மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கும் லீனா ஆண்டனி, சிறு வயதிலேயே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய 13 வயதில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அதன் பிறகு தொடர்ந்து படம் நடித்து வந்ததால், படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் 10 வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார். அதனால் படிப்பை தொடரமுடியாத லீனா ஆண்டனி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.
இந்நிலையில் 73 வயதாகும் நடிகை லீனா ஆண்டனி மீண்டும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியடைய விரும்பியுள்ளார். அதனால் கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இதுகுறித்து பேசிய நடிகை லீனா ஆண்டனி, “திரைப்படங்களில் நடிக்கும் போது வசனங்களை மனப்பாடம் செய்து பேசினேன். அதேபோலத்தான் தற்போதும் மனப்பாடம் செய்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இவர் சமீபத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ’ஜோ அண்ட் ஜோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.