Skip to main content

'ஒரு காடு... அதுல ஒரு சிட்டுக்குருவி' எனக் கதை சொல்லியே 5 கோடி மரங்களை நடவைத்த பெண்!!! வாங்காரி மாத்தாய் | வென்றோர் சொல் #19

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

Wangari Maathai

 

2004 -ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருந்த தருணம். அந்த ஆண்டுக்கான விருதினைப் பெறப் போவது யார் என வழக்கம் போல எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது, மேலைநாட்டினர் பலரும் எதிர்பார்த்திடாத, கென்யா நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி வாங்காரி மாத்தாய் பெயர் அறிவிக்கப்பட்டதும் சிறிய சலசலப்பும், பெரிய விவாதமும் ஏற்பட்டது. உலக அமைதிக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும் விஞ்ஞான வளர்ச்சியே உலக வளர்ச்சி என்றும் கருதும் ஒரு சாரார் கேள்வியெழுப்பினர். அதுவரை, அணுஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு 'உன் நாட்டின் மீது போட்டுவிடுவேன்' என்று மிரட்டுபவர்களுக்கும், மிரட்டப்படுபவர்களுக்கும் இடையில் சமாதானத் தூதுவராகச் செயல்படும் தலைவர்களுக்கோ அல்லது எல்லைப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் தலைவர்களுக்கோ இந்த விருது கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பழகியவர்களுக்கு அந்தக் கேள்வி எழுந்ததில் ஆச்சரியமில்லை.

 

"உலகில் நடக்கும் பாதி பிரச்சனைகள் நீருக்காகவோ, கனிமம் பொதிந்து கிடக்கும் நிலத்திற்காகவோ அல்லது இது போன்ற ஏதோ ஒரு வகையிலான இயற்கை வளங்களைக் குறிவைத்தே நடைபெறுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதே நம் கடமை. அதுதான் உலக அமைதிக்கு வழிவகுக்கும்" என்று மற்றொரு கோணத்தில் பதிலளித்தார் வாங்காரி மாத்தாய். பிரிட்டிஷின் வெள்ளைக்கார ஆதிக்கத்தில் இருந்த கென்யா நாட்டில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் வாங்காரி மாத்தாய். அவரைப் படிக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பது அவர் பெற்றோரின் நீண்ட நாள் ஆசை. அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் ஆப்பிரிக்க இனப் பெண்களுக்கு பள்ளிப்படிப்பு என்பது எட்டாக்கனியே. அத்தகைய சூழலில் பள்ளிப்படிப்பை முடித்து, ஸ்காலர்ஷிப் உதவியுடன் அமெரிக்கா சென்று கல்லூரிப்படிப்பை முடிக்கிறார். கென்யா விடுதலையான பின் தாய் நாடு திரும்பி முனைவர் பட்டம் பெறுகிறார். ஆப்பிரிக்க கண்டத்திலேயே முதல் முனைவர் பட்டம் பெற்ற பெண் என்ற பெருமையும், பெயரும் வாங்காரி மாத்தாயை வந்தடைந்தன.

 

சுதந்திரக் கென்யாவில் நடைபெறும் காடுகள் அழிப்பு, இயற்கை வளச்சுரண்டல், அதனால் ஏற்படுகிற வறுமை, உணவுப்பற்றாக்குறை என அனைத்தும் அவரை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இதற்கு ஆளும் அரசே துணை போவது அவரை கொதிநிலைக்கு கொண்டுசெல்கிறது. கையைப் பிசைந்தவாறே செய்வதறியாது யோசிக்கிறார். இயற்கை அன்னையின் கைகள் நசுக்கப்பட்டுள்ளன, கென்ய நாட்டுப் பெண்களின் கரங்கள் பொருளாதார ரீதியாக ஒடிக்கப்படுள்ளன. இரண்டையும் மீட்டெடுப்பதே அனைத்திற்குமான தீர்வு என முடிவெடுக்கிறார் மாத்தாய். 'க்ரீன் பெல்ட்' இயக்கம் தொடங்கப்படுகிறது. பெண்கள் மரம் நட்டு வளர்த்தால் சம்பளமாகப் பணம் கொடுக்கப்படும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்.

 

Ad

 

தொடக்க காலங்களில் பெரிய அளவில் வரவேற்பில்லை என்றாலும் நாட்கள் செல்ல செல்ல பெரிய அளவில் மக்கள் வரவேற்பும், பல சமூக இயக்கங்களின் ஆதரவும் கிடைக்கிறது. வாங்காரி மாத்தாயால் வெறும் 7 மரங்கள் நட்டுத் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று கென்யாவில் மட்டும் 5 கோடிக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுப் பாதுகாத்து வருகிறது. இதன் மூலம் அழிவின் விளிம்பில் இருந்து அவர் மீட்டெடுத்த மலைகள், ஆறுகள், நீரோடைகள் ஏராளம். ஆனால் தொடக்க காலங்களில் அவரது முயற்சியைக் கேளிக்குள்ளாக்காத ஆட்களே இல்லை எனலாம். இதில் அப்போதைய கென்ய அரசும் அடக்கம். காடுகள் அழிப்பிற்கு எதிராக அவர் கொடுத்த குரல் அன்றைய அதிகார வர்க்கத்தை நிலைகுலையச் செய்தது.

 

"எனக்குச் சிறுவயதாக இருக்கும் போது என் வீட்டிற்கு அருகே நீரோடை இருந்தது. சிறுவயதில் அங்கு சென்று பானையில் நீரெடுத்திருக்கிறேன். வெறும் கையால் அந்த ஓடை நீரை அள்ளிக் குடித்திருக்கிறேன். அங்கே விளையாடும் போது நிறைய தவளை முட்டைகள் இருக்கும். அதைக் கைகளால் தொடும்போது உடைந்து போயிருக்கின்றன. நிறைய தலைப்பிரட்டைகளை அங்கே காண முடியும். இவைதான் என்னுடைய இளமைக்காலம். இன்று ஐம்பது வருடங்கள் கழிந்து விட்டன. அந்த நீரோடை வறண்டு விட்டது. பெண்கள் நீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடக்கின்றனர். இன்றைய தலைமுறையினர் இழந்தது எதுவெல்லாம் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆச்சரியங்களும், அற்புதங்களும் நிரம்பிய அந்தப் பழைய உலகத்தை அடுத்த தலைமுறைக்கு உருவாக்கிக் கொடுப்பதே நமக்கு இருக்கும் பெருங்கடமை. தனிமனிதர்கள் செய்யும் ஒரு சிறு விஷயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் கையால் ஒரு குழி தோண்டி, செடி நட்டு, நீருற்றி அதை வளர்க்காதவரை இவ்வுலகத்திற்காக நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று தான் அர்த்தம்...." .

 

இயற்கை வளச்சுரண்டலுக்கு எதிராகவும், கட்டற்று சீரழிக்கப்படும் இயற்கைக்கு எதிராகவும் உலகின் பல மூலைகளில் இருந்து பல குரல்கள் எழுந்துள்ளன. உதாரணமாக இந்தியாவில் நம்மாழ்வார், ஜப்பானில் மசானபு புகாகோ, ஆஸ்திரேலியாவில் பில் மாலிசன் எனக் கூறலாம். இந்தக் குரல்களை விட வாங்காரி மாத்தாயின் குரல் எழுப்பிய ஓசை அதிகம். அவர் முன்னெடுத்த 'Humming bird' பிரச்சாரம் கென்யா வரலாற்றில் காலத்துக்கும் அழியாப் புகழ்பெற்றது. 

 

"பல ஆயிரம் உயிரினங்கள் வாழும் ஒரு காட்டில் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அனைத்து மிருகங்களும், பறவைகளும் காட்டை விட்டு வெளியேறி விட்டன. ஒரேயொரு சிட்டுக்குருவி மட்டும் அருகில் இருந்த ஓடையில், தன் அலகால் நீரெடுத்து வந்து காட்டுத்தீயின் மீது ஊற்றியது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்ற உயிரினங்கள், அந்தக் காட்டுத்தீயின் முன் நீ சிறியவள். உன்னால் ஏதும் செய்ய முடியாது என்றன. அந்தச் சிட்டுக்குருவி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து நீரெடுத்து வந்து ஊற்றியது. பின் அனைத்து விலங்குகளும், பறவைகளும் அந்தச் சிட்டை முட்டாள் என்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டன. அதற்கு அந்தச் சிட்டு, 'நம் வாழ்விடத்தைச் சரி செய்ய அதிகபட்சமாக என்னால் முடிந்த ஒன்றை நான் செய்கிறேன்' என்று கூறிவிட்டு தன் பணியைத் தொடர்ந்தது. நாமும் அது போன்ற ஒரு சிட்டுக்குருவி தான்" என்று அவர் எழுப்பிய கூக்குரல் இன்று பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பாலையாவதில் இருந்து காப்பாற்றியுள்ளது.

 

Nakkheeran

 

கிட்டத்தட்ட முற்றும் முழுவதுமாகச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஆப்பிரிக்க பகுதியில் இருந்து தனி நபராகக் குரலெழுப்பி வறண்டு கிடந்த பூமித்தாயின் மீது இன்று பசுமைப்போர்வை போர்த்தி விட்டுள்ள அவரது கரங்களுக்கு எவ்வளவு வலிமை என்று பாருங்கள்....!

 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.