Skip to main content

செக்கசிவந்த வானம் சிம்புவ வேறலெவெல்க்கு கொண்டு போகும்

சார்ந்த செய்திகள்

Next Story

படித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு! 5 நிமிட எனர்ஜி கதை

Published on 06/01/2019 | Edited on 23/05/2019

ஒன்பது வயது, எந்த விவரமும் முழுதாக அறியவில்லை, பள்ளிக்கு செல்வதும் மாலை நேரத்தில் தந்தையின் ஸ்டுடியோவுக்கு சென்று உதவியாக இருப்பது,  இசை கற்றுக் கொள்வதும் தான் அந்தச் சிறுவனின் வேலை. திடீரென தந்தை இறந்துவிடுகிறார். என்ன நோயால் இறந்தார் என்பது கூட அந்தச் சிறுவனுக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரிந்தது. இனி அந்தக் குடும்பத்துக்கு அவனது உழைப்பும் மிகவும் தேவை என்பதுதான் அது. 

 

a.r.rahmanyoung a.r.rahman


ஆயிரம் முறை கேட்ட கதைதான், ஏ.ஆர்.ரஹ்மானுடையது. ஆனாலும் அதிலிருந்து எடுத்துக் கொள்ள புதிது புதிதாக விஷயங்கள் இருக்கின்றன. தந்தை ஆர்.கே.சேகர் விட்டுச் சென்றது சில இசைக் கருவிகள் மட்டும்தான். அவற்றை வாடகைக்கு விட்டுத்தான் அந்தக் குடும்பத்தின் பிழைப்பு. காலையில் பள்ளி, மாலையில் இசைக் கருவிகளை பிற ஸ்டுடியோக்களுக்குக் கொண்டு செல்வது, வாங்கி வருவது என அந்தச் சிறுவனின் பள்ளி கால வாழ்க்கை இப்படித்தான் சென்றது. விளையாட்டு, பொழுதுபோக்கு எதுவுமில்லை. இசைக் கருவிகள் மூலம் வாடகை கிடைக்கிறது, சரி. இதை நாமே வாசித்தால் இன்னும் அதிகமாகப் பணம் கிடைக்குமே என்ற எண்ணத்திலும் தாயின் ஊக்கத்திலும் கொஞ்ச நாட்களில் கீ-போர்ட் வாசிக்கத் தொடங்கி பிற இசையமைப்பாளர்களுக்கு வாசிக்கிறான். அதன் பின்னர் அடுத்த கட்டம், ஒரு ஸ்டுடியோவை சொந்தமாகக் கட்டியது. 'பஞ்சதன்' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஸ்டுடியோவை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமே என்று தானே இசையமைக்கத் தொடங்கி, பல விளம்பரங்களுக்கு இசையமைக்கிறான். 

 

a.r.rahman with mother


அவர் பணியாற்றிய ஒரு விளம்பரமான 'லியோ' காபி விளம்பர இசை மிகப் பிரபலம். அந்த இசைக்கு விருது வழங்கப்பட்டதற்கான விழாவில் இயக்குனர் மணிரத்னத்தை சந்திக்கிறார். இருவருக்கும் உண்டாகும் நட்பு, இணைந்து பணிபுரிய வழி வகுக்கிறது. 'ரோஜா' வெளியாகி தேசிய விருது, புகழ், வந்தே மாதரம், பாம்பே ட்ரீம்ஸ், ஜெய் ஹோ, ஆஸ்கர், 'ஒன் ஹார்ட்',  2.0 என அனைத்தும் நாம் அறிந்தவைதான். ஆனால், அந்த நிகழ்வுகள் நமக்களிக்கும் பாடங்கள், எனர்ஜி, எப்பொழுதும் புதிது. ஒன்பது வயதில் தந்தையை இழந்து, குடும்பத்துக்காக இசைக் கருவிகளைத் தூக்கிச் சுமந்து, பதினோராம் வகுப்பிலேயே படிப்பை விட்டு தன் முயற்சியால் வளர்ந்த அவரின் இசை இன்று உலகமெங்கும் ஒலிக்கிறது, பிரெஞ்சு விளம்பரத்தில் இவர் இசை ஒலித்துள்ளது, கனடா நாட்டில் ஆண்டரியோவில் ஒரு தெருவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

திறன், ஆற்றல், அறிவு அனைவருக்கும் உள்ளதுதான் அல்லது உழைப்பால் வளர்த்துக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், இவை அனைத்தும் உள்ள அனைவரும் உயரங்களை அடைவதில்லை. எது இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது?


ரஹ்மான், பதினோராம் வகுப்போடு கல்வியை முடித்துக் கொண்டாலும், அவரது அறிவுத் தேடல் இன்று வரை தொடர்கிறது. அந்தக் காலத்திலேயே கம்ப்யூட்டர்களைப் பற்றி தேடித் தேடிப் படித்துத் தெரிந்து கொண்டு பயன்படுத்தினார். தான் விளம்பரத்துக்கு இசையமைத்த காலத்தில், பெரும்பாலும் விளம்பரங்களுக்கான இசை பம்பாயில் உருவாக்கப்படும். இயக்குனர்களுக்கு கொஞ்சம் திருப்தியாக இல்லையென்றாலும் உடனே, 'நாங்க பம்பாயில் பாத்துக்குறோம்' என்று கூறிக் கிளம்பிவிடுவார்களாம். அந்த நிலை வரக்கூடாது என்று தேடிக் கற்று தன் தரத்தை உயர்த்தியவர் ரஹ்மான். இந்திய சினிமா இசையின் ஒலி தரத்தை ரஹ்மானுக்கு முன், பின் என்று கூட பிரிக்கலாம். அந்த அளவுக்கு தன் தொழில்நுட்ப தேடலாலும் அறிவாலும் ஒலி தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வந்தார். சூழ்நிலை நமக்கு வெளியே தடைகளைப் போடுமே தவிர உள்ளே இருக்கும் ஆசையை, ஆற்றலை தடுக்க முடியாது என்று நிரூபித்து வாழ்ந்தவர் ரஹ்மான். "நாம் நன்றாக இருக்கிறது" என்று நம்புவதை மறுத்து புதிதான ஒன்றை மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அதில் ஏதோ நல்லது இருக்கிறது என்று பொருள். அதை வெறுக்கக் கூடாது, புரிந்து கொண்டு நாமும் அதை ரசிக்க முடிந்தால் தான் புதுமைகளோடு பயணிக்க முடியும்" என்று கூறி இன்றும் தன் இசையை தொடர்ந்து புதிதாகவே வைத்திருப்பவர்.         

 

 

arr, manirathnam, vairamuthu


ரஹ்மான் என்றாலே அனைவரும் அறிந்தது அவரது தன்னடக்கமும் கடவுள் பக்தியும் தான். இந்தத் தன்னடக்கம், ஊடக ஒளி பட்டு, அதில் ஒரு நல்ல பிம்பத்தை உருவாக்கிக் கொள்வதற்காக வந்த போலி தன்னடக்கமல்ல. ரோஜா படத்துக்கு தேசிய விருது பெற்ற பின், எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே தன் இசைக்கும் இந்தப் புகழுக்கும் இறைவன் தான் காரணம் என்று கூறியிருந்தார் ரஹ்மான். யார் யாரோ செய்ததையெல்லாம் கூட தனதென க்ரெடிட்ஸ் எடுத்துக் கொள்ளும் காலத்தில், துறையில் தன் வேலைக்கே கடவுளுக்குக் க்ரெடிட்ஸ் கொடுத்தவர் இவர். தான் ஆஸ்கர் விருது பெற்ற மேடையிலும் இதையே ஒலித்தார். அதுவரை தமிழ் படங்களின் பாடல் காசெட்டுகளில் இசையமைப்பாளர் பெயர் மட்டுமே இடம்பெறும். ரஹ்மான் தான் முதன் முதலில் இசைக் கலைஞர்கள், சவுண்ட் என்ஜினீயர்கள் பெயர்களையெல்லாம் போடச் செய்தார். அவர்களின் பங்கும் தன் இசைக்கு மிக முக்கியம் என்பதை உலகுக்குத் தெரிவித்தார், எந்தத் தயக்கமுமின்றி.

 

 

arr


ரஹ்மானுடன் ஆரம்பத்தில் பணியாற்றிய நண்பர் பகிர்ந்திருந்தார். ஒரு முறை இரவெல்லாம் விழித்து, உழைத்து ஒரு படத்துக்காகப் போட்டு வைத்த அனைத்து அருமையான ட்யூன்களும் எதிர்பாராமல் ஏற்பட்ட கோளாறால் அழிந்துவிட்டனவாம். இது ரஹ்மானுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ, ஏதாகுமோ, தொடர்ந்து பணியாற்ற முடியுமோ என்று பல கேள்விகள் அவரை அலைக்கழிக்க, பயந்து இருந்தார். ரஹ்மான் வந்து, அவருக்கு விஷயம் தெரிய, சிறிய அதிர்வடைந்தவர் உடனே, 'சரி விடு, திரும்ப உக்கார்ந்து பண்ணிடலாம்' என்று வேலையைத் தொடங்கிவிட்டாராம். 'அழிஞ்சிருச்சு, கோபத்தால அதைத் திரும்பக் கொண்டு வர முடியாதெனும் பொழுது எதுக்குக் கோபப்படணும்?' என்று கேட்டாராம். நாமும் நம்மை கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி தான் இது.                                   

ஒன்பது வயதில் குடும்பப் பொறுப்பு, பதினோராம் வகுப்போடு படிப்புத் துறப்பு என வாழ்ந்த ஒரு சிறுவன் இன்று பாப்டா, கோல்டன் க்ளோப், ஆஸ்கர், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெறும் அளவுக்கு உயர இந்த மூன்று வித்தியாசங்கள்தான் காரணம். நாமும் வித்தியாசப்படலாம்.      

 

 

Next Story

"எனக்கு மோகன் மாதிரி மாப்பிள்ளை வேண்டும்" - 80களின் பெண்களை பித்துப் பிடிக்கவைத்தவர்! 

Published on 10/05/2018 | Edited on 03/12/2020

 

actor mohan

 

'மைக்' மோகன், தமிழ் சினிமாவில் 80களில் ரஜினி, கமல் என்ற இரண்டு துருவங்களைத் தாண்டி தமிழ் மக்களின் கண்களில் பட்ட நாயகன். வெள்ளி விழாக்களை சில ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்தார் என்று கூட சொல்லலாம். நடித்த படங்களில் தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் மிகப்பெரிய வெற்றிப்படங்கள்தான். 

 

மோகன், கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவரை திரையில் முதலில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவரது இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1977ஆம் ஆண்டு வெளியான 'கோகிலா' என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன். அதன் பின் தமிழில் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய, மோகன் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். அதனைத் தொடர்ந்து வெளியான 'கிளிஞ்சல்கள்' 250 நாட்களுக்கு மேல் ஓடியது. வெற்றிக்காத்து பலமாக வீச பயணங்கள் முடிவதில்லை, உதய கீதம், கோபுரங்கள் சாய்வதில்லை, விதி ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்தன. இவரது படங்களில் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. பட்டி தொட்டியெங்கும் ஹிட் என்பது இவர் காலத்தில் உருவானதே. அந்தக் காலத்தில், காதல் தோல்வியடைந்தவர்களுக்கு இவரது பாடல்களும், டி.ஆர் பட பாடல்களும் பெரும் வரமாக இருந்தன.  



 

mike mohan

 

'மைக்' மோகன் என்று இவருக்கு பெயர் வர காரணம், இவர் நடித்த படங்களில் மைக் வைத்துக்கொண்டு பாடல் காட்சிகளில் பாடுவார். பெரும்பாலும் பாடகராகத்தான் நடித்தார். அது ஒரு சென்டிமெண்ட்டாகக் கூட கருதப்பட்டது. இவர் நடித்த முக்கால்வாசிப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார். மோகன், பாலு மகேந்திரா தன்னை அறிமுகம் செய்ததால் அவரை தனது  மானசீக குருவாக கருதினார். 1984ஆம் ஆண்டு, ஒரு நடிகருக்கு இவ்வளவு திரைப்படம் வருமா என்று ஆச்சரியம் அடையும் அளவிற்கு மோகனுக்கு 19 படங்கள் வெளியாகின. அதில் அவர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்த நூறாவது நாளும் ஒன்று.

 

இவரின் நடிப்பைக் கண்டு அந்தக் கால பெண்கள் இவருக்கு தீவிர ரசிகைகளாக இருந்தனர். இவர் தேர்ந்தெடுக்கும் கதையெல்லாம் காதல் மற்றும் குடும்பம் சார்ந்ததாகவே இருக்கும். 1986ஆம் ஆண்டு ஒன்பது படங்களில் மோகன் நடித்தார் அதில் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஒன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'மௌன ராகம்', இன்னொன்று, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான 'மெல்லத்திறந்தது கதவு' திரைப்படம். இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்தப் படத்துக்கு இளையராஜா, எம்.எஸ்.வி என்று இரு இசை ஜாம்பவான்களும் இசையமைத்தனர்.

 

மோகனின் நடிப்பையும், நிஜ வாழ்வில் அவர் நடத்தையையும் கண்டு பல நடிகைகளின் அம்மாக்கள் தங்கள் மகளை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார்களாம். தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் பெண்கள், தங்களுக்கு மோகன் போன்ற மாப்பிள்ளை வேண்டுமென்றும், ஆண்கள், மோகன் போன்ற தோற்றத்தையும் அவரது உடை பாணியையும் பின்பற்ற முயன்று வந்தனர். தனது படங்களிலெல்லாம் பாடகராகவே தோன்றிய மோகனுக்கு, படங்களில் வெளிப்பட்ட குரல் அவரது குரல் இல்லை. இவருக்கு அனைத்து படங்களுக்கும் நடிகர் விஜயின் மாமாவும் பாடகருமான எஸ்.என்.சுரேந்தர் குரல்கொடுத்துள்ளார், பெரும்பாலான பாடல்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் வந்தன.

 

மோகன், 'பாசப்பறவைகள்' படத்தில் தனது குரலில் பேசியது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் என்று ஐவர் உள்ளனர். ரஜினிகாந்த், மோகன், முரளி, பிரகாஷ்ராஜ், அர்ஜுன் இதில் ரஜினிக்கு பிறகு மோகனுக்குதான் அடுத்த இடமளிக்கலாம். அந்த அளவிற்கு வெற்றியை 80களில் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்திற்குப் பிறகு இவரால் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியவில்லை, சரியான படங்கள் அமையவில்லை. இவரது வாழ்வின் இன்னொரு டிராஜடியாக, இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என்ற வதந்தி 90களின் இறுதியில் தமிழகமெங்கும் பரவியது. அதன் பின்னர், 'அன்புள்ள காதலுக்கு' என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவுக்குத் திரும்பினார். ஆனால், அது வெற்றிகரமாக அமையவில்லை. இதுவரை கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்துள்ளார் 'மைக்' மோகன். அவர் திரையில் வரவில்லை என்றாலும் அவரின் 'நிலாவே வா', 'வா வெண்ணிலா', 'மன்றம் வந்த தென்றலுக்கு' போன்ற பாடல்கள் இன்றளவும் இரவில் பலருக்கு தாலாட்டாக உள்ளது.