Skip to main content

நீளமான டெலஸ்கோப்புகள்

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

கத்தோலிக்க தேவாலயம் கலிலியோவை மிரட்டித் தனிமைப் படுத்தியது. ஆனால் அவர் வெளியிட்ட கோட்பாடுகள் விரைவாக பற்றிக் கொண்டன. ஐரோப்பா முழுவதும் டெலஸ்கோப் பரவியது.

 

telescope

 

அறிவியல் பூர்வமான உண்மைகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற தத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஜெர்மனியில் பிறந்தவர் ஜோகன்னஸ் கெப்லர். இவர் கண்ணாடி குறித்து ஆய்வு செய்தவர். பிறகு வானவியலில் ஈடுபாடு கொண்டார்.

 

இவர் தான் கண்ணாடி லென்ஸ் எவ்வாறு ஒளியை பிரதிபலிக்கிறது என்பதை முதன்முதலில் புரிந்து கொண்டவர். லென்சுகளின் வடிவத்தை மாற்றி அவை பொருத்தப்படும் இடங்களை மாற்றினால் டெலஸ்கோப்பில் தெரியும் உருவத்தின் தரம் உயரும் என்று கெப்லர் கூறினார்.

 

டெலஸ்கோப்பின் முதல் லென்ஸ், குழிலென்ஸாக இருந்தது. அடுத்தது குவிலென்ஸாக இருந்தது. குழிலென்ஸுக்கு பதிலாக குவிலென்ஸை பொருத்தினார் கெப்லர். இது பார்க்கிற உருவங்களை பெரிதாக காட்ட உதவியது. கலிலியோ உருவாக்கிய டெலஸ்கோப்புக்கு பதிலாக இரண்டு குவிலென்ஸ் பொருத்தப்பட்ட கெப்லரின் டெலஸ்கோப்புகள் வரவேற்பை பெற்றன. இருந்தாலும் பிரகாசமான கோள்களைச் சுற்றி தோற்றமளிக்கும் வண்ண வளையங்கள் கெப்லரின் டெலஸ்கோப்பில் சிதறின. ஒவ்வொரு வண்ணத்தையும் வேறுபட்ட அளவில் லென்ஸுகள் வளைத்தன.

ஆனால், மங்கலான தோற்றத்தை தெளிவாக காட்டியது கெப்லரின் டெலஸ்கோப். கோளவடிவிலான லென்ஸ்கள் ஒளிக்கதிர்களை வளைக்கின்றன. அவை ஒளியை ஒரே இடத்தில் சந்திக்கவிடாமல் செய்கின்றன.

 

telescope

 

மனிதனின் விழிலென்ஸை நன்கு ஆய்வு செய்த கெப்லர், கோளவடிவிலான லென்ஸைக் காட்டிலும் வித்தியாசமான வடிவத்தில் டெலஸ்கோப் லென்ஸ் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். ஆனால் வேறுபட்ட வடிவங்களில் லென்ஸ்களை உருவாக்கும் தொழில்நுட்பம் அறிமுகமாகவில்லை. அதே சமயம் வழக்கமான வளைவுகளை காட்டிலும் கூடுதல் வளைவுடன் கோளவடிவ லென்ஸ்களை உருவாக்கினர். இந்த லென்ஸ்கள் ஒளியை குறைவாகவே வளைத்தன.

 

டெலஸ்கோப்பின் இரண்டு லென்ஸுகளுக்கும் இடைப்பட்ட தூரம் அதிகமானால் மிகவும் தொலைவுள்ள பொருட்களை அருகில் பார்க்க முடியும் என்று வானியல் அறிஞர்கள் உணர்ந்தனர். எனவே அவர்கள் மிக நீளமான டெலஸ்கோப்புகளை பயன்படுத்த தொடங்கினர்.

 

டெலஸ்கோப்புகளின் நீளம் நாளடைவில் மிக அதிகமாக நீண்டு கொண்டே போனது. சில டெலஸ்கோப்புகள் 100 அடி நீளம் வரை இருந்தன. இத்தகைய டெலஸ்கோப்புகளை பயன்படுத்துவதில் நிறைய சிரமங்கள் இருந்தன.

 

இந்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. ஒரு சமயத்தில் 1000 அடி நீளத்தில் டெலஸ்கோப் உருவாக்கினால் நிலவில் வாழும் விலங்குகளைக் கூட பார்க்கலாம் என்று கூறும் அளவுக்கு சிலர் போனார்கள். நீளமான டெலஸ்கோப்புகள் கூடுதல் கவனத்தை பெற்றாலும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இருந்தாலும், அந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 30 முதல் 40 அடி நீள டெலஸ்கோப்புகளில்தான் முக்கியமான பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.

 

1600களின் தொடக்கத்தில் கலிலியோ தனது 4 அடி நீள டெலஸ்கோப்பை உருவாக்கினார்.  1647ல் போலந்து நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் ஹவேலியஸ் 12 அடி நீள டெலஸ்கோப்பை உருவாக்கினார். அது ஒரு தொடக்கம் தான்.

 

12 அடி நீளமுள்ள டெலஸ்கோப்புகள் பார்க்கும் உருவத்தை 50 மடங்கு பெரிதாக காட்டின. அவை வானியல் அறிஞர்களுக்கு போதவில்லை. ஹவேலியஸ் 60 முதல் 70 அடி நீளமுள்ள டெலஸ்கோப்பை உருவாக்கிப் பயன்படுத்தினார்.

 

அதுவும் திருப்தி அளிக்காததால் பால்டிக் கடற்கரையோரம் 150 அடி நீள டெலஸ்கோப்பை நிறுவினார். இதற்காக அவர் 90 அடி உயரத்தில் ஒரு கம்பத்தை நட்டார். அதன் குறுக்காக மரக்குழல் ஒன்றை அமைத்தார். காற்றில் அசையாமல் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். இருந்தாலும், அந்த டெலஸ்கோப் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பலமான காற்றில் அது அசைந்தது. தெளிவான உருவம் கிடைக்கவில்லை. எனவே எப்போதாவது மட்டுமே அது பயன்பட்டது.

 

ஜோகன்னஸ் ஹவேலியஸ் வாழ்க்கை குறிப்பு

 

போலந்து நாட்டைச் சேர்ந்த டான்ஸிக் என்ற நகரில் மிகப் பெரிய செல்வந்தரின் மகனாக பிறந்தவர் ஹவேலியஸ்.

 

சட்டம் படித்த இவர் ஐரோப்பா முழுவதும் சுற்றினார். பிறகு, தனது சொந்த ஊரிலேயே மதுபான தொழிற்சாலையை உருவாக்கினார். அரசியலிலும் ஈடுபட்டார்.

 

அந்த சமயத்தில்தான் வானவியல் பிரபலம் அடைந்தது. ஹவேலியஸும் வானத்தின்பால் ஈர்க்கப்பட்டார். 1641ஆம் ஆண்டு தனது வீட்டிலேயே முதல் ஆய்வுக்கூடத்தை அமைத்தார். விரைவிலேயே சிறிய அளவு ஆய்வுக்கூடம் உதவாது என்று புரிந்துகொண்டார்.

 

வானத்திலுள்ள நட்சத்திரங்களை வரைபடமாக கொண்டுவர வேண்டும் என்று அவர் விரும்பினார்.

 

டெலஸ்கோப்புகள் வேலை செய்யும் விதம் குறித்த ஹவேலியஸின் ஞானம் நீளமான, மிக நீளமான டெலஸ்கோப்புகளை உருவாக்க தூண்டியது. இவர் அமைத்த 150 அடி நீள டெலஸ்கோப்பை பார்க்க போலந்து ராஜாக்களும், ராணிகளும் வந்த வண்ணம் இருந்தார்கள்.

 

இவருக்கு தேவையான உதவித் தொகை அளிக்கவும் உத்தரவிட்டார்கள். அன்றைய காலகட்டத்திலிருந்த ராயல் சொஸைட்டியில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

 

நிலவின் மிக விரிவான வரைபடத்தை இவர் உருவாக்கினார். புதன் கிரகத்தின் படிப்படியான தோற்றங்களை வரைந்தார். சூரியனின் மேற்பரப்பில் தெரியும் கரும்புள்ளிகளை கண்டறிந்தார். ஏராளமான குறுங்கோள்களை கண்டறிந்து தெரிவித்தார்.

 

1663ஆம் ஆண்டு இவரது முதல் மனைவி இறந்தார். அதை தொடர்ந்து 16 வயது நிரம்பிய எலிசபெத் கூப்மேன் என்ற பெண்ணை மணந்து கொண்டார். இவர் தான் ஹவேலியஸின் ஆய்வுகளுக்கு உதவியாக இருந்தார். 1679ஆம் ஆண்டு ஹவேலியஸின் ஆய்வுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் அரிதான பல வரைபடங்கள் எரிந்து நாசமாயின.

 

ஆனால் 1687ல் ஹவேலியஸ் இறந்த பிறகு எஞ்சியிருந்த பல முக்கியமான வரைபடங்களை எலிசபெத் வழங்கினார்.

 

ஹவேலியஸின் நிலா வரைபடம் (1647)

 

hevelius moon art

 

முதல் டெலஸ்கோப் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹவேலியஸ் நிலவின் முதல் முழுமையான வரைபடத்தை உருவாக்கினார்.
 

தனது டெலஸ்கோப் மூலம் 4 ஆண்டுகள் நிலாவை இவர் ஆய்வு செய்தார். பகுதிபகுதியாக ஆய்வு செய்து முழுமையான வரைபடம் ஒன்றை உருவாக்கினார். நிலாவில் உள்ள மலைகளின் உயரத்தை கூட இவர் அனுமானித்தார்.

 

தான் வரைந்த வரைபடத்தில் நிலாவில் உள்ள மலைகளுக்கு பூமியில் உள்ள மலைகளின் பெயரையும், கடல்களின் பெயரையும் சூட்டினார்.

 

1647ல் ஹவேலியஸின் அட்லஸ் வெளியிடப்பட்டது. அதன் உதவியுடன் வானியல் அறிஞர்கள் நிலாவை ஆய்வு செய்தனர். அடுத்த 100 ஆண்டுகள் வரை அந்த வரைபடம் தான் வானியல் அறிஞர்களுக்கு உதவிகரமாக இருந்தது.

 

ஹவேலியஸின் டெலஸ்கோப் மற்ற டெலஸ்கோப்புகளைக் காட்டிலும் துல்லியமான விவரங்களை அளித்தது. அவர் வரைந்த நிலா வரைபடங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

 

வெறும் கண்ணால் பார்க்கும் போது நிலா கிரே மற்றும் வெள்ளை நிறம் கலந்த பந்து போல காட்சியளிக்கும்.

 

கலிலியோவின் நிலா வரைபடம் (1610)

 

galileo moon art

 

கலிலியோ தனது மிகச் சிறிய டெலஸ்கோப்புகளின் உதவியால் நிலாவை வரைந்தார். நிலவின் கரிய மற்றும் வெளிச்சம் மிகுந்த மேற்பரப்புகளை அவர் வரைந்திருந்தார்.

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.

Next Story

உலகப் பாரம்பரிய வார விழா; தொன்மைப் பொருட்கள் கண்காட்சி

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய வார விழாக் கொண்டாட்டம் 2023 தொன்மைப் பொருட்கள் கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவரும் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான நா. சுந்தரராஜன்  தலைமை வகித்தார், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் சு. காளீஸ்வரன் வந்தோரை வரவேற்றார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா நோக்க உரையாற்றினார். சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி தொல்நடைக் குழு பெருமைமிகு வழிகாட்டி செ. கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்  (பொறுப்பு) திருமதி ஜெயமணி அவர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மரபு நீட்சியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டையும் மரபையும் பாதுகாக்க முடியும் சிவகங்கையில் உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

 

சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், சிவகங்கை மகளிர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனீஸ்வரன், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் வள்ளி, பள்ளி ஆய்வாளர் இராதா கிருஷ்ணன்,சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் வித்தியா கணபதி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிவகங்கை தொல்நடைக்குழு செயலர் இரா.நரசிம்மன் நன்றியுரைத்தார்.

 

இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து மூன்று ஆண்டுகளாக உலகப் பாரம்பரிய விழாவை கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்தரங்க நிகழ்வாக நடைபெற்ற உலக பாரம்பரிய வார விழா இந்த ஆண்டு கண்காட்சியாக நடத்தப்பட்டது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற இக்கண்காட்சியில் 600 க்கு மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழுவினர், அவ்வப்போது மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவகங்கை சுற்றுப்பகுதியில் கிடைத்த இரும்பு உருக்கு ஆலை எச்சங்கள், மண்ணால் ஆன குழாய்கள், இரும்புக் கழிவுகள் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு,எலும்பு முனைக்கருவி, பானையோட்டுக் குறியீடுகள், சங்க கால செங்கல் மற்றும் மேற்கூரை ஓட்டு எச்சங்கள், வட்டச் சில்லுகள், ராஜராஜ சோழன்  பீஜப்பூர் சுல்தான் நாணயங்கள் உட்பட பழமையான நாணயங்களும் இருந்தது.

 

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக இணைச்செயலர் பீர்முகமது அவர்களது பத்தாண்டு கால சேகரிப்பில் உள்ள கலைநயமிக்க வெண்கலப் பொருள்கள், மரப் பொருள்கள், கத்திகள், வாள்கள், பழமையான செட்டிநாட்டு புழங்கு பொருட்கள், உரல் உலக்கை பழமையான கண்ணாடிப் பொருட்கள், இன்றைய பயன்பாட்டில் இல்லாத பழமையான மின்சாதன பொருட்கள், பலதரப்பட்ட தொலைக்காட்சிகள் பல வகையான வானொலிகள் முதலியவற்றுடன்  மௌண்ட் லிட்ரா பள்ளி மாணவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பனையோலைகள் பழமையான விளக்குகள் மற்றும் மன்னர் பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வளரி, வாள் பழமையான மின்சாதன பொருட்கள், விளக்குகள் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் காட்சிப் படுத்தப் பெற்றிருந்தன.

 

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு வைச்சேர்ந்த பொருளர் பிரபாகரன், இணைச் செயலர் முத்துக்குமார், சரவணன்,பாலமுருகன், அலெக்ஸ் பாண்டியன், முத்துக் காமாட்சி, மீனாள், மற்றும் மன்னர் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் பர்வத ரோகிணி, பழனிவேல் முருகன், தனலட்சுமி காந்தி அழகப்பன், வெங்கட கிரி,பிரசாத், மனோகரன் ஆகியோர்  செய்திருந்தனர். சிவகங்கை மன்னர்  கல்வி நிறுவனங்கள்  மற்றும் சிவகங்கை நகரைச் சுற்றியுள்ள பள்ளிகள் என மூவாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தொன்மைப் பொருட்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்.