Skip to main content

“தமிழர்கள் அப்படியில்லை” - பாக்கியராஜ் வருத்தம் 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Bhagyaraj about manjummel boys writers review

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கா’. சுந்தர் சி பாபு இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 29 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாக்கியராஜ், ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  

இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “சசிகலா புரடக்சன்ஸ் எனக்குத் தெரிந்தவர்கள். அதனால் அவர்கள் அழைத்தால் உடனே வந்துவிடுவேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார். அவருக்கு வாழ்த்துகள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த காலத்தில் வெளிவரும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப் பிடிக்கும். விஜய சாந்தி இதுபோல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார். பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது” என்றார். 

மேலும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து பேசிய அவர், “மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாளத்தை விட இங்குதான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது. மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது. நம்மூர் எழுத்தாளர் அதை காட்டமாக விமர்சித்துள்ளார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். அது தமிழனுடைய பண்பாடு கிடையாது. நாம் அனைவரையும் பாராட்டி தான் சொல்லுவோமே தவிர இறங்கி விமர்சனம் செய்தது கிடையாது. பெரிய எழுத்தாளர் இப்படி பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக் காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்கவில்லையே எனக் கேரள மக்கள் நினைத்துவிடக் கூடாது. தமிழர்கள் அப்படியில்லை” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“சொன்னதின் நோக்கம் இது தான்” - போலீஸ் அறிக்கைக்கு பாக்கியராஜ் தன்னிலை விளக்கம்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
k bhagyaraj explained police statement

இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 12 ஆம் தேதி நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில், “கோவை  மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் செல்லும் மக்கள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். தொடக்கத்தில் ஆற்றில் உள்ள சுழலில் மாட்டிக் கொள்வார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. உள்ளூர்க்காரர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு உடலை மீட்டுத் தருவார்.

நாளடைவில் தான் தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தன் திறமையை அவன் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. தண்ணீருக்குள் இறங்குபவர்களை பின்தொடர்ந்து, திடீரென்று காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். பிறகு இவரே வெளியில் வந்து அவர்களது உடலை மீட்டுக் கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள்..” என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

பின்பு பாக்கியராஜ் கூறிய விஷயங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என கூறியிருந்தார். மேலும் அந்த நீண்ட அறிக்கையில், வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச்செயல் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் காவல் துறை அறிக்கைக்கு பதில் தெரிவித்து பாக்கியராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “போலீஸுக்கு எப்போதுமே தப்பு நடக்கும் போது தெரியாது. அதுக்கப்புறம் தான் அவுங்க கண்டுபிடிப்பாங்க. அந்த சம்பவத்தில் போலீஸை எந்த விதத்திலும் சம்மந்தப்படுத்தவில்லை. சொன்னதின் நோக்கமே மீண்டும் இது போன்று நடந்து விடக்கூடாது என்பதற்காகத் தான். ஆனால் இதை சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவோடு தொடர்பு படுத்திவிட்டார்கள். 

அவரது கார் விபத்து ஆன பின்பு அவரது உடல் தேடப்பட்டு வந்தது.  உடலைத் தேடி கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார்கள். அந்த பரிசுத் தொகையால் இந்த செய்தி பரபரப்பாகி விட்டது. அதனால் இரண்டு சம்பவத்தையும் தொடர்புபடுத்தி அனைவரிடத்திலும் கருத்து கேட்கத் தொடங்கிவிட்டனர். அது போலீஸ் வரை போய்விட்டது. அவர்கள் வதந்தி என சொல்லிவிட்டனர். அதற்கு விளக்கம் கேட்டு என்னிடம் நிறைய பேர் கேட்கின்றனர். காவல் துறையினரின் கவனக் குறைவு, அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என எதையும் நான் சொல்லவில்லை. சொன்னதின் நோக்கமே மீண்டும் இது போன்று நடந்து விடக்கூடாது என்பது மட்டுமே. காவல் துறையை நான் சம்மந்தப்படுத்தி பேசவில்லை. ஆனால், இப்போது திருப்பி நான் விசாரித்த போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்தது" என தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

பாக்யராஜால் பதற்றமான கோவை; எஸ்.பி. பரபரப்பு விளக்கம்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
SP has explained Bhagyaraj's allegation that incident  happening  Coimbatore

தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தனது அனுபவங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பாக்யராஜ் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று தலைப்பில் பேசி வெளியிட்டிருந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் பேசும் பாக்கியராஜ், “கோவை  மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் செல்லும் மக்கள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். தொடக்கத்தில் ஆற்றில் உள்ள சுழலில் மாட்டிக் கொள்வார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. உள்ளூர்க்காரர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு உடலை மீட்டுத் தருவார்.

நாளடைவில் தான் தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தன் திறமையை அவன் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. தண்ணீருக்குள் இறங்குபவர்களை பின்தொடர்ந்து, திடீரென்று காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். பிறகு இவரே வெளியில் வந்து அவர்களது உடலை மீட்டுக் கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள்..” என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி வெளியிட்டார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகர் பாக்கியராஜ் பகிர்ந்த வீடியோ குறித்து அறிக்கை மூலம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்ததுள்ளார். அந்த அறிக்கையில், “பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இது சம்பந்தமான குற்றச் சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் உள்ள பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள்  வழியாகச் செல்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி 20 நபர்கள் இறந்துள்ளனர். அடிக்கடி நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10  பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு மேட்டுப்பாளையம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 2023 ஆண்டு ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.  பயிற்சி பெற்ற காவலர்கள் தொடர்ந்து பணியிலிருப்பதால், கடந்த 2023ம் ஆண்டு 914 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டது'' என அறிக்கையில் பாக்கியராஜ் வீடியோவில் கூறியதை முற்றிலும் மறுத்தார். 

தொடர்ந்து பவானி ஆற்றில் விபத்து நடக்கும் காரணம் பற்றி அறிக்கையில் கூறிய எஸ்பி, “2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டது. அதில் அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கையே விபத்தில் சிக்கி இறப்பதற்கான காரணம்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, இதுபோன்று பவானி ஆற்றில் நடக்கும் விபத்துகளைத் தடுக்க, ஆற்றில் 19 ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலமும் அந்தப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை எனவும் தனது அறிக்கையில் எஸ்.பி. விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

அறிக்கையின் இறுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அம்பாரம்பாளையம் ஆற்றுக்கரையில் கொலைகள் நடைபெறுவதாக பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ அடிப்படை ஆதாரமற்றது என்றவர், வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச்செயல் என எச்சரித்துள்ளார். இதையடுத்து, பாக்கியராஜ் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த அம்பாரம்பாளையம் பகுதி மக்கள், “பவானி, கொடிவேரி ஆறுகள் குறித்து கட்டுக் கதைகள் ஏராளம். மழை பெய்தாலே பில்லூர் அணையிலிருந்து அதிகம் தண்ணீர் வரும், ஆற்றில் ஏற்கனவே ஆங்காங்கே பாறை இடுக்குகள் உள்ளதால் சுழல் ஏற்பட்டு நீச்சல் தெரியாதவர்கள சிக்கிக் கொள்கிறார்கள். ஆற்றின் கரையோரம் இருக்கும் கோவிலில் அவ்வப்போது வேண்டுதல் நிறைவேற  கிடாய் வெட்டுவார்கள். இதில்  நடைபெறும் கறி விருந்துக்கு பின் சிலர் மது போதையோடு ஆற்றுக்குள் இறங்கி அதிகம் சிக்குகிறார்கள். இதில் அதிகம் சிக்குவது ஆற்றின் போக்கு அறியாத வெளியூர் மக்கள் தான். பாக்கியராஜ் சொன்னது அவரின் திரைக்கதைக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஒருவேளை அவருக்கு யாராவது ஆதாரமற்ற தகவலை நம்பும்படி சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால், பிரபலமான ஒருவர் அதனை மக்களிடம் சொல்லும்போது தீர விசாரித்து சொல்லி இருக்க வேண்டும்..'' என கருத்து தெரிவித்தனர். 

திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அடிப்படையில் ஆதாரமற்ற ஒரு தகவலை பரப்பியுள்ளார் என கோவை எஸ்.பியே மறுப்பு தெரிவித்து எச்சரிக்கை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.