Skip to main content

கடத்தப்படும் குழந்தைகள்; இரக்கமில்லாமல் நடந்தேறும் கொடூரம் - திலகவதி ஐ.பி.எஸ். பகிரும் தடயம்: 44

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
 thilagavathi-ips-rtd-thadayam-44

பல்வேறு கொலை, குற்றச் சம்பவங்களை ‘தடயம்’ என்னும் தொடரின் வழியே தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மிடம் விளக்கி வருகிறார். 

இந்த வழக்கு மஹாராஷ்டிராவில் நடந்தது. நாசிக் போலீஸ் ஸ்டேஷனில் பிரதீபா என்பவர் தன் கணவன் மோகன் காவிட் என்பவருடன் வந்து தன் 9 வயது மகளை சொந்தக்காரர்கள் கூட்டிச் சென்றார்கள். ஆனால் அவர்கள் இப்போது திருப்பிக் கொடுக்க மறுக்கிறார்கள் என்று புகார் அளிக்கின்றனர். யார் வந்து மகளைக் கூட்டிச் சென்றார்கள் என்று கேட்டதற்கு தன் கணவனின் முதல் மனைவி அஞ்சனாபாயின் 24 வயது மகள் ரேணுகாவும் அவரது தங்கை சீமா என்பவர்களும் தான் கூட்டிச் சென்றனர் என்று கூறுகிறார். ஏற்கனவே அவரை சந்தித்து மகளைத்  திருப்பிக் கேட்டதற்கு, உன் மகள் திரும்பி வரமாட்டாள் எனவும், என் தாயின் வாழ்க்கையை கெடுத்ததற்கு பதில் இதுதான் என்று சொன்னதாக சொல்கிறார்.

மண்டலேஸ்வர் மாதவ்ராவ் காலே, சஷிகாந்த் என இரு காவலர்களும் இவர்களின் வழக்கை விசாரிக்கின்றனர். அந்த பெண்மணிகளின் விலாசம் அறிந்து நேரில் வீட்டிற்குச் செல்கின்றனர். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு நிறைய வெவ்வேறு வயதிலுள்ள குழந்தைகளின் ஆடைகளும், வீட்டின் சுவரில் ரத்தக்கறையும் படிந்திருக்கிறது. விரைவாக இரு சகோதரிகளையும் ரேணுகாவின் கணவரையும் பிடித்து இரண்டு நாள் விசாரிக்க, இரண்டாவது பெண் சீமாவும், ரேணுகாவின் இரண்டாவது கணவனான கிரண் ஷிண்டே என்பவரும் ஒத்துழைத்து உண்மையை சொல்லி விடுகின்றனர். கிரண் ஷிண்டே தனக்கு 1990 முதல் 1996 வரை கடந்த ஆறு வருடங்களாக என்ன நடந்தது என்று தெரியும் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். 

அஞ்சனா பாய் என்பவர் ரேணுகா குழந்தையாக இருந்தபோது கணவனால் கைவிடப்படுகிறார். இரண்டாவதாக எக்ஸ் ஆர்மிமேன் மோகன் காவிட் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு பிறந்தவரே சீமா என்பவள். அஞ்சனா பாய்க்கு  பிக்பாக்கெட் அடிப்பது, செயின் திருடுவது என்று அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தும் பழக்கம் இருக்கிறது. ஏற்கனவே அவள் மேல் 16 கேஸ்கள் இருக்கிறது. மேலும், அடிக்கடி ஜெயிலுக்கும் சென்று வந்து இருக்கிறாள். கணவன் மோகன் காவிட் எவ்வளவு சொல்லியும் அந்த பழக்கத்தை திருமணத்திற்கு பிறகும் விடவும் முடியாமல், தனது இரண்டு மகள்களுக்கும் விளையாட்டு போல சிறு வயதிலிருந்தே பழக்கி விடுகிறாள். மூவரும் சேர்ந்து இப்படி பல வருடமாக கூட்டம் நிறைய சேரும் கோவில்களில் திருடுவது, திருவிழாக்கள்  நடக்கும் பல  ஊர்களுக்குச் சென்று 3 நாட்கள் வீடு எடுத்து தங்கி திருடி வருகின்றனர். இப்படியாக கோலாப்பூரில் ரேணுகா தனது கைக்குழந்தையுடன் ஒருவரின் பர்ஸை திருடும்போது, அவர் பார்த்து அவளை பிடித்துவிட கத்திக் கூச்சல் போட கூட்டம் கூடுகிறது. ரேணுகாவோ கைக்குழந்தை வைத்துக் கொண்டு எப்படி திருடுவேன் என்று பரிதாபமாக கேட்க, அவளை நம்பி விட்டு விடுகின்றனர்.

இது ஒரு நல்ல வாய்ப்பாக தோன்ற மூவரும் ஐந்து வயதுக்கு உட்பட்ட  குழந்தைகளை கடத்தி அவர்களை வைத்து திருடினால் சந்தேகம் வராது தப்பித்துக் கொள்ளலாம் என்று, அதில் இறங்குகின்றனர். ஒரு பிச்சைக்காரியின் கைக்குழந்தையையும் நயவஞ்சகமாகப் பேசி கடத்தி, அதனை வைத்து பல இடங்களில் திருடுகின்றனர். ஒருமுறை கையும் களவுமாக கூட்டத்தில் மாட்டும்போது கூட, அந்த ஒரு வயது குழந்தையையே அஞ்சனா பாய் இரக்கமே இல்லாமல் தரையில் அடித்து காயமாக்கி, கூட்ட நெரிசலால் தான் குழந்தை அடிப்பட காரணம் என்று கவனத்தை திசை திருப்பி அழுது தப்பிக்கின்றனர். அந்த குழந்தையின் தொடர் அழுகையினால், தொழில் பாதிக்க அதனையும் கொடூரமாக இரும்பு ராடை வைத்து அடித்து பழைய வண்டிகள் இருக்கும் கராஜில் தூக்கிப் போட்டு தப்பித்து தானே என்ற ஊருக்கு வந்து விடுகிறார்கள். அந்த குழந்தையின் பாடியை கண்டெடுத்து காவலர்கள் லக்ஷ்மிபூரில் கேஸ் பதிவு செய்தாலும், யாரும் வந்து குழந்தையை காணவில்லை என்று தேடாததால், அந்த கேஸ் அப்படியே நடத்தப்படாமல் விடப்படுகிறது. 

தானேவில் இதேபோல பஸ் ஸ்டாண்டில் ஒன்பது மாத குழந்தையை வைத்திருக்கும் ஒரு அம்மாவிடம் இப்படி நயமாக பேசி குழந்தையை தூக்கி வந்து விடுகிறாள் ரேணுகா. ஏற்கனவே இரண்டாவது கைக்குழந்தையை வைத்திருக்கும் ரேணுகா, கடத்தி வந்திருக்கும் குழந்தைக்கும் சேர்த்து பாலூட்டி வைத்துக் கொள்கிறாள். ஆனால் அதிகமாக அழும் குழந்தையை தங்கள் தொழிக்கு ஒத்து வராது என்பதால், அந்த குழந்தையை நாசிக் என்றொரு ஊரில் ராம்குண்ட் கோவிலில் விட்டுவிடுகிறாள். அந்த குழந்தையும் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு விடுகிறது. ஆனாலும் ஏனோ ஒரு பயத்திலோ, பற்றிலோ அந்த குழந்தை தங்களுடையது தான் என்று ரேணுகா பொய் கேஸ் பதிய, நிறைய விசாரணைக்கு பிறகு போலீசிடம் செல்லுபடி ஆகவில்லை. அந்த ஆசிரமத்தில் விடப்பட்ட குழந்தை நரேஷ் என்ற பெயரில் 28 வயது ஆகி இப்போது நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளார். 

அதன் பின் அஞ்சனா பாயும், இரண்டு பெண்களும் என்ன செய்கிறார்கள் என்று அடுத்த தொடரில் காண்போம்...