Skip to main content

"நடிப்பிலிருந்து விலகுகிறேன்" - ஆமீர் கான் திடீர் முடிவு

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

aamir khan takes break from acting

 

பாலிவுட்டில் முன்னணி நடிகர் ஆமீர் கான் கடைசியாக 'லால் சிங் சத்தா' படத்தைத் தயாரித்து நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கு 'பாய்காட்' கலாச்சாரம்தான் காரணம் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இது சமீப காலமாக பாலிவுட்டின் சில முன்னணி திரை பிரபலங்களின் திரைப்படங்களுக்குத் தொடர்ந்து ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் ஆமீர் கான் தனது அடுத்த பட அறிவிப்பை அறிவித்துள்ளார். அதன் படி 'சாம்பியன்ஸ்' என்ற தலைப்பில் தனது தயாரிப்பு நிறுவனமான 'ஆமீர்கான் புரொடக்‌ஷன்ஸ்' சார்பில் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "திரைத்துறையில் நான் சந்திக்காத மோசமான நிகழ்வுகளை தற்போது சந்தித்து வருகிறேன். அடுத்ததாக நான் தயாரிக்கும் சாம்பியன்ஸ் படம் அற்புதமான, அழகான கதை. இது மனதைக் கவரும் ஒரு அழகான படம். ஆனால் நான் என் குடும்பத்துடன் இருக்க ஆசைப்படுகிறேன். அம்மா மற்றும் குழந்தைகளுடன் இருக்க விரும்புகிறேன். 

 

எனது வாழ்க்கையில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணிக்கிறேன். திரைப்படங்களில் மட்டுமே எனது முழு கவனத்தைச் செலுத்தி வந்தேன். இது என்னைச் சுற்றியுள்ளோருக்கும் எனக்கும் நியாயமானதாகப் படவில்லை. அதனால் நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகியிருக்க முடிவு செய்துள்ளேன். இருப்பினும் படங்களைத் தயாரிப்பேன். எனவே ஒரு நடிகனாக இல்லாமல் வாழ்வது எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தோடு வருகிற ஆண்டை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு நெருக்கமானவர்களோடு நேரத்தைச் செலவழிக்க விரும்புகிறேன்." என்றார்.  

 

இதனிடையே நடிகை ரேவதி இயக்கத்தில் கஜோல், விஷால் ஜெத்வா நடிப்பில் உருவாகியுள்ள 'சலாம் வெங்கி' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

வைரலான வீடியோ - வழக்கு தொடுத்து அவசர விளக்கமளித்த அமீர்கான்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Aamir Khan files case for fake video and said Never endorsed any political party

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் திரைபிரபலங்களும் கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கடந்த வாரம் லியோ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. ஆனால் அத்தகவலை சஞ்சய் தத் மறுத்திருந்தார். இந்த நிலையில் மற்றொரு பாலிவுட் முன்னணி நடிகரான அமீர் கான், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து அமீர் கான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமீர் கானின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது, “அமீர் கான் தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளித்ததில்லை. கடந்த பல தேர்தல்களில் தேர்தல் கமிஷன் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முயற்சிகளை எடுத்துள்ளார். அமீர் கான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி சமீபத்தில் வைரலான வீடியோவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது போலியான வீடியோ என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமீர் தெளிவுபடுத்த விரும்புகிறார். 

மேலும் அனைத்து இந்தியர்களையும் வெளியே வந்து வாக்களிக்குமாறும், நமது தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்கிறார். அமீர் கானின் அந்த வைரல் வீடியோ, ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு அவர் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை. அதை ஏ.ஐ மூலம் எடிட் செய்துள்ளனர்” என்றார்.