Skip to main content

தன்னை பற்றி தவறாக எழுதிய பத்திரிகையாளரின் மகள்களுக்கு உதவிசெய்த விவேக்!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

rajesh

 

எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொண்ணூறுகளின் இறுதிக்குள் தன்னைத் தவிர்க்க முடியாத காமெடி நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் விவேக். 'இயக்குநர் சிகரம்' கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987-ல் வெளியான 'மனதில் உறுதிவேண்டும்' என்ற படமே நடிகர் விவேக்கின் அறிமுகப்படம். இயக்குநர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த், கதாநாயகனாகத் தொட்ட உயரத்திற்கு இணையான உயரத்தை, நடிகர் விவேக் தமிழ் காமெடி உலகில் தொட்டவர்; நகைச்சுவையான நடிப்பின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சமூக கருத்துகளை விதைத்தவர்.

 

தமிழ் மக்களால் 'சின்ன கலைவாணர்' என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். ஐந்துமுறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, கலைவாணர் விருது, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது எனப் பல விருதுகளை வென்றவர் விவேக். முன்னர் நக்கீரனோடு நடந்த ஒரு கலந்துரையாடலில் நடிகர் விவேக் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் மூத்த நடிகர் ராஜேஷ். அவை பின்வருமாறு...

 

நடிகர் விவேக் எத்தகைய உயர்ந்த குணங்கள் கொண்ட மனிதர் என்று நடிகர் குமரிமுத்து கூறியதைக் கேட்டு தெரிந்துகொண்டேன். அவர் என்னிடம் கூறியவற்றை அப்படியே உங்களுக்குக் கூறுகிறேன். ஒருமுறை நடிகர் விவேக்கை தொடர்பு கொண்ட குமரி முத்து, "எனக்கு மலேசியாவில் நாடகம் இருக்கிறது அண்ணா... நீங்கள் நாடகத்திற்கு வந்தால், எனக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும்... நீங்கள் வரமுடியுமா? என்று கேட்டுள்ளார். உடனே விவேக், "எனக்கு எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்டுள்ளார். இரண்டு லட்சம் ரூபாய் வாங்கித்தருகிறேன் என்று குமரி முத்து உறுதியளிக்க, நடிகர் விவேக்கும் சரி வருகிறேன் எனச் சம்மதம் தெரிவிக்கிறார். 

 

அதன்பிறகு, அனைவரும் மலேசியா செல்கின்றனர். நாடகம் நல்லபடியாக முடிகிறது. நாடகம் முடிந்து அனைவரும் தங்கியிருந்த ஓட்டலில் வைத்து குமரி முத்து முன்னர் பேசியபடி இரண்டு லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்து விவேக்கிடம் கொடுக்கிறார். உடனே விவேக், உங்களுக்கு வரவேண்டிய 50 ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதா எனக் கேட்டுள்ளார். ஆம்.. வந்துவிட்டது அண்ணா எனக் குமரிமுத்து கூறியவுடன் அந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தையும் குமரி முத்துவிடம் கொடுத்துள்ளார். குமரி முத்து ஏதும் புரியாமல் நின்றுள்ளார். இந்த இரண்டு லட்சம் பணத்தை வைத்து உங்கள் மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்துங்கள் என விவேக் கூறியதைக் கேட்டு குமாரி முத்து கண்கலங்கிவிட்டாராம். பெயரில் மட்டும் சின்ன கலைவாணர் இல்லை, செயலிலும் தான் சின்ன கலைவாணர் என்பதை விவேக் நிரூபித்துவிட்டார்.  

 

அதுபோல இன்னொரு சம்பவத்தையும் குமரி முத்து என்னிடம் கூறினார். ஒரு பத்திரிகையாளர் தொடர்ந்து விவேக்கை பற்றி தவறாக எழுதி வந்துள்ளார். அதை விவேக்கும் தொடர்ந்து கவனித்து வந்துள்ளார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்த பத்திரிகையாளர் மரணமடைந்துவிடுகிறார். அந்தப் பத்திரிகையாளருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்ததும், அந்தக் குழந்தைகளின் பெயரில் வங்கியில் தலா இரண்டு லட்சம் ரூபாய் ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்தாராம். 

 

ஒரு முறை என்னுடைய பேட்டிகளை எல்லாம் பார்த்துவிட்டு என் வீட்டிற்கே வந்து என்னைப் பாராட்டினார். இவ்வளவு பெரிய புகழ் பெற்ற நடிகராக இருந்தும் அடுத்தவர்கள் திறமையைப் பாராட்டும் நல்ல குணம் அவரிடம் இருந்தது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.