Skip to main content

தந்தையின் உடலை நடுவீட்டில் வைத்துவிட்டு கிரிக்கெட் ஆட வந்த விராட் கோலி! | வென்றோர் சொல் #39 

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

Virat Kohli

 

நான்கு நாட்கள் நடந்த ரஞ்சி போட்டியில் டெல்லி அணி பெங்களூரு அணியுடன் மோதிக்கொண்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் மறுநாள் ஆட்டத்தைத் தொடரவேண்டும். அந்தப் பெரும் பொறுப்புடனும் அன்றைய தினத்தில் விளையாடிய அசதியுடனும் வீட்டிற்குச் செல்கிறான் அந்த இளைஞன். இரவு உணவை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டிருக்கையில் அதிகாலை இரண்டு மணிவாக்கில் மொத்த குடும்பமும் பதறி எழுகிறது. காரணம், அந்த இளைஞனின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு தன்னுடைய கடைசி சுவாசத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார். அவசரஅவசரமாக அருகேயிருந்த மருத்துவர்கள் உதவியை நாட, அதிகாலை நேரம் என்பதால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. பின்பு, ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கிறார். மொத்த குடும்பமும் இடிந்துபோய் அமர்ந்திருந்தது. தன்னைக் கிரிக்கெட் வீரனாக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட தந்தையின் மரணம் அந்த இளைஞனை வெகுவாகப் பாதித்திருந்தது. சிறிது நேரம் கழித்து தன்னுடைய அணி பயிற்சியாளருக்கு ஃபோன் செய்து விவரத்தைக் கூறுகிறார். ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்திய அவர், நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்கிறார். நாளைய போட்டியில் நான் நிச்சயம் களமிறங்குவேன் என்கிறான்.

 

அந்த இளைஞன் உறுதியாக இருந்ததால் பயிற்சியாளரும் சம்மதித்துவிடுகிறார். தந்தையின் சடலம் நடு வீட்டில் கிடக்க, அந்த இளைஞன் மைதானத்தில் உத்வேகத்துடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். அன்றைய போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் தவறான முறையில் அந்த இளைஞனுக்கு அவுட் கொடுக்கப்படுகிறது. அந்த வருத்தத்துடன் வெளியேறிய அந்த இளைஞன் சாயங்காலம் சென்று தன்னுடைய தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்கிறான். உறவினர்கள் கூட்டத்தாலும் துக்கத்தாலும் நிரம்பியிருந்தது வீடு. அன்று இரவு பயிற்சியாளரை அழைத்த அந்த இளைஞன், தான் மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறுகிறான். அவனது துக்கத்தில் பங்கெடுப்பதாகக் கூறி அவனுக்கு ஆறுதல் கூறத்தொடங்கினார் பயிற்சியாளர். அவரை இடைமறித்த அந்த இளைஞன், இன்றைய போட்டியில் தவறான முறையில் தனக்கு அவுட் கொடுக்கப்பட்டதாகவும், அணிக்காக கடைசிவரை களத்தில் நிற்கமுடியாதது தனக்கு வருத்தம் தருவதாகக் கூறுகிறான். அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியும் வியப்புமடைந்த பயிற்சியாளர் அந்த நொடியே கணித்துவிட்டார், விராட் கோலி எனும் பெயர் கொண்ட அந்த இளைஞன் கிரிக்கெட் உலகில் தொடப்போகும் உச்சம் என்னவென்று...

 

டெல்லியில் 1988ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பிரேம் கோலி மற்றும் சரோஜ் கோலி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் விராட் கோலி. தந்தை பிரேம் கோலி வழக்கறிஞர். இளம் வயது முதலே கிரிக்கெட்டின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த விராட் கோலி, தன்னுடைய தெருவில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். விராட் கோலியின் திறமையை ஆரம்பக்கட்டத்திலேயே அடையாளம் கண்டுவிட்ட பிரேம் கோலி, அது எந்த விதத்திலும் வீணாகிவிடக்கூடாது என்று கருதி கிரிக்கெட் அகாடெமியில் அவரைச் சேர்த்துவிடுகிறார். அதன் பிறகு முறையாகக் கிரிக்கெட் பயிற்சி பெற ஆரம்பித்த விராட் கோலி தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறார். 15 வயதிற்குட்பட்ட டெல்லி  அணி, 17 வயதிற்குட்பட்ட டெல்லி அணியில் விளையாடிவந்த விராட் கோலிக்கு 2006ஆம் ஆண்டு முதல்முறையாக ரஞ்சி போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.

 

Virat Kohli

 

தமிழக ரஞ்சி அணிக்கு எதிராக 2006ஆம் ஆண்டு களமிறங்கிய போட்டியே முதல்தரக் கிரிக்கெட்டில் விராட் கோலியின் அறிமுகப்போட்டியாகும். அந்தத் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக தந்தை மரணமடைகிறார். தந்தையின் மரணத்தையும் பொருட்படுத்தாமல் களமிறங்கிய விராட் கோலி அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதன் பிறகு, 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. பின்பு, 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கான கேப்டன் பொறுப்பு, இந்திய அணியில் இடம், இந்திய அணிக்கான கேப்டன் பொறுப்பு என படிப்படியாகத் தன்னை வளர்த்துக்கொண்டுவரும் விராட் கோலி, உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக இன்று உயர்ந்து நிற்கிறார்.    

 

"நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நேரத்தை செலவிடுவது, பொழுதுபோக்குவது என என்னுடைய இளமைக்காலம் மிக அழகாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக எனக்கு 14 வயது இருக்கும்போது அனைத்தும் மாறியது. என்னுடைய சகோதரர் தொழில்தொடங்கப் பணம் தேவைப்பட்டதால் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டிற்குச் சென்றோம். நல்ல தொடக்கம் கண்ட என்னுடைய அண்ணனின் தொழில் திடீரென வீழ்ச்சியைச் சந்தித்து, பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆன்லைனில் ட்ரேடிங் செய்துவந்த என்னுடைய அப்பாவும் திடீரென நஷ்டத்தைச் சந்தித்தார். அதில் அவர் செய்த சிறிய தவறால் அதுவரை சம்பாதித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் இழக்கவேண்டியதாகிவிட்டது. நம்பிக்கையானவர்கள் என்று நாங்கள் கருதிய பலர் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தனர்.

 

இந்தச் சரிவில் இருந்து மீண்டு வருவது என்னுடைய குடும்பத்திற்குப் பெரும் சவாலாக இருந்தது. இதனால் மிகுந்த மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருந்த என் தந்தையைப் பக்கவாதம் நோய் தாக்கியது. கழிவறை செல்வதற்குக்கூட அவரை ஒருவர் தூக்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்தான் ரஞ்சி ட்ராபி தொடரில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடர் நடந்துகொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு என் தந்தை மரணமடைந்துவிட்டார். மறுநாள் போட்டியை முடித்துவிட்டுத்தான் என் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தேன். என்னுடைய அந்தச் செயலைப் பார்த்து என் குடும்பத்தினர் பலர் அதிர்ச்சியடைந்துவிட்டனர். ஆனால், அதை என் தந்தை ஏற்றுக்கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். என்னை இந்திய அணிக்காக விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரனாக்கி பார்க்க வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். இறுதிச்சடங்கின்போது, இந்திய அணிக்காக நான் நிச்சயம் விளையாடுவேன். எதுவொன்றாலும் அதைத் தடுக்க முடியாது என்று என் சகோதரனிடம் நான் கூறினேன். என் தந்தையின் மரணம் என்னை பொறுப்புள்ளவனாக மாற்றியது".      

 

இன்று நாம் பார்க்கும் விராட் கோலிக்கும் 2015ஆம் ஆண்டிற்கு முந்தைய விராட் கோலிக்கும் இடையே பல வேறுபாடுகள் உண்டு. அவரது ஆட்ட நுணுக்கத்தில் மட்டுமின்றி அவரது உடலமைப்பிலும் இந்த மாற்றங்களைக் காணலாம். இந்திய அணியில் சராசரி வீரனாக முத்திரை பதித்துவந்த விராட் கோலிக்கு, தன்னுடைய ஆட்டத்தில் ஏதோவொன்று குறைவதுபோல உறுத்திக்கொண்டே இருந்தது. தன்னுடைய கிரிக்கெட் கேரியர் முடியும்போது சராசரி இந்திய வீரன் என்ற அடையாளத்துடன் அறியப்படுவதை விரும்பாத விராட் கோலி தன்னுடைய குறைகளை அலச ஆரம்பிக்கிறார். சர்வதேச தரத்திலான வீரனாக வேண்டுமென்றால் சர்வதேச தரத்திலான வீரனுக்கான உடற்தகுதி முதலில் இருக்கவேண்டும் என்ற உண்மை அவருக்குப் புரியவருகிறது. அதன் பிறகு சர்வதேச வீரனுக்கான தரத்துடன் கூடிய உடற்தகுதியை விராட் கோலி நெருங்கநெருங்க அவரது ஆட்டம் மேம்பட ஆரம்பிக்கிறது. விராட் கோலியின் சர்வதேச வீரனுக்கான அந்தஸ்தும் உயர ஆரம்பிக்கிறது.      

 

Virat Kohli

 

இது குறித்து விராட் கோலி ஒருமுறை கூறுகையில், "2012 ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு வீட்டில் கண்ணாடி முன்பு வந்து நின்றேன். சர்வதேச வீரனாக இருக்க வேண்டுமென்றால் உன்னுடைய உடற்தகுதி இப்படி இருக்கக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிகொண்டேன். இந்த உடலை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்று எனக்கு நானே கேள்வியும் கேட்டுக்கொண்டன். மறுநாளில் இருந்து 2 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தேன். உணவுப் பழக்கத்தை முறைப்படுத்தினேன். அடுத்த ஏழு மாதத்தில் 8 கிலோவரை உடல் எடையைக் குறைத்தேன். அதற்கான பலன் என்னவென்று மைதானத்தில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. சாதாரண விராட் கோலியாக இருக்காமல், இவரை அவுட் செய்யாவிட்டால் நாம் தோற்றுவிடுவோம் என்று எதிரணி எண்ணக்கூடிய விராட் கோலியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதை நோக்கி நான் மாறிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

 

அடுத்தது என்ன... இன்னும் இதைச் சிறப்பாகச் செய்வது எப்படி என்பது குறித்தான தேடல்கள் எந்த அளவிற்கு வெற்றியை வீரியப்படுத்தும் என்பதற்கு விராட் கோலியின் வாழ்க்கை உதாரணம்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

அன்று ஜாதிப்பெயரை சொல்லி அழைத்தார்கள்; இன்று ஸ்டைலிஸ்ட் என்கிறார்கள்... இமேஜை மாற்றிய சி.கே.குமரவேல் | வென்றோர் சொல் #38

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.