Skip to main content

பொறுத்தார் பூமி ஆள்வார்... ஸ்டாலினுக்கு கைப்பட கடிதம் எழுதிய பாக்யராஜ்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

Bhagyaraj

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வென்றதையடுத்து, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். கடந்த வெள்ளியன்று ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்து இயக்குநர் பாக்யராஜ் தன் கைப்பட வாழ்த்துக்கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

 

அக்கடிதத்தில், "மரியாதைக்குரிய தமிழக முதல்வர் உயர்திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தங்களுடன் பொறுப்பேற்கும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பணிவன்பான வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும் உங்கள் பாக்யராஜ் எழுதுவது.

 

பொறுத்தார் பூமி ஆள்வார். ஆளும் பொறுப்பு உங்களைத் தேடி வர அப்பாவின் ஆசி கனிந்துள்ளது. அதைவிட தங்களின் தன்னம்பிக்கையும் தளராத உழைப்புமே மிக மிக உன்னதமென என் மனம் நெகிழ்கிறது. தேர்தல் முடிவு வந்ததுமே சந்தித்து வாழ்த்த நினைத்தேன். ஆனால் எனக்கிருந்த நோயின் அறிகுறி, சளித்தொல்லை காரணமாக தங்களை அசௌகர்யப்படுத்த விரும்பாது தவிர்த்தேன்.

 

தற்போது அதிகாரப்பூர்வமாக தொற்று உறுதியானதால் காலதாமதமின்றி கடிதம் மூலமாகவாவது வாழ்த்துகிறேன். தமிழ் சமுதாயத்தைச் சீரமைக்கும் சிறப்பான சேவைப்பணியாற்றிய அப்பாவின் எழுத்தாணியுடன், அன்பு மகனான தாங்கள் அனைத்துத் தமிழ் தாய்மார்களின் சுமை குறைத்து கரோனா நோயாளிகளின் துயர் துடைக்கும் பொருட்டும் நிறைவான பால் வார்த்துவிட்டீர்கள் குறைவான விலையில். நெகிழ்வாக இருந்தது.

 

காவல்துறை நண்பர்கள் குறித்தும் கருணையுடன் பரிசீலித்திருக்கிறீர்கள். மகிழ்வு. எனது குடும்பத்தார், பாக்யா குடும்பத்தினர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகிறேன். நிறைவான ஆட்சி அரங்கேறி நாடு நலம் பெற அய்யாவின் அருள் உடனிருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்