Skip to main content

“நீங்களும் தானம் செய்ய வேண்டும்”- அஜய் தேவ்கன் வேண்டுகோள்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

ajay devgn


உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. திடீரென இந்தியாவில் உயரத்தொடங்கியுள்ள கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுவதும் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் ஒன்பதாவது இடத்திலிருந்து 7ஆவது இடத்திற்கு மாறியுள்ளது இந்தியா.
 


இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் கரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக அறியப்படும் மும்பையின் தாராவியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதியிலிருந்து மட்டும் 1,500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பாதிக்கப்படவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தற்காலிகமாக மருத்துவமனை போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 

 


இந்த மருத்துவமனைக்காக தனது அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக, நடிகர் அஜய் தேவ்கன் பங்களிப்பு செய்துள்ளார். 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும், இரண்டு வென்டிலேட்டர்களையும் அளித்துள்ளார் அஜய் தேவ்கன்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அஜய், "கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கான மையப்பகுதியில் தாராவி இருக்கிறது. மாநகராட்சியின் உதவியோடு எண்ணற்ற குடிமக்களும், தன்னார்வ அமைப்புகளும் களத்தில் அயராது உழைத்து வருகின்றன. தேவைப்படுபவர்களுக்கு ரேஷன் பொருட்களையும், சுகாதாரப் பொருட்களையும் கொடுத்து வருகின்றனர். எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பாக நாங்கள் 700 குடும்பங்களுக்கு உதவுகிறோம். நீங்களும் தானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

அஜய் தேவ்கன் பட ரிலீஸ் அப்டேட்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
ajay devgn maidaan release update

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கடைசியாக கைதி பட இந்தி ரீமெக்கில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிங்கம் அகெய்ன், ரெய்டு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஷைத்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மாதவன், ஜோதிகா உள்ளிட்டோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனிடையே மைதான் என்ற தலைப்பில் அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ளார். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.