தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து 2 திரைப்படங்களை தயாரிக்க 97 கோடி ருபாய் கடன் வாங்கியிருந்தார். பின்பு வங்கிக்கு தகவல் தெரிவிக்காமலே அந்த 2 படங்களை தயாரித்துள்ளதாகவும் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை அவருக்கு வந்துள்ளது. பிறகு வங்கி நிர்வாகம் கடனை திருப்பி தராதது தொடர்பாக கடனுக்காக அடமானம் வைத்த சொத்தை ஏலம் விட முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது.
பின்பு ஆஸ்கர் ரவிச்சந்திரன், வங்கியின் அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால நிவாரணம் பெற்றார். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 24ம் தேதி ஏலம் குறித்து வங்கி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடர்ந்தார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு பலமுறை வாய்ப்பு கொடுத்தும் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. மேலும் உயர்நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்திகிறார் என்று வாதிட்டார். இதனையடுத்து நீதிபதிகள், இந்த ஏலம் தேதி ஏற்கனவே முடிந்து விட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுதாரர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார். எனவே அவருக்கு 1 லட்சம் ருபாய் அபராதம் விதிக்கிறோம் என உத்தரவிட்டுள்ளார்.