Skip to main content

வேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ...! சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

Sundar Pichai

 

இணைய வளர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. எதிர்வரவிருக்கும் காலங்களில் இணையமே உலகின் இயங்கியலைத் தீர்மானிக்கக்கூடிய காரணியாக இருக்கும் என்பதை உணர்ந்த பல நிறுவனங்கள் இத்துறைக்குள் கால் பதிக்கத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருந்தன. ஏற்கனவே இருந்த இத்துறைசார் நிறுவனங்கள், தங்களது வேர்களை ஆழப்பதிப்பதற்கான முயற்சியில் கவனம் செலுத்த ஆரம்பித்தன.

 

லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரால் தொடங்கப்பட்டு ஆறு வயதே எட்டிய 'கூகிள்' என்ற நிறுவனத்தில், அந்தக் காலகட்டத்தில் நம் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழர் பணிக்குச் சேர்கிறார்.  நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்குபவர்களில், தொழில்நுட்ப அறிவு நிரம்பிய அந்த நபர் வழங்கும் ஆலோசனைகள் கவனிக்கத்தக்கவை. அந்த வகையில், ஒரு முறை, 'நம் நிறுவனத்திற்கென்று தனியாக ஒரு தேடுபொறி (BROWSER) வேண்டும்' என ஒரு ஆலோசனையை முன்வைக்கிறார். அதே காலகட்டத்தில் இணைய உலகில் முன்னணி நிறுவனமாக இருந்த 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்திடம் 'இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' எனத் தனியாக ஒரு தேடுபொறி இருந்தது. கூகுள் நிறுவனம் சிறிய அளவிலான நிறுவனமாக இருந்ததால் அந்த நபர் முன்வைத்த ஆலோசனை நிராகரிக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரு சிறிய 'டூல்பார்' உருவாக்கலாம் என முடிவெடுக்கப்படுகிறது.

 

நீண்ட ஆராய்ச்சி மற்றும் கடின உழைப்பிற்குப் பிறகு அறிமுகமாகிய 'கூகுள் டூல்பார்'-க்கு கிடைத்த வரவேற்பைக் கண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், 'இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' தேடுபொறியைத் தனது தயாரிப்பு பொருட்களில் கட்டாயமாகக் (DEFAULT ) கிடைக்கும்படி மாற்றியமைக்கிறது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத கூகுள் நிறுவனத் தலைவர் லேரி பேஜ், அடுத்த கட்ட நகர்வாக அந்த நபர் முன்வைத்த 'தனியாக ஒரு தேடுபொறி வேண்டும்' என்ற கோரிக்கையை ஏற்கிறார். அந்த நபரின் தலைமையிலேயே அதற்கான வேலைகள் தொடங்குகின்றன. 'கூகுள் தமிழன்', 'தொழில்நுட்ப உலகை ஆளும் தமிழன்' என இன்று நாம் பெருமைப் பட்டுக்கொள்ளும் சுந்தர் பிச்சையின் விஸ்வரூப வளர்ச்சி மற்றும் கூகுள் நிறுவனத்தின் அசுர எழுச்சிக்கான விதை இவ்வாறுதான் போடப்பட்டது.

 

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் ரகுனந்த பிச்சை-லட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை. ரகுனந்த பிச்சை பணி நிமித்தம் காரணமாக, குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்கிறது. இடப்பெயர்வு அடைந்து சென்னைக்கு வரும் சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கென்று சென்னை நகரம் பிரத்தியேகமாக வரையறுத்து வைத்திருக்கும் வாழ்க்கை முறையே சுந்தர் பிச்சை குடும்பத்திற்கும் அமைகிறது. தொழில்நுட்பம் சார்ந்த எந்தப் பொருட்களையும் காண முடியாத இரு அறைகள் கொண்ட வீட்டில்தான் அவரது ஆரம்பக்கால வாழ்க்கை. சுந்தர் பிச்சைக்கு 12 வயதாக இருக்கும் போது அவரது வீட்டிற்குள் முதல்முறையாக தொலைப்பேசி வடிவில் நுழைகிறது தொழில்நுட்பம்.

 

அதைப் பயன்படுத்தி தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஃபோன் செய்து பேசும் அனுபவம் அவருக்குள் பரவசத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் சுந்தர் பிச்சைக்கு ஏற்பட்ட ஆர்வத்திற்கான தொடக்கப்புள்ளி அவரது வீட்டில் இருந்த தொலைப்பேசியைப் பயன்படுத்திய அனுபவமே. அதன்பிறகான, பள்ளிப்படிப்பு, ஐஐடி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் படிப்பு, ஆரம்பக்கட்ட பணி, கூகுள் பணி, கூகுள் சி.இ.ஓ-வாக பதவி உயர்வு, அல்பபெட் சி.இ.ஓ பொறுப்புக் கிடைத்தது என அனைத்தும் நாமறிந்ததே.

 

"எந்தத் தொழில்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்த வாய்ப்பில்லாத சூழலில்தான் நான் வளர்ந்தேன். எனக்கு 12 வயது இருக்கும்வரை தொலைப்பேசியைப் பயன்படுத்தியதில்லை. நான் அமெரிக்கா செல்லும் வரை கணினி பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அமைந்ததில்லை. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய விமானப் பயணத்திற்கான செலவு, என் அப்பாவின் ஒரு வருட வருமானத்தைவிட அதிகம். நான் அமெரிக்காவில் இறங்கியபோது நான் நினைத்ததை விட அனைத்தும் வேறாக இருந்தது. என் பெற்றோரிடம் நான் ஃபோன் பேச வேண்டுமென்றால் ஒரு நிமிடத்திற்கு இரு டாலருக்கும் மேல் செலவாகும். கல்லூரி செல்வதற்காகப் பை வாங்கச் சென்ற போது அது என் தந்தையின் ஒரு மாத வருமானத்தைவிட அதிகமாக இருந்தது. என் பெற்றோர், நண்பர்கள், காதலி என அனைவரையும் நான் அதிகம் தவறவிட்டேன். நான் நினைத்த நேரத்தில் கணினி பயன்படுத்த முடியும் என்பதே அங்கு எனக்கு இருந்த ஒரு ஆறுதலான விஷயம். தொழில்நுட்பம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அந்தச் சமயத்தில் இணைய வளர்ச்சி ஏற்பட்டது. நான் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அதே வருடத்தில்தான் 'மொசைக்' தேடுபொறி வெளியானது. இணையம் ஒன்றே தொழில்நுட்பத்தை அதிகப்படியான மக்களிடம் கொண்டுசேர்க்க எளிமையான வழி என்பதை உணர்ந்து, என்னுடைய வேலையை விட்டுவிட்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன்".

 

Sundar Pichai

 

இன்று, தேடலை எளிமைப்படுத்தியுள்ள 'கூகுள் க்ரோம்', பயணத்தை எளிமைப்படுத்தியுள்ள 'கூகுள் மேப்ஸ்' ஆகிய செயலிகள் சுந்தர் பிச்சையின் மேற்பார்வையில் உருவானவையே. கூகுள் நிறுவனத்தில் சாதாரண ஊழியராக சுந்தர் பிச்சை பணிக்குச் சேர்ந்தது 2004-ஆம் ஆண்டு. சி.இ.ஓ-வாக பதவி உயர்வு பெற்றது 2015-ஆம் ஆண்டு. பணிக்குச் சேர்ந்து 11 ஆண்டுகளிலேயே ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார் என்றால் அவரது திறமை மற்றும் கடின உழைப்பைத் தாண்டி, அந்நிறுவனத்தின் மீது அவர் காட்டிய விஸ்வாசமே. வேலைபார்க்கும் நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு விஸ்வாசமாக இருக்கிறேன் என்ற பெயரில் பிற ஊழியர்கள் பற்றிக் குறை கூறுவது, புறம் பேசுவது என இல்லாமல் தன் பணியில் விஸ்வாசத்தை வெளிப்படுத்தினார். ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளம், பெரிய பதவி என வாய்ப்பு வந்த போதும் அதை மறுத்தவர், சுந்தர் பிச்சை.

 

cnc

 

ஒரு மேடையில் வெற்றிக்கான வழிகள் குறித்துப் பேசிய சுந்தர் பிச்சை, "உங்களை விடத் திறமையான நபர்களோடு இணைந்து பணியாற்றுங்கள். நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டுவிட்டால் உங்களுக்கு வசதியான வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என அர்த்தம். நான் திறமையாக வேலை செய்கிறேனா? என்னை விட அவர்கள் சிறப்பாகச் செய்கிறார்களோ? என்ற எண்ணங்களே தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வழிவகுக்கும். அமெரிக்கா வரும்வரை எந்தத் தொழில்நுட்பமும் சரிவரக் கிடைக்கப்பெறாத  நான், உங்கள் முன் இன்று நிற்கிறேன் என்றால் தொழில்நுட்பம் மேல் எனக்கு இருந்த காதலும் அதைத் திறந்த மனதுடன் நான் அணுகியதுமே. உங்கள் நண்பர்கள் என்ன செய்கிறார்கள், சமூகம் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறது, உங்கள் பெற்றோர்கள் விருப்பம் என்ன என்பதை விடுத்து உங்களை உற்சாகப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்" என்றார்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

அன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம்! 'மரங்களின் தாய்' திம்மக்கா! | வென்றோர் சொல் #29

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.