Skip to main content

முடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

usain bolt

 

இரவு 7 மணியைத் தாண்டிவிட்டால் கடிகார முள்ளின் ஓசை கேட்கக்கூடிய அளவிற்கு அமைதி குடிகொள்ளும் அழகிய கிராமம், ஷெர்வூட் கான்டென்ட். பசுமையான காடுகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கிராமத்தில் மளிகைக்கடை நடத்தி வருபவர் வெல்லஸ்லீ போல்ட். 1986-ஆம் ஆண்டு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

 

பிறந்தது ஆண்குழந்தை என்பதால் வெல்லஸ்லீ போல்ட்டிற்கு கூடுதல் மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட வருடம் நிலைக்கவில்லை. குழந்தை வளர வளர அவனுக்குள் சுட்டித்தனமும் வளர ஆரம்பிக்கிறது. வசிப்பிடத்தைச் சுற்றி இருந்த காடுகளுக்குள் திரிவது, பள்ளத்தாக்குகளுக்குள் ஏறி இறங்குவது, உயரமான இடங்களில் இருந்து கீழே குதிப்பது உள்ளிட்ட பல அபாயகரமான செயல்கள் அவனுக்குப் பொழுதுபோக்குகளாக மாறின. வயதிற்கு மிஞ்சிய உயரம், எப்போதும் துருதுருவென இருக்கும் செயல்பாடுகளால் குழம்பிப்போன வெல்லஸ்லீ போல்ட், மருத்துவரிடம் தன் குழந்தையை அழைத்துச் செல்கிறார். அக்குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், "உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லை... பையன் பிற குழந்தைகளை விட உத்வேகமாக இருக்கிறான். சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் பெரிய ஆளாக வருவான்" எனக் கூறி அனுப்புகிறார். பின்னாட்களில், அந்த மருத்துவர் வாக்கு தெய்வ வாக்காகப் பலித்தது. ஆம், 'மின்னல் வேக மனிதன்' என உலகம் கொண்டாடும் தடகள ஆளுமை உசைன் போல்ட்டே அந்தக் குழந்தை.

 

1986-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஜமைக்கா நாட்டில் வெல்லெஸ்லீ போல்ட் மற்றும் ஜெனிஃபர் போல்ட் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர், உசைன் போல்ட். குடும்பத்தில் மொத்தம் 3 குழந்தைகள். மளிகைக் கடையில் இருந்து கிடைக்கும் வருமானம் மூலமாக உணவிற்கு கஷ்டமில்லாத நடுத்தர வாழ்க்கையைத் தனது குடும்பத்தினருக்கு உறுதிப்படுத்தியிருந்தார், வெல்லஸ்லீ போல்ட். சிறுவயதில் துருதுருவென காணப்பட்ட உசைன் போல்ட்டிற்கு முழுக்கவனமும் விளையாட்டு மீதே இருந்தது. கால்பந்து, கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தாலும் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே அவரது இளமைக்கால ஆசை. அதற்கான திறமையும் அவருக்குள் இருந்ததால், தெருவில் உடன் விளையாடியவர்கள் பலரும் உசைன் போல்ட் வேகப்பந்து வீச்சாளர் ஆவார் என்றே எதிர்பார்த்துள்ளனர். உசைன் போல்ட்டின் திறமை மற்றும் உடல்வேகத்தைக் கண்ட பள்ளி விளையாட்டு ஆசிரியர், கிரிக்கெட்டை விடுத்து தடகளப் போட்டிகளில் கவனம் செலுத்த அறிவுறுத்துகிறார். கிரிக்கெட் கனவைக் கைவிட அவருக்கு விருப்பமில்லாததால் முதலில் மறுக்க, பின் தந்தையும் கேட்டுக்கொண்டதால் கவனத்தை தடகளத்தின் பக்கம் திருப்புகிறார் உசைன் போல்ட். அதன்பிறகு, தடகள வரலாற்றின் பக்கங்களில் வண்ணமயமாக எழுதப்பட்ட பக்கங்கள் உலகறிந்ததே.

 

usain bolt

 

"நல்ல அமைதியான சூழல் கொண்ட எங்கள் ஊரில், அதிகாலை எழுவது என்பது புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய உணர்வாக இருக்கும். சிறு வயதில் மழையில் நனைந்தது, அங்கு கிடந்த நீரில் வெறுங்காலுடன் நடந்தது இன்றும் நினைவில் உள்ளது. என்மீது அதீத அன்பு கொண்டவராக என் அம்மா இருந்ததால், நான் செய்கிற தவறுகளை என் அப்பாவிடம் கூறமாட்டார். ஊரில் கிடைக்கிற தென்னைமட்டையை 'பேட்'-டாக மாற்றி கிரிக்கெட் விளையாடுவோம். கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்தது. பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் போது, என் விளையாட்டு ஆசிரியர் தடகளப் போட்டியில் கவனம் செலுத்துமாறு கூறினார். அவரைத் தொடர்ந்து, என் அப்பாவும் கேட்டுக்கொண்டதால் வேகமாக ஓடுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.

 

என்னுடைய 14 வயதில் ஹங்கேரியில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டதே என்னுடைய முதல் சர்வதேசப் போட்டியாகும். அதில், அரை இறுதியில் தோற்று வெளியேறினேன். அடுத்த வருடம் கிங்ஸ்டனில் நடைபெற்ற உலக இளையோர் சாம்பியன்ஷிப் போட்டியில் என்னை விட மூன்று வயது அதிகமானவர்களோடு இணைந்து ஓடினேன். அவர்களை வீழ்த்தி வெற்றிபெற முடியுமென நம்பிக்கை இல்லாததால் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லையென என் அம்மாவிடம் கூறினேன். முடிவு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறி அம்மாதான் என்னை அனுப்பி வைத்தார். அதில் பெற்ற வெற்றிதான் என்னுடைய முதல் சர்வதேச வெற்றி. நான் இன்று 'உலகின் மின்னல் வேக மனிதனாகிவிட்டேன்'. இருப்பினும், அந்தத் தருணத்தையே என் வாழ்வின் சிறந்த தருணமாகக் கருதுகிறேன்".

 

ஜூனியர் போட்டிகள், சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்று வந்த உசைன் போல்ட், முதல்முறையாக 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீ, 200மீ, 400மீ தொடர் ஓட்டம் என மூன்றிலும் தங்கம் வென்று அசத்தி, முத்திரைப் பதித்தார். 100 மீ ஓட்டத்தில் 9.69 வினாடியில் இலக்கை எட்டிய உசைன் போல்ட், உலகின் வேகமான மனிதன் என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார். நான்கு வருடம் கழித்து நடந்த அடுத்த ஒலிம்பிக் போட்டியில், 100மீ தூரத்தை 9.63 வினாடியில் எட்டி தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்தார். அந்த ஒலிம்பிக் தொடரிலும் மூன்று வடிவ ஓட்டங்களிலும் வெற்றித் தொடர்ந்தது. 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் இவ்வெற்றி தொடர, மூன்று ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மூன்று வடிவ ஓட்டங்களிலும் தங்கம் வென்ற வீரர் என்ற சாதனை, உசைன் போல்ட் வசமானது. 

 

cnc

 

தன்னுடைய வெற்றியின் ரகசியம் குறித்துப் பகிர்ந்த உசைன் போல்ட், "ஓட்டத்தில் என்னை விடச் சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்துபவர்கள் இருக்கலாம். ஆனால், போட்டியை முடிப்பதில் நானே சிறந்தவன். உங்கள் கனவின் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த உலகில் அனைத்தும் சாத்தியமானதே" என்கிறார்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

வேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ...! சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30
 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.