Skip to main content

மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
barathiraja

 

 

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமடைந்த மீரா மிதுன். அண்மையில் நடிகர் விஜய் குறித்தும் நடிகர் சூர்யா குறித்தும் மிகவும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகிறார். இதனால் இவ்விருவரின் ரசிகர்களும் மீரா மிதுனுக்கு எதிராக பதிவுகளை பதிவிடும் விமரிசித்தும் வருகின்றனர்.

 

இந்நிலையில் மீரா மிதுனின் இச்செயலை கண்டித்து இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுளார்.  அதில்," சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. 

 

புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதை போலவும், மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ்வதைப் போலவும் தமிழ்சினிமா வெளியில் அரங்கேறுவது  ஆபத்தான கலாச்சாரம் தொடங்கியுள்ளதோ என ஐயம் கொள்கிறேன்.

 

ஒருவரையொருவர் மதித்து வேலை செய்த காலகட்டத்தை... ஒருவரையொருவர் மரியாதை செய்து கலைப்பணியாற்றிய காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோமா என்ன? என்ற கவலையும் சேர்ந்துகொள்கிறது.

 


இதோ,

நம் அன்புத் தம்பி விஜய், சூர்யா போன்றோர் எத்தகைய அடித்தளங்களை அமைத்து இந்த உயரத்திற்கு வந்துள்ளனர்.. கவர்ச்சிகரமான இந்தத் துறையில் தன் பெயர் கெட்டுவிடாத அளவுக்கு எப்படி தங்கள் வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்? திருமணம் செய்து கண்ணியமான குடும்ப வாழ்க்கையை,  அழகுற கட்டமைத்துள்ளனர் என்பதை இத்தனை ஆண்டுகால அவர்களின் வாழ்க்கை நம் முன் கண்ணாடி போல் நிற்கிறதே.. !! அழகிய ஓவியத்தின் மீது சேறடிப்பது போல மீராமிதுன் என்கிற பெண் தன் வார்த்தைகளை கடிவாளம் போடாமல் வரம்புமீறி சிதறியுள்ளார். திரையுலகில் பயணிக்கும் ஒரு மூத்த உறுப்பினனாக நான் இதைக் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்.

 

சிறு பெண், பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.  கவுரமாக வாழும் கலைஞர்களின் குடும்பத்தைப் பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள், துறை சார்ந்தவர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதுவரை பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சூர்யா எத்தனையோ பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்கும் பணி செய்கிறார். சத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவர்களை, அவர்களின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கதல்ல.

 

மீரா, வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி... எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றிப், பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்.
 

 

வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையாமல்,
 

 

இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும்... பசியைப் போக்கும்... அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும். நம் சகக் கலைஞர்களின் குடும்பத்தை அவதூறாகப் பேசியும்... நடிகர் சங்கம் மட்டுமல்ல.. வேறெந்த சங்கமும் எந்தவிதமான எதிர்க்குரலும் எழுப்பாதது வியப்பை அளிக்கிறது. இன்றுவரை சங்கத்தின் தலையீட்டை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அசைவில்லை. தேர்தல் நடைபெறாத சங்கம் என்றால், சொந்தத் தேவைகளுக்காகக் கூட கண்டனக்குரல் தராத  அளவிற்கு குரல்வளை நெறிபட்டா கிடக்கிறது?

 

யாரோ ஒருவனின் அவமானம்தானே? நாம் ஏன் பேச வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நம் வீடு அசிங்கத்தால் அமிழ்ந்துபோகும்... அந்த சேறு நாளை உன் மீதும் வீசப்படும் இல்லையா? எல்லோரும் கூடிக் கண்டித்திருக்க வேண்டாமா?? சமூக ஊடகங்களும் இப்படிப்பட்ட அவதூறுகளைக் கண்ணியத்திற்குட்பட்டு ஒளிபரப்புவதை நிறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

 

முன்பெல்லாம் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றும்... ஊடகங்களும் கலைஞர்களும் ஒரு குடும்பம் என்ற கட்டுக்கோப்பில் இருந்தோம். ஆனால் இன்று அவை காற்றிலெறியப்பட்டு, கட்டற்று போய்க்கொண்டிருப்பதாகத் தோணுகிறது. மற்றவர்களை அவர்களின் வாழ்க்கை அமைப்பைக் கேலிசெய்யும் வார்த்தைகளை ... எழுத்தைக் கூட தேடிப்பிடித்து கத்தரி போடுங்கள் நண்பர்களே..

 

இப்படிப்பட்டவர்களின் ஊக்குவிப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.  அதனால் சமூக ஊடகங்கள் நறுக்க வேண்டியதை நறுக்க வேண்டியவர்களை... தயவுசெய்து கவனித்து நறுக்கிவிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். உயரத்திலிருக்கும் நட்சத்திரங்களின் ரசிகர்களின் பின்னூட்ட வார்த்தைகளும் மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் இருப்பதைக் கவனித்தே வருகிறேன்.

 

நடிகை கஸ்தூரி போன்றோர் அதற்கு இலக்காகி உள்ளனர். ரசிகர்கள்தானே கெட்ட வார்த்தை பேசுகிறார்கள்??! நமக்கென்ன என நட்சத்திரங்களும் அமைதியாக வேடிக்கைப் பார்க்கக்கூடாது. அவர்களை நல்வழிப்படுத்த, ஆரோக்கியமான தலைமுறைகளை உருவாக்க முயற்சியெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமையும் கூட...

 

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் படிக்கக் கூசும் கேவலமானவைகளாக உள்ளன. ஒரு அறிக்கை விட்டாவது அவர்களை மட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அந்த ரசிகன் எங்கிருந்தோ கழிவின் மீது கல்லடிக்கிறான். பாருங்கள், அது நம் வீட்டு அடுப்படியில் நாறுகிறது. உங்கள் பெயரும் புகழும் நீடித்து நிலைத்திருக்க இன்றே நல்ல கண்மணிகளை வளர்த்தெடுங்கள் உச்ச நட்சத்திரங்களே... என் போன்றோருக்கு உங்கள் மீது தூசு விழுந்தாலும் உத்திரம் விழுந்தது போல் வலிக்கிறது. ஒருவருக்கொருவர் மரியாதை செய்து இணக்கமாக உயரும் சூழ்நிலைகளை விரைவில் உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி! " என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காவலாளி... ஏ.வி.எம் வாசலில் நின்று சபதம் எடுத்த பாரதிராஜா!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

தமிழ்த்திரையுலகில் முன்னணி இயக்குநராகக் கொடிகட்டிப் பறந்தவர் பாரதிராஜா. புதுமை இயக்குநரான பாரதிராஜா எப்படி ஆழமான முத்திரைகளைப் பதித்தார் என்பது வரலாறு. ஆரம்பக்காலத்தில் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அதில் கிடைத்த நீண்ட அனுபவம் மூலமாக 16 வயதினிலே படத்தை இயக்கினார். உதவி இயக்குநராகச் சேர்வதற்கு முந்தைய காலகட்டம் பாரதிராஜாவிற்கு எப்படி இருந்தது?

 

அந்தக் காலகட்டங்களில் வடபழனியில் நிறைய ஸ்டூடியோக்கள் இருக்கும். இன்றைக்கு அவை மருத்துவமனைகளாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. 30 வருடத்திற்கு முன்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவைப் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் எல்லோராலும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்துவிடுவார்கள். ஏ.வி.எம் ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்து செல்வதையே பலர் பிறவிப்பயனாக நினைப்பார்கள். ஏ.வி.எம் மட்டுமல்ல வாகினி, சத்யா, ஜெமினி ஆகிய ஸ்டூடியோவிற்குள் நுழைவதென்பதும் பெரிய விஷயம். முதன்முறையாக பி.ஆர்.ஓவாக அந்த ஸ்டூடியோவிற்குள் நுழைந்தபோது எனக்கும் அதே உணர்வுதான் இருந்தது. 

 

நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன்தான் பாரதிராஜா ஊரிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு வந்து நடிக்க வாய்ப்பு கேட்டு ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குச் சென்றுள்ளார். வழக்கம்போல வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்து நிறுத்திவிடுகின்றனர். கடைசியில் அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகின்றனர். அதில், அதிருப்தியான பாரதிராஜா, 'பெரிய நடிகராகி இதே ஸ்டூடியோவிற்குள் ஒருநாள் நான் நுழைவேன்' என வெளியே நின்று சபதம் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்தாராம். அப்படியே காலங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் இயக்குநராக முடிவெடுத்த பாரதிராஜா, ஜெகநாதன், ஏ.எஸ்.பிரகாசம், ரா.சங்கரன் உட்பட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் பேசப்பட்டது. யார் இந்த பாரதிராஜா... இப்படிப்பட்ட ஒரு திறமைசாலி எங்கிருந்து வந்தார் என அனைவரும் பேசவும் தேடவும் ஆரம்பித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து வெளியாகிய கிழக்கே போகும் ரயில், தேவி காம்ப்ளக்சில் 50 வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் வெளியான புதிய வார்ப்புகள் 175 நாட்கள், சிகப்பு ரோஜாக்கள் 100 நாட்கள், நிறம் மாறாத பூக்கள் 125 நாட்கள் என தொடர்ந்து 5 வெற்றிப்படங்கள் கொடுத்தார். இந்த ஐந்து படங்கள் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குநர் என்றால் அது பாரதிராஜாதான் என்றானது. பாரதிராஜா படம் வெளியாகிறது என்றால் தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரே நேரத்தில் ஆயிரம்பேர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். எந்த ஏ.வி.எம் ஸ்டூடியோ வாசலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டாரோ பின்னாட்களில் அதே நிறுவனம் பாரதிராஜா இயக்கிய படத்தைத் தயாரித்தது. எந்த ஸ்டூடியோவில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே நிறுவனத்திற்கு படம் இயக்குவதென்பது எவ்வளவு பெரிய வெற்றி என யோசித்துப்பாருங்கள். இயக்குநராகத் தன்னை நிரூபித்த பின், ராஜமரியாதையுடன் அந்த ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்தார் பாரதிராஜா.

 

 

Next Story

கண்கலங்கிய பாரதிராஜா... படுத்த படுக்கையில் நடிகர் பாபு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021
barathiraja

 


தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அவருடைய ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாபு.

 

அண்மையில் அவரது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் படத்திலேயே தனது நடிப்பால் கவனம் பெற்ற பாபுவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. 14 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பாபு. ஆனால், மனசார வாழ்த்துங்களேன் படத்தில் நடித்தபோது பெரும் சோதனை ஏற்பட்டது.

 

ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார் நடிகர் பாபு. இருந்தபோதிலும் அவரால் பழையமாதிரி எழுந்து நடமாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதன்பிறகு 20 வருடமாக படுத்த படுக்கையாகவே சிகிச்சை பெற்று வருகிறார்.

 

நடிகர் பாபுவை அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா அண்மையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்றிருந்தார். அப்போது அவர் கண்கலங்கி நடிகர் பாபுவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தார். கஷ்டத்தில் இருக்கும் பாபுவின் மருத்துவ உதவிக்காக நிதியுதவி அளித்துவிட்டு வந்துள்ளார்.பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.