Skip to main content

“விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்களைக் கேட்கக்கூடாது” -பாரதிராஜா 

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
producer association

 

 

ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஒருசில பிரச்சனைகளால் செயல்படாமல் இருக்கிறது. இதனால் தற்போது படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். படம் தயாரிப்பு, பட வெளியீடு, பைனான்ஸ் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசி தீர்க்கவே இந்த புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

 

இந்த சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் இச்சங்கம் சார்பாக தலைவர் பாரதிராகா அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

 

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இதில் பாரதிராஜா, டி.சிவா, தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

இதனை தொடர்ந்து இச்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இச்சங்கத்தின் தலைவரான பாரதிராஜா பேசுகையில், “திரையரங்க உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றால் என்ன பண்ண முடியும். படங்கள் திரைக்கு வர வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம். நீங்கள் அடாவடித்தனமாக சில விஷயங்கள் பண்ணும்போது, வேறு வழிகள் இருக்கின்றன. தொழில் சுதந்திரம் என்பது எங்களுக்கு உண்டு. இந்தப் பொருளை இவர்களுக்குத்தான் விற்கவேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. என்னுடைய பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன். வாங்குகிறவர்கள் வாங்குவார்கள். இல்லையென்றால் எப்படி விற்க வேண்டும் என்று தெரியும்.

 

திரையரங்குகளைக் கல்யாண மண்டபம் ஆக்கிக் கொள்ளுங்கள், மாநாடு நடத்தி கொள்ளுங்கள். அது உங்களுடைய இடம். எங்களுடைய படங்கள் திரையிடும்போதுதான், அந்த கட்டிடம் பெருமை அடைகிறது. எங்களுடைய படங்களைப் பார்க்கத்தான் ரசிகர்கள் உள்ளே வருகிறார்கள். எங்களுடைய படங்களால்தான் வியாபாரம் நடக்கிறது. எங்களுடைய படங்கள் இல்லையென்றால் அது உங்களுடைய கட்டிடம். என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

 

எங்களுடைய கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். பிடிக்கும், பிடிக்கவில்லை என்பது அவர்களுடைய அபிப்ராயம். எங்களுடைய கோரிக்கைகளை ஒப்புக்கொண்டால் இன்னொரு வழிக்குப்போக மாட்டோம். விஞ்ஞான வளர்ச்சியில் சினிமாவுக்கு இன்னொரு வழிகூட பிறக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும், அதைத்தாண்டிப்போவது தான். இன்றைக்கு ஓடிடி வந்துள்ளது. நாளைக்கு இன்னொரு வழி வரலாம். இப்போதுள்ள லாபத்தை விட அதிக லாபம் என்றால், நாங்கள் அங்குதான் செல்வோம். வியாபாரம் என்பது கணிசமான லாபத்துக்கு பண்ணுவதுதான். நஷ்டத்திலா பண்ண முடியும்.

 

நாங்கள் நடிகர்களுக்கு 10 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பது என்பது வேறு. அது அவர்களுக்கு தேவையில்லாத விஷயம். தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை குறைக்க வேண்டும், அதை குறைக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார். ஒரு படம் தயாரிக்க என்ன தேவை, என்ன பொருட்செலவு என்று திட்டமிடுகிறோம். அங்கு வந்து அவர்கள் கணக்கு போடத் தேவையில்லை. குறிப்பிட்ட சிலர் 40, 50 திரையரங்குகளைக் கையில் வைத்துள்ளீர்கள். பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் மட்டுமே வாங்குகிறீர்கள். 100-க்கும் மேற்பட்ட சின்ன படங்கள் உள்ளன. அவற்றை திரையிடுங்களேன், ஏன் திரையிட மாட்டேன் என்று சொல்கிறீர்கள்? கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், தயாராக உள்ள சின்ன படங்களைக் கொடுக்கிறோம். அதை திரையிட தைரியம் இருக்கிறதா விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்களைக் கேட்கக்கூடாது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீடியாக்களுக்கு கண்டனம் தெரிவித்து கோரிக்கை வைத்த பாரதிராஜா!

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Bharathiraja who condemned the media and made a request!

 

தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் குணச்சித்திர நடிகராக திகழ்ந்தவர் மாரிமுத்து. சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. அவரது மகள் இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். 

 

இருவரது இறுதிச்சடங்கிலும் செய்தி மற்றும் யூடியூப் சேனல்கள் குவிந்திருந்து செய்திகளை தந்த வண்ணம் இருந்தது. ஆனால் சில சேனல்கள் அநாகரிகமாகவும் நடந்து கொண்டனர். இறந்தவர்களைப் பற்றி நீங்கள் எதாவது சொல்லுங்களேன் என்று சோகத்தில் இருப்பவர்கள் முன் மைக்கை நீட்டி அவர்களது பேட்டிகளை கேட்டு தொல்லை தந்தனர். 

 

ஊடகங்களின் வரம்பு மீறிய இந்த செயலைக் கண்டித்தும், கோரிக்கை ஒன்றையும் தமிழ்த்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள், உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது”

 

“உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீபகால மீடியாக்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது. வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது. முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று”

 

“இப்போது சமூக வலைத்தளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது. ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா?. நேற்று... இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது".

 

"குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்... காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும். அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும்.

 

ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்றிருக்கிறார்.


 

Next Story

நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது புகார்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Complaint against actor Redin Kingsley

 

'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி, 'டாக்டர்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். வசன உச்சரிப்பு வித்தியாசமான உடல் மொழி என தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் 'லெக்பீஸ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தற்போது நடிக்க மறுத்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. 

 

இது தொடர்பாக 'லெக்பீஸ்’ பட தயாரிப்பாளர் மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகாரில், 'லெக்பீஸ் படத்தில் 10 நாட்கள் நடிக்க ரெடின் கிங்ஸ்லிக்கு முழு சம்பளமும் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் 4 நாட்கள் மட்டுமே நடித்துவிட்டு, மீதி நாட்களில் நடிக்க மறுத்து வருகிறார். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால், அந்த நஷ்டத்தை அவர் திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அவர் நடித்துக் கொடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக ரெடின் கிங்ஸ்லி விளக்கம் தர வேண்டி தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.