Skip to main content

என் நண்பர்கள் என்னை விட்டு விலகிய நேரம்! - ரத்தன் டாடா | வென்றோர் சொல் #11

Published on 14/08/2020 | Edited on 17/08/2020

 

ratan tata

 

 

இந்தியாவின் வணிக சந்தையை ஆண்ட நம்மில் ஒருவர்... ஆம்... இவர் நம்மில் ஒருவர்தான். சம்பாதித்த பணத்தில் 60 சதவிகிதத்தை நமக்கான சமூகப்பணிகளுக்கு செலவிட்டு இதுவரை பணக்காரர் வரிசையில் இடம்பெறாத ஒருவர்... பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வணிக சந்தையை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு இந்தியர்களை மறைமுகமாக ஆண்டுகொண்டிருக்கின்றன. அதன் மூலம் அவர்கள் செய்கிற வளச் சுரண்டலும், தங்கள் தயாரிப்பு  பொருட்களை நுகர்வோர்கள் மீது பலவந்தமாகத் திணிக்கும் போக்கும் சொல்லி மாளாது. உலகமயமாக்கலுக்கு பின் இது வளரும் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. அத்தகைய நிறுவனங்களின் ஆக்டொபஸ் கரங்களில் சிக்காமல் இன்று வரை இந்தியாவின் வணிக சந்தையை கணிசமான அளவில் தன்னுடைய கரங்களில் வைத்துள்ளவர் ரத்தன் டாடா. உலக அரங்கில் இந்தியாவின் தொழில் முகமாகத்தான் உலகம் இவரைப் பார்க்கிறது.

 

மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. பிறப்பிலிருந்து தற்போது வரை தாய், தந்தையர் அன்பை தவிர அளவு கடந்த செல்வம், பெயர், புகழ் என அனைத்தும் அவருக்கு கிடைத்தது. இளம் வயதாக இருக்கும் போதே பெற்றோர் விவாகரத்து வாங்கிவிட்டதால் பாட்டியின் அரவணைப்பில் வளர்க்கப்படுகிறார். முறையாக பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டமும் பெறுகிறார். இன்றளவும் பல இந்தியர்களின் கனவு நிறுவனமாக இருக்கும் IBM நிறுவனத்தில் அன்றே இவருக்கு வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைக்கும் போது, தன்னிடம் 'ரெஸ்யூம்' என்ற ஒன்றே இல்லை என ஒரு நாள் மேடையில் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வாழ்வில் அனைத்தையும் கண்டுவிட்டதால் கனவுகளோ, லட்சியங்களோ என்று அவருக்கு அந்நாளில் ஏதும் பெரிய அளவில் இருந்திடவில்லை. தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்தியா திரும்புகிறார். 'உங்கள் வாழ்வின் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது எது?' என்ற கேள்விக்கு "நான் இந்தியா திரும்பியதுதான்" என்று குறிப்பிட்டார் ரத்தன் டாடா. அவரது வாழ்வின் இரண்டாம் கட்டம் இங்கிருந்து தொடங்குகிறது. தன்னுடைய குடும்ப நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த NELCO எனும் ரேடியோ உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பொறுப்பு இயக்குநராக பதவி ஏற்கிறார். அந்நிறுவனம் விற்பனைச் சரிவால் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இழுத்து மூடும் நிலையில் இருந்தது. 'காலம் மாறுகிறது... இன்னும் இந்த பழைய ரேடியோக்களை உருட்டிக்கொண்டிருந்தால் நிறுவனத்தை கரை சேர்க்க முடியாது' எனும் முடிவுக்கு வருகிறார். செயற்கைக்கோள் தொடர்பு உட்பட பல புதிய தொழில்நுட்பத்திற்கு மாறுகிறார். சரிவை சந்தித்த நிறுவனத்தை அடுத்த சில ஆண்டுகளில் தூக்கி நிறுத்துகிறார். பின் சரிவை சந்திக்கும் அவர் குடும்ப நிறுவனங்கள் அனைத்திற்கும் நிகழ்காலம் கற்றுணர்ந்த தன் மூளையால் அடுத்தடுத்து புத்துயுர் கொடுக்கிறார். இறுதியில் 1991ம் ஆண்டு ஒட்டு மொத்த டாடா குழுமத்திற்குமான தலைவர் பொறுப்பை ஏற்கிறார். அவரை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர்கள் பலர் இருந்ததால் இந்த முடிவு விமர்சிக்கப்பட்டது. போதிய அனுபவம் இல்லாத இவருக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி கேட்டனர். அனைத்தையும் காதில் வாங்கிக்கொண்ட ரத்தன் டாடா பின் அனைத்திற்கும் தன்னுடைய செயலால் பதில் அளித்தார். 1868ல் தொடங்கப்பட்ட டாடா குழுமத்தை மிகப்பெரிய சாம்ராஜ்யமாக்கி காட்டினார்.

 

அடிப்படையிலேயே மிகவும் தேச பக்தி கொண்டவர் ரத்தன் டாடா. 'நான் பறக்க முடியாத நாளே என்னுடைய வாழ்வின் மோசமான நாள்' எனக் கூக்குரலிடும் இவரது தன்னம்பிக்கை அளிக்கும் விதமான பேச்சுக்கள் கனவினை நோக்கி நடைபோடும் இளைய சமுதாயத்தினருக்கு எனர்ஜி டானிக். தொழில்முனைவு கனவுகளோடு இருக்கும் அத்தனை பேரின் உதடுகளும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு பெயராக தன்னை ரத்தன் டாடா நிலை நிறுத்தியதற்கான காரணம் அவர் மீதும், பின்னாளில் அவர் கண்ட கனவுகளின் மீதும் கொண்ட நம்பிக்கைதான். ஒரு லட்சத்தில் ஒரு கார்... ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் எனும் அவரது முயற்சியை அவர் உடன் இருந்தவர்களே எள்ளி நகையாடியுள்ளனர். "இந்தியாவில் பல்வேறு தளங்களில் வேலை பார்த்துள்ளேன். அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான காலம் என்றால் ஆட்டோ மொபைல் துறையில் வேலை பார்த்த நாட்கள்தான் என்று கூறுவேன். எல்லோரும் எதை செய்ய முடியாது என்று கூறுகிறார்களோ அதை செய்வதில் எனக்கு அலாதிப்பிரியம். அதன்படி இந்தியத் தயாரிப்பில் கார் உற்பத்தி செய்யலாம் என்று தீர்மானித்தேன். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் இருந்த என் நண்பர்கள் இது சாத்தியமில்லை என்றும் தொழில் நுட்பரீதியாக நாம் பிறருடன் இணைந்து செயல்பட வேண்டிவரும் என்றனர். பின் நாங்கள் முழு இந்திய தயாரிப்பிலேயே 'இண்டிகா' காரை உருவாக்கினோம். அது சந்தைக்கு வரும்போது என்னுடைய நண்பர்கள் என்னிடம் இருந்து விலகியே இருந்தனர். அதை அவர்கள் தோல்வியில் இருந்து விலகி இருப்பதாக நினைத்து கொண்டார்கள். ஆனால் நடந்ததோ வேறு. விற்பனை தொடங்கியவுடன் சந்தை விலையில் 20 சதவிகிதம் லாபம் கிடைத்தது. அதன் மூலம் நம்மாலும் இதை செய்ய முடியும் என்று நிரூபித்துக்காட்டினோம். மேலும் இது புதிய தொழில்நுட்பங்களை இங்கு சோதனை செய்து பார்க்கவும் வழி திறந்தது. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இந்திய பொருளாதாரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த இது உதவியது"... 

 

'சிறிய மாற்றம் என்பது எனக்கு பிடிக்காத ஒன்று' - இந்த ஒற்றை வரிதான் அவரது தொழில் ரகசியம். பணக்காரர் பட்டியலில் இடம் பெறாத இந்த பணக்காரரின் வாழ்க்கை பயணத்தை ஒரு முறை வாசித்தால் வாழ்வில் பயணப்பாதை தெரியாது திக்குமுக்காடி நிற்கும் அனைவருக்கும் ஒரு பாதை புலப்படும்....

 

 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.