Skip to main content

”இது எங்க விளையாட்டு, நீ ஏன் விளையாடுற?” - கேட்டவர்கள் முகத்தில் விழுந்த குத்து! மேரி கோம் | வென்றோர் சொல் #18

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

mary kom

 

"நம்மால் இதைச் செய்ய முடியுமா என்ற சந்தேகமோ, குழப்பமோ எனக்குள் வந்ததில்லை. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன். இலக்கை குறிவைத்து நான் திட்டமிட்டபடி பயிற்சி செய்வேன். கடவுள் எப்போதும் என்னுடன் இருக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். நான் முறையாகப் பயிற்சி எடுத்தால் அவரது பங்கிற்கு எனக்கு கொஞ்சம் உதவ முடியும். இதுதான் என் நம்பிக்கை...." என்கிறார் மூன்று குழந்தைகளுக்குத் தாயான மேரி கோம். தாய்மை என்பது அனைத்து பெண்களிடமும் உள்ளதுதானே??? இவருக்கு மட்டும் எதற்கு இப்படியொரு அறிமுகம் என மேரி கோமை அறியாத வெகுசிலரில் ஒருவராக நீங்கள் இருந்தால் நினைக்கக் கூடும். மூன்று குழந்தைகளுக்குத் தாயாக இருந்தாலும் இதுவரை 6 முறை குத்துச்சண்டை போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்று அசத்தியுள்ளார். குத்துச்சண்டை வீரர் என்றாலே விகாரமான ஒரு முகம், மிரட்டும் கண்கள், மூர்க்கத்தனமான வேகம் என்ற வரைமுறையை உடைத்து எறிந்தவர் மேரி கோம். 'உனக்கு பிஞ்சு முகம்' என்ற வரியினை பிறரைக் கேலி செய்ய நாம் பயன்படுத்துவதுண்டு. மேரி கோமிற்கும் அது போன்ற ஒரு பிஞ்சு முகம்தான். ஆனால் களத்தில் இறங்கிவிட்டால்? எதிராளி அசைவுகளை கணித்து ஆடும் அவரது ஆட்டத்திற்கு உலகக் குத்துச்சண்டை ஆர்வலர்கள் பலர் தீவிர ரசிகர்கள்.

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிறந்தவர் மேரி கோம். சிறிய கிராமம், கடுமையான உடல் உழைப்பைச் செலுத்த வேண்டிய விவசாய குடும்பப் பின்னணி, வறுமை இவைதான் மேரி கோமின் இளமைக்கால வாழ்க்கை. பெற்றோருடன் நிலத்தில் வேலை செய்வது, விறகு வெட்டுவது, மீன் பிடிப்பது, வீட்டில் உள்ள அவரது உடன் பிறந்தவர்களை பார்த்துக் கொள்வது ஆகியவைதான் அவருக்கான வேலைகளாக இருந்தன. பள்ளிக் காலங்களில் தடகள விளையாட்டுகள் மீது சற்று ஆர்வம் ஏற்படுகிறது. போட்டிகளில் வெல்லும் போது பரிசுத்தொகையாகப் பணம் கிடைக்கும் என்ற சேதி தெரிய வந்ததும், அது நம் குடும்பச் சூழ்நிலையை சமாளிக்க சிறிது உதவும் என முடிவெடுத்து தடகள விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றதும், அதனால் அவருக்குக் கிடைத்த அங்கீகாரமும் மேரி கோமின் கவனத்தை குத்துச்சண்டை மீது திருப்பியது.

 

மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின்பும், இன்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு திரியும் மேரி கோமின் கனவுகள் அவ்வளவு எளிதில் தொடக்க காலங்களில் அங்கீகரிக்கப்படவில்லை. அவர் குத்துச்சண்டைக் களத்தில் எதிராளிகளுடன் போராடுவதற்கு முன்னரே, தன் ஆசையைக் கிள்ளி எறிந்துவிட நினைத்த தன் பெற்றோருடனும், சுற்றத்தாருடனும் கடுமையாகப் போராடியிருக்கிறார். அந்த விடாப்பிடித்தன்மையும், அது தந்த அனுபவமும்தான் பின்நாட்களில் வலிமையானவர்களை எதிர்கொள்வதற்கு அவருக்கு உத்வேகம் தந்திருக்கக் கூடும். 

 

"15 வயதில் பாக்ஸிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. இரண்டு வாரங்களிலேயே பாக்ஸிங்கில் உள்ள அடிப்படையான விஷயங்கள் அனைத்தையும் கற்றுவிட்டேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பாக்ஸிங் பிறக்கும் போதே எனக்கு கடவுள் கொடுத்த திறமை என்று நினைத்துக்கொண்டேன். அதன் பின்பு என் வாழ்க்கையில் எல்லாமே பாக்ஸிங்தான். நான் குத்துச்சண்டையில் ஈடுபடுவது என்னுடைய குடும்பத்தினருக்குத் தெரியாது. என் அப்பாவின் புரிதல் படி பாக்ஸிங் என்பது ஒரு விளையாட்டே கிடையாது. விஷயம் தெரிந்தால் நிச்சயம் என்னை அனுமதிக்க மாட்டார். பின் மாநில அளவிலான ஒரு குத்துச்சண்டை போட்டியில் நான் வெற்றி பெற்றதற்காக என்னுடைய புகைப்படம் பத்திரிகையில் வந்திருந்தது. அதை என் அப்பா எப்படியோ பார்த்துவிட்டார். இனி குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என என்னைக் கண்டித்தார். என்னால் என் கனவை விட்டுத்தரமுடியாது. அவரிடம் பேசி ஒரு வழியாக அவர் மனதை மாற்றினேன். எங்கள் பகுதியில் வசித்தவர்களைப் பொறுத்தவரை பாக்ஸிங் என்பது ஆண்களுக்கான விளையாட்டு. சில இளைஞர்கள் என்னிடமே வந்து இது எங்களுக்கான விளையாட்டு, இதை நீ ஏன் விளையாடுகிறாய் என்பார்கள். உங்களால் முடியும் போது என்னால் முடியாது என ஏன் நினைக்கிறீர்கள். ஒரு நாள் நிருபித்துக் காட்டுகிறேன் என்பேன். அப்போது அவர்கள் சிரித்தார்கள். இன்று நான் நினைத்ததை விட அதிகமாக நிரூபித்துக் காட்டியுள்ளேன்." - ஆம், இன்று மேரி கோம் உலக அளவில் பெறும் வெற்றிகள், பத்ம விருதுகள், ராஜ்ய சபா உறுப்பினர் பதவி அனைத்தும் அப்படி கேட்டவர்கள் முகத்தில் விழுந்த குத்துகள்தானே?  

 

"நான் ஏழை குடும்பத்துப் பெண்ணாக இருந்ததால் என்னால் முடியாது என்று நினைத்தார்கள். அதுதான் என்னுடைய பலமே. குத்துச்சண்டையில் ஈடுபட மன வலிமை அதிகம் தேவை. அந்த மனவலிமையை என்னைப் பார்த்து இவர்கள் பேசிய கேலியும், எனது சிறுவயது வறுமையும்தான் எனக்குக் கொடுத்தன. ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளையாக பிறந்திருந்தால் என்னால் இவ்வளவு சாதித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. முதல் பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் எனக்கு இரட்டைக்குழந்தை பிறந்தவுடன் என்னுடைய குத்துச்சண்டை வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தார்கள். சில பத்திரிகைகள் கூட அவ்வாறு எழுதின. அவர்களுக்கு என்னுடைய வலிமையைப் பற்றியோ, என் லட்சியத்தின் வலிமையைப் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை....."

 

இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் அவரது குத்துச்சண்டை வாழ்க்கை முடிந்துவிட்டதென அன்று எழுதிய பத்திரிகைகள், இன்று அவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்த பின்பும் இந்தாண்டு மேரி கோம் வெல்வாரா, மேரி கோம் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டார் என மாறிமாறி எழுதிக்கொண்டிருக்கின்றன. விடாப்பிடித்தன்மை, எதிர்த்து போராடும் குணம், சுற்றி உள்ள ஏற்பில்லாத சமூகக் கட்டமைப்பை உடைத்து எறிதல் இம்மூன்று குணங்களும் இருந்தால் நினைத்த உயரத்தை அடையலாம் என்பதே மேரி கோம் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடம்... 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.