Skip to main content

பரந்ததோர் உலகில் பறவையாய்! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #4

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

 
ஹிஸியாங் டான் நகரில் மாவோவின் தந்தைக்கு பழக்கமான அரிசிக் கடை இருந்தது. அங்குதான் மாவோவை பயிற்சி எடுக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார். அது தனக்கு உற்சாகம் அளிக்கும் என்று மாவோவும் நினைத்திருந்தார். ஆனால், அந்தச் சமயத்தில்தான் ஹிஸியாங் ஹிஸியாங் பகுதியில் உள்ள துங்ஷான் பள்ளியைப் பற்றிக் கேள்விப்பட்டார். அந்தப் பள்ளியில் சேர்ந்து படிப்பது என்று மாவோ முடிவெடுத்தார். அதற்கு அவருடைய தந்தையும் ஒருவழியாக அனுமதி அளித்துவிட்டார்.

 

c



அந்தப் பள்ளி மாவோவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஆம். அதற்கு முன் இவ்வளவு மாணவர்களை அவர் ஒரே இடத்தில் பார்த்ததில்லை. அதுமட்டுமில்லை. அந்த மாணவர்கள் பெரும்பாலும் நிலப்பிரபுக்களின் குழந்தைகளாக இருந்தார்கள். விலை மதிப்புமிக்க ஆடைகளை அணிந்திருந்தார்கள். இப்படிப்பட்ட பள்ளிக்கு மிகக்குறைவான விவசாயிகளே தங்களுடைய குழந்தைகளை அனுப்பி இருந்தார்கள். அங்கு படித்த மாணவர்களில் மிகவும் மோசமாக உடை அணிந்திருந்தது மாவோ மட்டுமே. அவரிடம் ஒரே ஒரு நாகரிகமான கோட்டும் பேண்ட்டும் மட்டுமே இருந்தன. சீனர்கள் அணியும் வழக்கமான மேலங்கியை யாரும் அணிவதில்லை.

மாவோ எப்போதுமே கசங்கிப்போன உடைகளையே அணிந்திருந்தார். அவரை பணக்கார மாணவர்கள் வெறுத்தனர். ஆனால், அவர்களிலும் மாவோவுக்கு நெருக்கமான நல்ல தோழர்கள் சிலர் இருந்தனர். இதற்கு காரணம் அவர் நன்றாக படித்தார். ஆசிரியர்களுக்கு அவரைப் பிடித்திருந்தது. மாவோ நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தார். மாவோ புராதன இலக்கிய நடையில் நல்ல கட்டுரைகளை எழுதினார். அந்த இலக்கியங்களை கற்பித்துவந்த ஆசிரியர்கள் மாவோவை மிகவும் விரும்பினார்கள். ஆனால், அந்த இலக்கியங்களில் மாவோவின் மனம் நிலைக்கவில்லை. இங்கு வந்து படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான், சீனப் பேரரசர் குவாங்ஸுவும், பேரரசி டோவேஜர் சிஸியும் இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை அறிந்தார். இருவருமே ஒருநாள் வித்தியாசத்தில் 1908 ஆம் ஆண்டு இறந்தனர். அவர்களுக்கு பதிலாக ஹூசுவான் டுங் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.
 

b



இங்கு படித்த 6 மாதங்களில் மாவோவின் சிந்தனை கூர்மைப்பட்டது. அதுவரைக்கும் மன்னர் ஆட்சியை விரும்புகிறவராகத்தான் இருந்தார். பேரரசரும், பெரும்பாலான அதிகாரிகளும் நேர்மையானவர்கள் என்றுதான் நம்பியிருந்தார். ஆனால், அரசியல் வரலாறு, புவியியல் தொடர்பான அறிவு வளர வளர அவருடைய வெளியுலகப் பார்வை விரிவடைந்தது. 1900ம் ஆம் ஆண்டில் பேரரசர் குவாங்ஸு கொண்டுவந்த சீர்திருத்தங்களை வடிவமைத்த கேங் யோவேய், லியேங் சிச்சவ் ஆகியோரை மாவோ அறிந்திருந்தார். குவாங்ஸுவின் சீர்திருத்தங்கள் ரத்து செய்யப்பட்டவுடன் இருவரும் சீனாவிலிருந்து தப்பிவிட்டனர். இவர்கள் கன்பூஷியனிஸத்தை மறுவரையறை செய்தார்கள்.

அவர்கள் இருவரும் எழுதிய இரண்டு நூல்களை மனப்பாடம் ஆகும்வரை மாவோ படித்தார். அந்த இருவரையும் தனது வணக்கத்துக்கு உரியவர்களாக கருதினார். இவர்கள் இருவருடைய உதவியை பேரரசு நாடவேண்டும். அவர்களுடைய ஆலோசனைகளுடன் ஆட்சி நடத்தினால் சீனா முன்னேற்றப்பாதையில் நடைபோடும் என்று மாவோ நம்பினார். இந்தப் பள்ளியில் இருக்கும்போது வெளிநாட்டு வரலாறு அவருக்கு அறிமுகமானது. அமெரிக்கப் புரட்சியைப் பற்றிய நூலைப் படித்தபோதுதான் அமெரிக்காவைப் பற்றி முதன்முதலாக கேள்விப்பட்டார்.

 

gh



உலகப் பெருந்தலைவர்கள் என்ற நூலில் நெப்போலியன், பேரரசர் பீட்டர், வெலிங்டன், ரூஸோ, மாண்டெஸ்க்யூ, லிங்கன் உள்ளிட்ட தலைவர்களை அறிந்தார். தனது கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வந்தவுடனேயே பரந்த உலகத்தை அறியும் வாய்ப்பு மாவோவுக்கு கிடைத்தது. இங்கு கிடைத்த கல்வியைக் காட்டிலும் தரமான கல்வி ஹூனான் தலைநகர் சாங்ஷாவில் கிடைக்கும் என்பதை அறிந்தார். மாவோவின் வீட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்தான் சாங்ஷா இருந்தது.

அந்தச் சமயத்திலேயே அது மிகப்பெரிய நகரம் என்று மாவோ கேள்விப்பட்டார். அங்கு நிறைய மக்கள் வசிக்கிறார்கள். நிறைய பள்ளிகள் இருக்கின்றன. ஆளுநர் அரண்மனை அங்குதான் இருக்கிறது. அந்த நகரம் பிரமிப்பை ஏற்படுத்தும் என்றெல்லாம் கேள்விப்பட்டார். இது அவருக்குள் ஆர்வத்தை தூண்டியது. அந்த நகரில் ஹூனான் பகுதிக்கென தனியாக நடுநிலைப் பள்ளி இருக்கிறது என்று அறிந்தார் மாவோ. அந்தப் பள்ளியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று நம்பினார். இருந்தாலும் ஒரு ஓரத்தில் பயம் இருந்தது. ஹிஸியாங் ஹிஸியாங் பள்ளியில் தனக்கு ஆசிரியராக இருந்த ஒருவரிடம் போனார்.

 

 

b



"சாங்ஷா நடுநிலைப் பள்ளியில் என்னை அறிமுகப்படுத்துங்கள் ஐயா" மாவோவின் வேண்டுகோளை அந்த ஆசிரியர் ஏற்றார். அந்த ஆசிரியர் மாவோவின் தந்தையிடம் பேசினார். அவரைச் சம்மதிக்க வைத்தார். பிறகு ஒரு கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து மாவோவுக்குள் நம்பிக்கை நிறைந்தது. அது புகழ்பெற்ற பள்ளி. அதில் மாணவனாக முடியும் என்ற நம்பிக்கை முழுவதும் ஏற்படாத நிலையில்தான் அவர் அங்கு சென்றார்.

ஸியாங் நதியில் நீராவிப் படகு ஒன்றில் அவர் பயணம் செய்தார். அந்தப் படகு நகரை நெருங்கியது. அப்போது மாவோவின் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட நகராக அது தோற்றமளித்தது. மேன்மையான சாம்பல் நிறக் கற்களால் ஆன செங்குத்தான ஒரு சுவர் நதியின் விளிம்பிலிருந்து உயர்ந்து நின்றது. அதன் அடித்தளம் ஐம்பது அடி அகலமுடையதாக இருந்தது. அந்தச் சுவர் இரண்டு மைல் நீளம் உடையது. ஐம்பது அடி அகலமுடையது. அதன் உயரம் 40 அடி இருந்தது. ஒரே சமயத்தில் மூன்று குதிரை வண்டிகள் செல்லக் கூடிய வகையில் அந்த சுவரின் பாதை இருந்தது. சாங்ஷா நகர் முழுவதையும் அந்தச் சுவர் சுற்றிச் சூழ்ந்திருந்தது. அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு வாயில்கள் இருந்தன. அந்த வாயில்களில் இரண்டு பிரமாண்டமான கதவுகள் இருந்தன. வாயில்களுக்கு கருநீல வண்ணத்தில் தலைப்பாகை அணிந்த காவலாளிகள் காவல் காத்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. ஈட்டிகள், வாள்கள், துப்பாக்கிகள் என அவர்கள் பலவிதமான ஆயுதங்களை வைத்திருந்தார்கள்.
 

bh



சுவருக்குள் ஓடுகள் வேய்ந்த கூரைகள் உடைய கட்டிடங்களுடன் சுரங்கப் பாதைகள் போன்ற இருண்ட தெருக்கள் நகரத்தின் மையப்பகுதி வரை நீண்டன. கருங்கற்கள் பாவிவிடப்பட்ட இந்தத் தெருக்கள் ஆறு அடி அகலம் மட்டுமே இருந்தன. அந்தத் தெருக்கள் துர்நாற்றம் வீசின. ஏராளமான மக்கள் வசிக்கும் பகுதிகள் எப்படி நாற்றமெடுக்குமோ அப்படியே அவை இருந்தன. ஆனால், அந்தச் சுவருக்கு பின்னால், அழகான மாளிகைகள் இருந்தன. அந்த மாளிகைகளில் மிகப்பெரிய அதிகாரிகள் வசித்தனர். அங்கு இரண்டு மிகப்பெரிய கன்பூஷியக் கோயில்களும் இருந்தன. அந்தக் கோயில்களைச் சுற்றிலும் சைப்ரஸ் மரங்கள் வளர்ந்திருந்தன. கடைவீதிகள் ஆரவாரமாக இருந்தன. சைக்கிள்களோ, மோட்டார் கார்களோ, ரிக்சாக்களோ இல்லை. பணக்காரர்கள் பல்லக்குகளை பயன்படுத்தினார்கள். மற்றபடி ஆட்கள் பயணிப்பதற்கும், சரக்குகளை கொண்டு செல்வதற்கும் சாதாரணக் கைவண்டிகளே இருந்தன.

கை வண்டிகளில் பலவிதமான பொருட்களை ஏற்றிச் சென்ற தொழிலாளர்கள் அவற்றை நதியில் நின்ற படகுகளில் ஏற்றினர். அவர்கள் ஓயாமல் இந்த வேலையில் ஈடுபட்டனர். அவர்கள் இழுத்துச் செல்லும் கை வண்டிகள் எழுப்பும் கிரீச் ஒலி கடைவீதி முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது. நீளமான மூங்கில் கழிகளின் இருபுறமும் வாளிகளில் தண்ணீரை நிரப்பி தோளில் சுமந்தபடி ஆட்கள் ஊருக்குள் விற்பனைக்கு எடுத்து சென்றார்கள். தெரு வியாபாரிகள் தங்கள் பொருட்களை கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். 

தாவோயிஸ்ட் துறவிகளும், காவி உடை அணிந்த பௌத்த துறவிகளும் நோயாளிகள் குணமடைவதற்கு பிராத்தனைகளை உச்சரித்தவாறு சென்றார்கள். பிச்சைக்காரர்களும் குருடர்களும் அருவருப்பான தோற்றம் உடையவர்களும் சாலை ஓரங்களில் உட்கார்ந்து பிச்சை எடுத்தனர். அவர்கள் அந்த நகரத்தில் உள்ள வீடுகளுக்கு செல்வார்கள். வீட்டு உரிமையாளர்கள் அவர்களை பார்த்து முகம் சுளிப்பார்கள். "உங்கள் வீடுகளுக்கு அடுத்த ஒரு வருடம் வரமாட்டோம். ஆனால், எங்களுக்கு நீங்கள் மொத்தமாக பணம் கொடுத்துவிட வேண்டும்." என்று மிரட்டி பணம் பறித்தார்கள்.
 

Next Story

மாபெரும் அரசியல் குழப்பத்தில் சீனா! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #9

Published on 10/12/2019 | Edited on 06/01/2020


சிலமாதங்களுக்கு முன்புதான் ஒரு வம்சாவளி அரசு தகர்க்கப்படுவதை மாவோ கண்கூடாக பார்த்தார். ஆனால் இப்போது மேட்டுக்குடியினரின் சூழ்ச்சிகள் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தன. புரட்சியின் பயன்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஹூனான் ஆளுநர் டான் யாங்கெய் விரட்டப்பட்டது மாவோவுக்கு பிடிக்கவில்லை. அவர் நல்ல மாற்றங்களை கொண்டுவந்ததாக மாவோ நினைத்தார். கோமின்டாங் கட்சிக்கு எதிரான சண்டையில் சாங்ஷா நகரில்  இருந்த பெரிய வெடிமருந்து கிடங்கு பயங்கரமாக வெடித்து  சிதறியது. ஹூனானில் உள்ளவர்களுக்கு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக குடியரசுத் தலைவரின் ஆதரவாளர்களில் இருவர் கிடங்கிற்கு தீ வைத்தார்கள். கோமின்டாங் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, மாவோவின் மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 

n



ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த ஆண்டுகளில் மாவோ சிறந்த எழுத்தாளராகவும் உருவாகி கொண்டிருந்தார். சாங்ஷாவில் ஜியாங் நதி என்ற நாளிதழைப் படித்து வந்தார். அதில்தான் முதன்முறையாக அவர் சோசலிசம் என்ற வார்த்தையைப் பார்த்தார். சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சீன சோசலிஸ்ட் கட்சியை ஜியாங் காங்கூ என்பவர் நிறுவினார். அந்தக் கட்சியின் கொள்கைகள் மாவோவை கவர்ந்தன. "அரசாங்கம் இல்லை; குடும்பம் இல்லை; மதம் இல்லை; தகுதிக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற ஊதியம்." இது ஆற்றல் மிகுந்த கருத்து என்று தனது தோழர்களுக்கு மாவோ எழுதினார். அவருடைய கடிதங்களுக்கு சில நண்பர்கள் பதில் எழுதினார்கள்.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மாவோ படித்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் தனது கவனம் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு யுவான் ஜிலியூ, யேங் சாங்ஜி என்ற  இரண்டு பேராசிரியர்கள் உதவி செய்தார்கள். அவர்களில் யுவான், மாவோவின் எழுத்துக்களை கேலி செய்வார். ஒரு பத்திரிக்கையாளனின் எழுத்துக்களைப் போல இருப்பதாக அவர் கிண்டல் செய்வார். இவர், பெர்லின், டோக்கியோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் படித்து திரும்பியவர். இவருடைய கிண்டல் காரணமாக செவ்வியல் மொழி நடையை மாவோ கற்றுக்கொண்டார்.

யேங் சாங்ஜி மாவோ மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் கருத்துமுதல்வாதி. உயர்வான ஒழுக்க நெறிகளை பின்பற்றியவர். நீதிதவறாத, வலிமையுள்ள, நேர்மையான, சமூகத்திற்கு பயன்படக்கூடிய மனிதர்களாக மாணவர்கள் மாறவேண்டும் என்று போதனை செய்வார். 1915 -ஆம் ஆண்டு சீனா மீது ஏகாதிபத்திய அரசுகள் கடுமையான நெருக்கடியை திணித்தன. அந்த நெருக்கடிகளுக்கு சீனா இழிவான விதத்தில் அடிபணிந்து வந்தது. மாவோவின் மனதில் அவநம்பிக்கை தீவிரமடைந்தது. அந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி, யுவான் ஷிகெய்யிடம் ஜப்பானின் இறுதி எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. 21 கோரிக்கைகள் என்று அது அழைக்கப்பட்டது.

 

 

jhk



ஜப்பானின் மிகாடோ தலைமையிலான அரசு, சீனாவை முழுவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக தெரிவித்தது. அத்துடன் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஷான்டுங் மாகாணத்தில் ஜப்பானுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருப்பதாக வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் சீன குடியரசுத்தலைவர் இதை ஏற்றுக் கொண்டார். இது ஒரு மிகவும் வெட்ககரமான நாள் என்று மாவோ எழுதினார். சீன அரசாங்கத்தை கண்டனம் செய்யுமாறு தனது சக மாணவர்களை கேட்டுக் கொண்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் யுவான் ஷிகெய் சீனாவின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டார். தனது அரசுக்கு ஹூங்க்ஸியான் என்று பெயர் வைத்து கொண்டார்.

இதையடுத்து சீனாவின் பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களுடைய எதிர்ப்பு காரணமாக புதிய பேரரசர் தனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார். மீண்டும் குடியரசுத் தலைவராக மாற முன்வந்தார். ஆனால் அதற்குள் காலம் கடந்து  விட்டது. 1916 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் இருந்து வந்த படைகள் தலைநகரை நெருங்கின. இதையறிந்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநரான டாங் ஸியாங்மிங் பேரரசரின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்தார். அதற்கும் அவகாசம் இல்லை. அடுத்த மாதமே அதாவது, ஜூன் மாதம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பேரரசர் யுவான் ஷிகெய் திடீரென்று மரணம் அடைந்தார். ஹூனானில் நிலைமை மோசமடைந்தது. அங்கு பேரரசர் யுவான் ஷிகெய்யின் ஆதரவாளரான டாங் ஸியாங்மிங் விரட்டப்பட்டார். தனது அரண்மையிலிருந்து விவசாயி வேடத்தில் அவர் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றார். அவர் போகும்போது அரசாங்க கருவூலத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டார்.
 

Next Story

எதிர்காலம் குறித்த குழப்பங்களின் முடிவில்… ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #8

Published on 07/12/2019 | Edited on 06/01/2020

புரட்சிக்குப் பிறகு ஹூனான் மாநிலம் வேகமாக மாறிவந்தது. சீனாவில் வம்சாவளி ஆட்சி திடீரென்று தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நம்பிக்கை பிறந்தது. சீனாவில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற யுவான் ஷிகெய் கொஞ்ச நாட்கள் வரை நல்ல பிள்ளையாக இருந்தார். தலைநகரில் நடப்பவை இன்னமும் மற்ற பகுதிகளுக்கு சென்று சேருவதில் தாமதம் நிலவியது. ஹூனானில் எழுத்து சுதந்திரம் இருந்தது. அந்த மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த டான் யாங்கெய் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அபின் பயிரிடுவதை தடை செய்தார். போதை மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டது. எழுத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பத்திரிகைகள் அமெரிக்காவையும் பிரிட்டனையும் கடுமையாக விமர்சனம் செய்தன. கல்விக்கு நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக அதிகரிக்கப் பட்டது.  நவீனப் பள்ளிகள் ஏராளமாக உருவாகின. இளம் பெண்களும் இளைஞர்களும் தங்கள் முடிகளை வெட்டிக் கொண்டார்கள். பெண்கள் முக்காடில்லாமல் வெளியிடங்களில் நடமாடினர்.

 

k



ராணுவத்திலிருந்து மாவோ விலகியபோது அவருக்கு 18 வயது ஆகியிருந்தது. அவரளவில் இந்த காலக் கட்டம் குழப்பம் மிகுந்ததாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் பலவிதமான விளம்பரங்கள் அவரைக் கவர்ந்தன. காவல்துறை பயிற்சிப்பள்ளியில் சேருவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதில் சேருவதற்கு பெயரை பதிவு செய்தார். ஆனால் அதற்காக அவரை பரிசோதிப்பதற்கு முன், சோப்புத் தயாரிக்கும் பள்ளியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தார். அந்தப் பள்ளியில் கல்விப் பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் உணவுக்கு உத்தரவாதமும் சிறிதளவு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அது ஒரு கவர்ச்சியான விளம்பரம். சோப் தயாரிப்பதால் ஏற்படும் சமூக நன்மைகளை அந்த விளம்பரம் விரிவாக விளக்கியிருந்தது. காவல்துறை பயிற்சி பள்ளியில் சேரும் முடிவை மாவோ கைவிட்டார். அதற்கு பதிலாக சோப் தயாரிப்பாளராக மாறுவது என்று முடிவு செய்தார். ஒரு டாலர் பணம் கட்டி தனது பெயரை பதிவு செய்து கொண்டார். இந்த சமயத்தில் மாவோவின் நண்பன் ஒருவன் சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அந்தப் பள்ளியில் சேரும்படி மாவோவை வற்புறுத்தினான். மூன்று ஆண்டுகளில் எல்லாவிதமான சட்ட நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம். படிப்பு முடிந்தவுடன் மாணவர்கள் வழக்குரைஞர்களாக மாறிவிடலாம் என்று ஒரு விளம்பரம் உறுதி அளித்தது. இந்த விளம்பர விவரங்களை விரிவாக குறிப்பிட்டு தனது செலவுக்கு பணம் அனுப்பும்படி மாவோ கடிதம் எழுதினார். இந்நிலையில் சீனா இப்போது பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மாவோவின் மற்றொரு நண்பர் யோசனை கூறினார்.

 

i



அதை தொடர்ந்து ஒரு வணிகவியல் நடுநிலைப்பள்ளியில் இன்னொரு டாலர் செலவு செய்து தனது பெயரை பதிவு செய்தார். அங்கு அவர் ஒரு மாணவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் இன்னொரு விளம்பரம் மறுபடியும் அவரை குழப்பியது. உண்மையில் உயர்நிலை வணிகவியல் பொதுப் பள்ளியில் படிப்பதுதான் நல்லது என்று அந்த விளம்பரம் தெரிவித்தது. இதையடுத்து அங்கும் ஒரு டாலர் கொடுத்து தனது பெயரை பதிவு செய்தார். தனது மகன் லாபகரமான தொழிலில் ஈடுபடப் போவதாக நம்பிய மாவோவின் தந்தை கல்விக் கட்டணத்துக்கான தொகையை அனுப்பி வைத்தார். உயர்நிலை வணிகவியல் பள்ளியில் மாணவனாக சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மாவோ. ஆனால் அங்கு பெரும்பாலான வகுப்புகள் ஆங்கில மொழிகளில் நடைபெற்றன. அரிச்சுவடியைக் காட்டிலும் சற்று கூடுதலாக மட்டுமே மாவோவுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே வெறுப்படைந்து அந்தப் பள்ளியிலிருந்து விலகினார்.

அதன்பிறகு மாவோவின் அடுத்தக் கட்ட சாகசம் தொடங்கியது. சாங்ஷா நகரில் இருந்த முதல் மாகாண நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். மிகவும் மதிப்பு வாய்ந்த அந்தப் பள்ளியில் சீன இலக்கியத்திற்கு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் மாவோ முதல் மாணவனாக தேறினார். தான் தேடியது கிடைத்து விட்டது என்று நினைத்தார். சில மாதங்கள் மட்டுமே அங்கும் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. சில வரம்புகளுக்கு உட்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டது. பள்ளியின் விதிமுறைகளும் மாவோவால் ஏற்க முடியாதவையாக இருந்தன. எனவே அங்கிருந்தும் அவர் வெளியேறினார். அதன்பிறகு சாங்ஷாவில் புதிதாக திறக்கப்பட்ட பொது நூலகம் அவரை கவர்ந்து இழுத்தது. அங்கேயே தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடத் தொடங்கினார்.

 

i



நூலகம் திறந்தவுடன் உள்ளே நுழையும் முதல் வாசகராக மாறினார். எடுக்கும் நூல்களை மிக கவனமாக வாசிப்பார். மதிய உணவை வாங்குவதில் கூட காலம் தாழ்த்துவார். நூலகம் மூடப்படும் வரை அங்கேயே இருப்பார். இந்த நாட்கள் மாவோவின் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் தனது மகன் வீணாக நாட்களை கழிப்பதாக மாவோவின் தந்தை கருதினார். எனவே அவருடைய மாதாந்திர செலவுகளுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். பணம் இல்லாதபோது நமது மனம் ஒருமுகப்படுகிறது. மாவோவுக்கும் அதுமாதிரியான சந்தர்ப்பம் வாய்த்தது. எல்லா இளைஞர்களையும் போல தனது வாழ்க்கைக்கு உதவும் தொழில் குறித்து அவர் சிந்தித்தார்.

ஆசிரியராக மாறுவது என்று முடிவு செய்தார். 1913-ஆம் ஆண்டு ஹூனான் மாகாண நான்காவது ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்தார். அங்கு சேருவதற்கு கல்விக் கட்டணம் தேவையில்லை என்ற விஷயம் மாவோவுக்கு ஆறுதலாக இருந்தது. நண்பர்களும் அங்கு சேரும்படி மாவோவை வற்புறுத்தினார்கள். தங்கும் இடத்திற்கும் உணவுக்கும் சிறு தொகை இருந்தால் போதும் என்பதால் மாவோ அங்கு சேரத் தயாரானார். தனது விருப்பத்தை தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்து கடிதம் எழுதினார். அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். பள்ளியில் சேருவதற்காக மாவோ ஒரு கட்டுரையை தயாரித்தார். அவருடைய நண்பர்கள் இருவரும் தங்களுக்கும் சேர்த்து கட்டுரைகள் தயாரிக்கும்படி மாவோவை கெஞ்சினார்கள்.

 

lk



மொத்தம் மூன்று கட்டுரைகளை மாவோ தயாரித்தார். அந்த மூன்று கட்டுரைகளும் பள்ளியில் ஏற்கப்பட்டன. மூவருக்கும் இடம் கிடைத்தது. உண்மையில் மாவோ மூன்று முறை அங்கு சேர தகுதி பெற்றார். இந்தப் பள்ளியில் சேர்ந்த சமயம் சீனாவின் அரசியல் திசை மாறிக்கொண்டிருந்தது. சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சி பெரிய மாற்றங்களை கொண்டு வர தவறிவிட்டது. மஞ்சுக்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது தவிர வேறு எதுவும் புதிதாக உருவாகவில்லை. சீனாவின் குடியரசுத்தலைவராக பொறுப்பு வகித்த யுவான் ஷிகெய் பழைய சர்வாதிகார அரசில் பணியாற்றியவர். அந்த அரசாங்கத்தைப் போலத்தான் அவருடைய அரசாங்கமும் செயல்பட்டது.

1912 -ஆம் ஆண்டு சன்யாட் சென் கோமின்டாங் என்று அழைக்கப்பட்ட தேசிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியை ஹூனான் மாகாண அரசு ஆதரித்தது. புரட்சி முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை யுவான் ஷிகெய் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் ஆட்சி நடத்தினார். அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சன்யாட் சென் போர்ப் பயணத்தை தொடங்கினார். இந்தப் போர்ப் பயணத்திற்கு சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்த ஐந்து மாகாணங்களும் ஜியெங்ஸீ மாகாணமும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தன. ஆனால் இந்த இரண்டாவது புரட்சி பெரிய அளவில் தீவிரமாக நடைபெறவில்லை. தெற்கு நோக்கி சென்ற புரட்சி படைகள் 1913-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுதோல்வி அடைந்தன. மாவோ வசித்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநர் டான் யாங்கெய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். அங்கு டாங் ஸியாங்மிங்  என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இந்தப் புரட்சி தோல்வி அடைந்த சில நாட்களில் கோமின்டாங் கட்சிக்கு சீனா முழுவதும் தடை விதிக்கப் பட்டது.