்கில் நடிக்க யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்” என்று கூறியிருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“முதன் முதலில் கலைஞர் என்னை பார்த்து இவ்வாறு அழைத்தபோது ஆச்சரியமாக இருந்தது”- நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
actor Dhanush says  It was a surprise when the artist called me this for the first time

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது. 

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், “கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமே இல்லை. ஒரு படத்தின் பூஜையின் போது நான் முதல் முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கே வந்திருந்த கலைஞர் என்னை பார்த்து ‘வாங்க மன்மத ராஜா’ என்று கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா? என ஆச்சரியமாக இருந்தது. அதை பார்த்து நான் நெகிழ்ச்சி அடைந்தேன். 

ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்து விட்டார்கள் என்பதை நம்ப முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன். யாராவது சொன்னால் தான் அவர் மறைந்து விட்டார் என்று நினைவுக்கு வரும். இப்பவும் அவர் நம் கூட வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் எனக்கு தோன்றுகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் சொல்லிருப்பார். ஆனால், நம்முடைய கலைஞர் 2000ல் ‘நான் என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டும்’ என்று சொன்னார். நாமாக வாழ்வோம் நலமாக வாழ்வோம்” என்று பேசினார்.