Skip to main content

மதப்பகையை  தூண்டுவதாக வழக்கு -கங்கனாவிற்கு நீதிமன்றம் உத்தரவு...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020
kangana

 

 

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், வெவ்வேறு மதத்தினர் இடையே பகையை தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், நடிகை கங்கா மீதும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீஸுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பாந்த்ரா போலீஸார் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இதையடுத்து கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கங்கனா மற்றும் அவரது சகோதரிக்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், இதற்கு அவர்கள், தங்களது சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் குடும்ப திருமண வேலைகளில் இருப்பதால் தற்போதைக்கு ஆஜராக இயலாது என்று வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் பதிலளித்தனர்.அதன் பிறகு கடந்த 9, 10-ந் தேதிகளில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

 

அதன்பிறகு நடிகை கங்கனா வருகிற 23-ந் தேதியும், அவரது சகோதரி வருகிற 24-ந் தேதியும் பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று என சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இருவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில், தங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யவேண்டுமென மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், கங்கனாவும் அவரது தங்கையும் போலீசார் முன்பு ஆஜராகதத்திற்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்ததுடன், ஜனவரி 8 ஆம் தேதி   இருவரும் பாந்திரா  போலீசார் முன்பு  ஆஜராகவேண்டுமென உத்தரவிட்டது . மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை,  கங்கனா மற்றும் அவரது தங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மும்பை போலீசாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

சார்ந்த செய்திகள்