கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். இதில் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். பின்பு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது கார்த்திக் சுப்புராஜிடம், “சித்தா படத்தில் நிமிஷா சஜயன் ரொம்ப நல்லா பண்ணியிருப்பாங்க. அவங்க பார்ப்பதற்கு அழகா இல்லைன்னாலும் நடிப்பு அருமையாக இருக்கும். அவங்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், “அழகா இல்லைன்னு எப்படி சொல்ல முடியும். அது உங்களுடைய மனநிலை. யாரையும் அப்படி சொல்ல முடியாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அவங்க ஒரு நல்ல திறமையான நடிகர் என தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் பார்த்தேன். மலைவாழ் மக்களிடமிருந்து ஒருவரை கல்யாணம் பண்ணி மதுரையில் வாழ்ந்திட்டு வர ஒரு பொண்ணு கேரக்டர். படம் முழுக்க அவர் கர்ப்பிணியாக இருக்கும் சமயத்தில் தான் கதை நகரும். அந்த கேரக்டருக்குள் புருஷன் மேல் லவ், கோவம், பாசம் என நிறைய இருக்கும். இத்தனை எமோஷ்னலையும் உள்ள வச்சிக்கிட்டு, நடிக்க ஒரு கிரேட் பெர்ஃப்பார்மர் தேவைப்பட்டாங்க. அதனால் அவரை தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
இந்த கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் சொன்ன பதில் பலரை கவர்ந்துள்ளது. அந்த வகையில் இது தொடர்பான வீடியோவை நடிகை மஞ்சிமா மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, கார்த்திக் சுப்புராஜை ஆதரித்துள்ளார்.