Skip to main content

'படம் பாக்கும்போது எனக்கு ரொம்ப புடிச்சவுங்க ஸீன்ல வரும்போது எந்துருச்சுப்போயி..' இம்சை அரசன் டாக்ஸ் #5

Published on 16/10/2019 | Edited on 23/10/2019

ஆஹா.... கூடுவிட்டு கூடுபாயுறதுன்னா மந்திரதந்திரம் சம்பந்தப்பட்ட ஏவாரங் கெடயாது. பழய சினிமாவுக்குள்ள... அதுல வர்ற கேரக்டர்களுக்கு உள்ள புகுந்து அத அலசி ஆராயிறதுதான். நடிகர்திலகம் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம். "சில பேரு சொல்லுவாங்க... ‘எம்.ஜி.ஆருக்கு நடிக்கத் தெரியாது'ன்னு. அப்புடி சொல்றது முட்டாத்தனம். மக்கள் திலகம் எவ்வளவோ படங்கள்ல குணச்சித்திரமா பிரமாதமா நடிச்சிருப்பாரு. தெனமும் ராத்திரியில பழய படங்கள போட்டுப் பாப்பேன். பள்ளிக்கொடத்து புள்ளைகளுக்கு லீவு விட்டா குடும்பத்தோட ஊட்டி, கொடைக்கானலு போவாக. நமக்கு ரவயில ஒக்காந்து நடுச்சாமம் வரைக்கும் பழய படங்கள பாத்து அதுல வர்ற ஒவ்வொரு கேரக்டராவும் என்னய கற்பன பண்ணி கதைக்குள்ள டூர் போவேன்.
 

b



அரசகட்டளை, ஆண்டவன் கட்டளை, பாசம், பாசமலர், அன்பே வா, புதிய பறவை, பணத்தோட்டம், பாகப்பிரிவினை, மன்னாதி மன்னன், மனோகரா, மகாதேவி, பராசக்தி, மலைக்கள்ளன்..... இப்புடி எம்புட்டோ காவியங்கள குடும்பத்தோட ஒக்காந்து பாப்போம். எப்பேர்பட்ட நடிகர்கள், என்ன மாதிரி நடிப்பு? இதெல்லாம் நாம செஞ்ச பாக்கியம்னுதான் சொல்லணும். ஜெய்சங்கர், முத்துராமன், எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா, தேங்கா சீனிவாசன், வீ.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன், நாகேஷ், சிவகுமார், சோ, பாலையா, தங்கவேலு, சந்திரபாபு, என்.எஸ்.கே, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.சுப்பையா, ரெங்காராவ், சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, தேவிகா, பத்மினி... இப்புடி இவங்ககிட்ட இருந்து கத்துக்கிற எவ்வளவோ இருக்கு. இவுங்க நடிச்ச படங்கள்ல இவுங்க வச்ச நடிப்பு பந்தியில ரசிகனா ஒக்காந்து சாப்பிட்டவன் நான். "மாயாபஜார்'ல ரெங்காராவ் வருவாரே.... ஆஹஹ்ஹஆஹா... நான் ‘"இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்துல ‘"மன்... தருமன்.... எமதருமன்...'னு பண்ற ஸீன்கள்ல ரெங்காராவத்தான் நெனச்சுக்கிட்டேன். இப்படி பழய படங்கள பாக்குறதுனாலதான் வரலாற்று படமா ‘"இம்சை அரச'னையும், புராண படமா "இந்திரலோகத்தில் அழகப்ப'னயும் பண்ண முடிஞ்சது.

படம் பாக்கும்போது எனக்கு ரொம்ப புடிச்சவுங்க ஸீன்ல வரும்போது எந்துருச்சுப்போயி டிவியில தெரியிற அந்த உருவத்த கன்னத்தக் கிள்ளி "எப்பேர்பட்ட ஆளுய்யா நீ'ன்னு கொஞ்சுவேன். எம்.ஜி.ஆர டி.வி.யில பாத்து அழுதுருவேன். இந்த மாதிரி எம்புட்டோ ரசிகர்கள் இருக்காங்க. ஆனா ஒரு வி.ஐ.பி. ரசிகரும் இந்த மாதிரிச் செய்வாராம். அவரு யாருங்கிறீகளா? இப்பத்தேன்... கொஞ்சநாளக்கி முன்னாடி சீர்காழி கோவிந்தராஜனுக்காக ஒரு விழா நடந்துச்சு. அதுல பேசின அந்த வி.ஐ.பி. தன்னோட நண்பரான சிவாஜியப் பத்தி நெனவுபடுத்தி பேசினாரு. அப்பச் சொன்னாரு... ‘"தொலைக்காட்சிகளில் சிவாஜி நடித்த படங்களைப் பார்க்கும் போது எனது கண்கள் கலங்கிப்போகும். எழுந்துபோய் திரையில் தெரியும் சிவாஜியின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுப்பேன்'னு பேசீருந்தாரு. பேசுனவரு நம்ம கலைஞர் அய்யாதான். நல்ல படங்களயும், நல்ல கலைஞர்களயும் கொண்டாடணும்.
 

 

n



ஒரு சினிமான்னா ஆத்தா, புள்ள, தாத்தா, பேரன், புருஷன், பொண்டாட்டி, அண்ணன், தங்கச்சி... இப்புடி எல்லாருமே ஒக்காந்து கூச்சமில்லாம பாக்குற மாதிரி இருக்கணும். ஆபாச படமா இருந்துச்சுன்னு வைங்க... என்ன செய்வேன் தெரியுமா? டி.வி. மேல காறித்துப்பிட்டு ஆஃப் பண்ணிப்புட்டு போய் படுத்துருவேன். காலேல எந்துரிச்சதுமே டி.வி.ய தொடச்சு விட்றுவேன். விஜய் சொன்னாரு.... "வடிவேலண்ணே.... ஒங்களுக்குனு ஒரு ரூட்டப்புடுச்சு போய்க்கிட்டிருக்கீங்க'னு என்னய பெருமப் படுத்துற மாதிரி சொன்னாரு. இப்படி ராவும், பகலும் நான் எடுத்துக்கிற பயிற்சிகள்தான் எனக்குன்னு ஒரு பாணிய நான் உருவாக்கிக்கிற காரணம். என்னோட அறிமுகப்படமான "ராசாவின் மனசிலே' படத்துல எனக்கு சாப்பாட்டுராமன் கேரக்டர் மாதிரி. எப்பப் பாத்தாலும் பசிச்ச வயிறோட இருக்க மாதிரி வர்ற அந்த கேரக்டருக்கு வயித்த தடவிக்கிட்டே இருக்குற மாதிரி ஒரு மேனரிஸத்த சேத்தேன். அப்ப இருந்து இன்னக்கி வரைக்கும் அந்த ஈடுபாட்டோடதான் நடிச்சுக்கிட்டு வர்றேன்.

விஜய்கூட தொடர்ந்து நடிச்சுக்கிட்டு வந்தாலும் "ஃப்ரெண்ட்ஸ்' பட காமெடி செமத்தியா இருக்கும். அதுல காண்ட்ராக்ட்டரா வருவேன். என்கிட்ட விஜய், சூர்யா ரெண்டுபேரும் அப்ரண்டீஸா வேல பாப்பாங்க. பொதுவா காண்ட்ராக்ட்டு எடுத்து வேல செய்ற ஆளுகள பாத்தீகண்டா.... எப்பவும் டென்ஷனோடதான் இருப்பாக. அந்த எபெக்ட்ட கொண்டு வர்றதுக்காக நான் ஊர்ல இருக்கிறப்ப பாத்த ஒருத்தரோட ஆக்டிவிட்டீஸ அள்ளிப் போட்டுக்கிட்டேன். "என்னடா மூலச்சூட்டுக்காரன் மாதிரி எரிஞ்சு விழுற?'னு டென்ஷன் பார்ட்டிகள பாத்து கேப்பாங்க. அந்த மூலச்சூட்டுக்காரன் டென்ஷன அந்த கேரக்டருக்கு கொண்டு வந்தேன்.
 

n



அவரு துபாய் ரிட்டன். அவருக்கு மூலவியாதி. அதனால எப்ப நார்மலா இருப்பாரு... எப்ப கொலவெறி கோவத்தோட இருப்பாருன்னே தெரியாது. மூலவியாதி ரொம்ப மோசமானது. "நொங்கு தின்னவன் தப்புச்சிட்டான், நோண்டித்தின்னவன் சிக்கிக்கிட்டான்னு ஒரு சொலவட ஊர்ல சொல்லுவாங்க. வாய கட்ட முடியாம கண்டதுகடியதையும் மச்சக்கு மச்சக்குனு தின்னுபுடுறது. வாய் செஞ்ச தப்புக்கு பாவம்... காலேல வெளிக்கி போகும்போது குண்டிதான் வேதனய அனுபவிக்கும். ஆயிருக்கப் போகயில மூலம் வந்தவன் படுறபாடு இருக்கே... யாருக்குமே அந்த அவஸ்த வரக்கூடாது. வழக்கமா எல்லாரையும் மாதிரித்தான் ஆயி இருக்க குத்தவச்சு ஒக்காருவாக. அப்புடியே தம் கட்னா வலியில கண்ணுமுழி பிதுங்கி.... கதவ புடுச்சிக்கிட்டு எந்திருச்சு நின்னமானிக்கே போவாக. காலேல ஆயி போறதுல ஆரம்புச்ச அந்த வலி... சாயங்காலம் வரைக்கும் சடுகுடு ஆடீட்டுத்தான் விடும். ஒடம்புக்கு நல்லத மட்டும் சாப்புடணும்... கக்கூஸ் போகும்போது ‘"மகராசா... நல்லா இருடா'ன்னு குண்டி நம்மள கும்புடணும். இத மறக்காம மனசுல வச்சுக்கிட்டு சாப்பாடு தட்டு முன்னாடி ஒக்காருங்க.
ஓக்கே.... துபாய் ரிட்டனுக்கு வருவம். அப்புடியே அந்த ஜிகுஜிகு சட்ட வேஷ்டிய போட்டுக்கிட்டு சென்ட்ட அள்ளி அப்பிக்கிட்டு வீட்டு வாசப்படிய தாண்டுனாருன்னா வீதி முக்குக்கு வாசம் வந்துரும்.

"அலோ துபாயா?'னு ஒருத்தன் கோடுவேடு குடுத்திட்டான்னா எல்லாப் பயலுக்கும் கொண்டாட்டந்தான். அவர கூப்புட்டு வச்சு கும்மி அடுச்சிறுவாய்ங்க. கடசியில கலவரமாகி ரணகளமாகப் போகுதுன்னு அவருக்கு தெரியும். இருந்தாலும் அவரால தன்னோட துபாய் அனுபவங்கள ஒருநாளக்கி நாலு தடவயாவது சொல்லாம இருக்க முடியாது."துபாயி இருக்கே துபாயி'னு அதோட அருமபெருமய அள்ளி விடுவாரு. "யீங்... யீங்... அடடா... யீங்... அய்யய்யோ... அப்புறம்?.... அடடே... அதுதான பாத்தம்...' -இப்படி பலப்பல பாவனைகள் குடுத்து சுவராசியமா கேட்டுக்கிட்டிருப்பாய்ங்க. நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கும். அப்பப்பாத்து கேப்பாய்ங்க பாரு ஒரு கேள்விய... மூலத்துல மொளகாப் பொடிய தடவுன மாதிரி சூறாவளியே சுத்தி அடிக்கும். என்ன கேப்பான் தெரியும்ல?!


அடுத்த பகுதி - 6

 

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

''டக்குனு நீங்களும் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க'' - நடிகர் வடிவேலு பேட்டி 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
vadivelu

விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மோட்ச தீபம் ஏற்ற வந்த நடிகர் வடிவேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அம்மா இறந்து ஒரு வருடம் ஆகிறது. அம்மாவின் திதிக்கு இங்கு மோட்ச விளக்கு போடுவதற்காக நான் வந்திருக்கிறேன். என்னுடைய தெய்வம் அவர்கள். அவர் இறந்த துக்கம் என்னை விட்டு இன்னும் போகவில்லை. அம்மா இறந்த ஆறு மாசத்தில் தம்பி இறந்துட்டாரு. அந்த இரண்டு துக்கமும் இன்னும் குடும்பத்தை போட்டு வாட்டுது. இன்னும் அதில் இருந்து நாங்கள் மீளவில்லை. இப்பதான் அம்மாவிற்கு முடிந்திருக்கிறது. இன்னும் ஆறு மாதம் கழித்து தம்பிக்காக இங்க வந்து மோட்ச தீபம் ஏத்தணும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''எல்லாருமே வரலாமே (செய்தியாளர்களை நோக்கி) நீங்களும் கூட வரலாம். வீடியோ கேமரா எடுத்துக் கொண்டிருக்காமல் நீங்களும் வரலாம். வேலை இருக்கிறதா? வர வேண்டியதுதானே. இப்படியே கேமராவை பிடித்துக் கொண்டு எத்தனை நாள் வேலை பார்ப்பீர்கள். டக்குனு நீங்கள் உள்ளே வந்து ஒரு கட்சிய ஆரம்பிங்க. வாங்க எல்லாரும் அரசியல் கட்சி ஆரம்பிங்க. மக்களுக்கு நல்லது செய்வதற்கு யாராக இருந்தாலும் வரலாம். யாரும் வரக்கூடாது என்று சொல்லக்கூடாது. எல்லாரும் வந்தார்கள். டி.ராஜேந்தர் வந்தாரு, ராமராஜன் வந்தாரு, பாக்யராஜ் வந்தாரு எல்லாரும் நல்லது செய்யத்தான் வந்தாங்க. அது மாதிரி நல்லது செய்ய வருகிறார்கள். வருபவர்களை வரவேற்கிறோம். வரட்டும் வந்து மக்களுக்கு நல்லது செய்வது தப்பில்லையே வரட்டும்'' என்றார்.