Skip to main content

அன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம்! 'மரங்களின் தாய்' திம்மக்கா! | வென்றோர் சொல் #29

Published on 23/01/2021 | Edited on 05/07/2021

 

Thimmakka

 

நீண்ட தூரம் நீளும் சாலையில் தங்கள் இணையுடன் கைக்கோர்த்து, இலக்கில்லாமல் நடக்க வேண்டும் என்பதே பெரும்பாலான தம்பதிகளின் விருப்பமாக இருக்கும். அதுவும் மாலை நேரங்களில் அந்த மிதமான வெயில் சூட்டில் தனிமையான சாலையில் நடப்பது என்பது மனதிற்கு கூடுதல் இதம் தரக்கூடிய ஒன்று. அந்த வகையில், பிக்கல சிக்கையா மற்றும் திம்மக்கா தம்பதியும் தினமும் நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம்வரை நடப்பது வழக்கம். கைக்கோர்த்து நடப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வாய்க்காவிட்டாலும், இருவரது மனங்களும் ஒருசேரக் கோர்த்திருக்கும். பானைகளில் நீர் எடுத்துக்கொண்டு வழிநெடுக அவர்கள் நட்டு வைத்த ஆலமரக் கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதற்காக கால் தேய அவ்வாறு நடப்பார்கள். இருவருமே கூலித் தொழிலாளிகள் என்பதால் பகல் நேர வேலை அசதி காரணமாக சில நாட்கள் இதில் தடங்கல் ஏற்பட்டு விடுவதும் உண்டு. அப்படி தடங்கல் ஏற்பட்டுவிட்டால் இத்தம்பதி துடியாய் துடித்துவிடுவார்கள். அன்றைய இரவு, பெற்ற குழந்தையைப் பட்டினி போட்ட குற்ற உணர்ச்சி அவர்களை ஆட்கொள்ளும். ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தம்பதிகளுக்கு இதுதான் தலையாய வேலை. கணவர் பிக்கல சிக்கையா மறைந்த பிறகும் மரங்கள் மற்றும் இயற்கையின் மீதான தனது காதலை 110 வயதிலும் மாறாமல் வெளிப்படுத்தி வருகிறார் சாலுமாரத திம்மக்கா.

 

கர்நாடகா மாநிலம் துமக்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் விஜயம்மா மற்றும் சிக்க ரங்கையா தம்பதிக்கு 1909-ஆம் ஆண்டு மகளாகப் பிறந்தவர் திம்மக்கா. வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் தன்னுடைய 10-ஆவது வயதிலேயே பெற்றோருடன் இணைந்து வேலைக்குச் சென்றார். பின்னர், இளம் வயதிலேயே பிக்கல சிக்கையா என்பவருடன் திருமணம் நடைபெறுகிறது. வறுமைக்கு ஊடாக இருவரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாகச் சென்றாலும், திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் என்பது வாய்க்கவில்லை. ஆரம்பக்கட்டத்தில் அத்தம்பதிகளை அது பெரிய அளவில் பாதிக்காவிட்டாலும், பின்னாட்களில் சுற்றத்தார் மற்றும் சக உறவினர்களின் பேச்சு மற்றும் மலடி என்ற வசைச்சொல் இவர்களைப் பெரிதும் காயப்படுத்துகிறது. திருமணமாகி ஏறக்குறைய 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இனியும் இதுபோன்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தால் சமூகத்தில் நமக்கு உரிய மரியாதை கிடைக்காது என்பது பிக்கல சிக்கையாவின் உணர்விற்கு எட்டுகிறது. மனைவி திம்மக்காவுடன் கலந்து பேசுகிறார். குழந்தை இருந்தால் நமக்கு மட்டும்தான் பலன். அதுவே மரங்களை நட்டு வளர்த்தால் அனைவருக்கும் பலன் கிடைக்கும் என இருவரும் ஒருசேர முடிவெடுக்கின்றனர். அன்று முதல் மரங்களே இத்தம்பதிகளின் குழந்தைகளாயின.

 

"நான் பிறந்தது குப்பி தாலுகா. பின் திருமணமாகி மாகடி தாலுகாவிற்குச் சென்றேன். எங்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அது என் கணவருக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் பேசிய வார்த்தைகள் எங்களை மிகவும் காயப்படுத்தின. பல கோவில்களுக்கும் சென்றேன். ஆனாலும், கருத்தரிக்கவில்லை. ஒருநாள், இனி நமக்கு சமூகத்தில் எந்த மரியாதையும் இருக்காது என என்னிடம் கூறிய என் கணவர், அவர் மனதில் தோன்றிய இன்னொரு விஷயத்தையும் கூறினார். 'நிறைய மரங்கள் நட்டு அவற்றையே நமது குழந்தைகளாக வளர்ப்போம்' என்றார். அதன்படி, குளிகல் தாலுகாவில் இருந்து குடூர் வரையிலான சாலையில் ஆல மரங்களை நட ஆரம்பித்தோம். முதல் வருடம் 10 மரங்கள், இரண்டாம் வருடம் 15 மரங்கள் என நட ஆரம்பித்தோம். தினமும் நான்கு கிலோ மீட்டர்கள் வரை நடந்து சென்று நீர் ஊற்றுவோம். ஒருமுறை கால் இடறிக் கீழே விழுந்ததில் பானை உடைந்து நீர் கொட்டிவிட்டது. மீண்டும் வீட்டிற்கு வந்து புதுப்பானையில் நீர் எடுத்துச் சென்று ஊற்றினோம். அதன்பிறகு, எத்தனை மரங்கள் நடுகிறோம் எனக் கணக்குப் பார்த்ததில்லை. நாங்கள் நட்ட மரங்கள் சில அழிந்துவிட்டன. அது கவலையளித்தாலும் வளர்ந்து நிற்கிற மரங்கள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 1991-ஆம் ஆண்டு என் கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகும் 30 ஆண்டுகளாக நான் தனியாக இந்த வேலையைச் செய்து வருகிறேன்".

 

Thimmakka

 

கர்நாடக அரசின் விருது, தேசிய குடிமகன் விருது, பத்ம ஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் திம்மக்கா. 2016-ஆம் ஆண்டு பிபிசி பட்டியலிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ஒருவராகவும் இடம்பிடித்தார். மேலும், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி அமைப்பிற்கு (ENVIRONMENTAL EDUCATION FOUNDATION ) திம்மக்காவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

பொதுவாக இன்றைய காலகட்டத்திலேயே ஒரு பெண்ணிற்கு குழந்தை இல்லையென்றால் அவர் சமூகத்தை எதிர்கொள்வது சிரமம். அந்த அளவிற்கு வசைச் சொற்களையும் புறமுதுகுப் பேச்சுக்களையும் சந்திக்க வேண்டிவரும். இன்றைய சமூகத்திலேயே இந்த நிலை என்றால் திம்மக்காவின் காலத்தில்?. அவர் எதிர்கொண்ட நிலையை நம்மால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. இவையனைத்தையும் தாண்டி, 385 ஆலமரங்கள், 8000 பிற மரங்களை நட்டு வளர்த்துள்ளார் என்றால் திம்மக்கா செய்த செயல், புருவம் உயரவைக்கிறது. குளிகல் தாலுகாவில் இருந்து குடூர் வரையிலான சாலையில் திம்மக்கா நட்ட ஆலமரங்கள் சுமார் 4 கிலோமீட்டர்கள் வரை சாலையின் இருபக்கமும் அரண்களாக ஓங்கி உயர்ந்துள்ளன. இன்று அவர் நட்டுள்ள மரங்களின் மொத்த மதிப்பு 400 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

 

Thimmakka

 

திம்மக்காவின் இந்த செயலைப் பாராட்டி 2019-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு விருது வழங்கிவிட்டு, அவரிடம் ஆசிர்வாதம் வாங்க தன்னுடைய தலையை சற்று தாழ்த்தினார். உடனே அவரைத் திம்மக்கா ஆசீர்வாதம் செய்து அங்கே திரண்டிருந்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியடைச் செய்தார். கென்யா நாட்டு சுற்றுச்சூழல் போராளி வாங்காரி மாத்தாயைப் பற்றித் தெரிந்து வைத்துள்ள நம்மில் பலருக்கு, திம்மக்காவைத் தெரிவதில்லை.

 

குழந்தையின்மை, அதனால் ஏற்பட்ட அவமரியாதை, வறுமை அனைத்தையும் தாண்டி இந்தியச் சமூகத்தில் பசுமை சார்ந்த நடவடிக்கைகளில் திம்மக்கா ஏற்படுத்தியுள்ள தாக்கம் அசாத்தியமானது.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

 

அங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28
 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.