Skip to main content

சீனா ஒரு ஃபிளாஷ்பேக்! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #3

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

மாவோ பிறப்பதற்கு முன்னரே, சீனாவில் பழைய வாழ்க்கை முறைகள் தகர்ந்து கொண்டிருந்தன. உள்நாட்டில் படுமோசமான சீரழிவுகள். வெளிநாடுகள் கொடுத்த கடுமையான நெருக்கடிகள் என்று சீனா தத்தளித்துக் கொண்டிருந்தது. இதற்கு காரணம் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில்புரட்சி. 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில்புரட்சி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, 19 ஆம் நூற்றாண்டில் அதுவரை கனவிலும் கண்டிராத அதிகாரத்தையும், விரிவாக்கத்திற்கான ஆற்றலையும் ஐரோப்பா வளர்த்துக் கொண்டிருந்தது. "வர்த்தக உறவுகளை ஏற்படுத்தலாம்" என்று பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் ஜார்ஜ் சீனாவின் பேரரசருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
 

d



"வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் காட்டுமிராண்டிகள். அவர்களுடைய தயவு சீனாவுக்குத் தேவையில்லை" என்று பேரரசர் சியான்லுங் மறுத்துவிட்டார். ஆனால், அதன்பிறகு வந்த ஒன்றரை நூற்றாண்டுகள் சீனாவின் வாழ்க்கை நிலை மோசமான அளவுக்குத் தேங்கியது. உள்நாட்டுக் கொந்தளிப்புகளிலும் ரத்தம் சிந்திய கலகங்களிலும் சீனாவின் வளங்கள் வீணாகின. அதாவது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சீனா பல்வேறு யுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஐரோப்பாவுக்கு தனது உற்பத்தி பொருட்களை விற்பதற்கு மிக விரிவான சந்தை தேவைப்பட்டது.

1839 ஆம் ஆண்டு முதலாவது அபினிப் போர் ஏற்பட்டது. இது பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. சீனாவிலிருந்து தேயிலையை வாங்குவதற்காக பிரிட்டன் அபின் என்ற போதைப் பொருளை சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்றது. இது சீன குடிமக்களை போதைக்கு அடிமையாக்கியது. பிரிட்டனின் இந்த சட்டவிரோத வியாபாரத்தை தடை செய்ய லின் ஸியூ என்ற சீன கவர்னர் முடிவெடுத்தார். ஹூனான் மற்றும் ஹுபேய் மாகாணங்களை இவர் நிர்வகித்தார். அந்த மாகாணங்களில் சுமார் ஆயிரத்து 700 அபின் வியாபாரிகளை அவர் கைது செய்தார். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட 26 லட்சம் பவுண்ட் எடையுள்ள அபினை தீவைத்து அழித்தார்.

இதையடுத்து, பிரிட்டன் தனது கப்பல் படை கொண்டு சீனாவின் முக்கியமான துறைமுகங்களை தாக்கியது. தங்களுடைய வர்த்தகத்தை தடைசெய்ய முயற்சிக்கும் சீன அரசுக்கு பாடம் புகட்ட இந்த தாக்குதலை நடத்தியது. பீரங்கி பொருத்தப்பட்ட கப்பல்களின் தாக்குதலை சீனாவின் பழமையான ராணுவத்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து 1942 ஆம் ஆண்டு பிரிட்டனுடன் சீனா நான்ஜிங் நகரில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் அடிப்படையில் குவாங்ஸோவ், ஜின்மென், ஃபுஸோவ், நிங்போ, ஷாங்காய் ஆகிய முக்கிய துறைமுகங்களில் பிரிட்டனுக்கு வர்த்தக உரிமை வழங்கப்பட்டது. பிரிட்டனின் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கவர்னருக்கு பேரரரசர் தண்டனை வழங்கினார்.
 

gh



பிரிட்டனுக்கு வர்த்தக உரிமை வழங்கப்பட்ட துறைமுக நகரங்களில் ஆங்கிலேயர்கள் வர்த்தக நிறுவனங்களையும், குடியிருப்புகளையும் கட்டினார்கள். விரைவில் ஹாங்காங்கை பிரிட்டன் தனது வசமாக்கியது. பிரிட்டனுக்கு உரிமை அளித்ததைப் போல, மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும் சீன அரசு வர்த்தக உரிமைகளை வாரி வழங்கியது. அவையும் தங்கள் பங்கிற்கு வர்த்தகம் மற்றும் குடியிருப்புகளை தொடங்கின. சீன துறைமுகங்களில் மேற்கத்திய ஆக்கிரமிப்பு அதிகரித்தது. 1856 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு சொந்தமான கப்பலை சீன அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டன், பிரான்சுடன் சேர்ந்து சீனா மீது தாக்குதல் நடத்தியது. இந்த இருநாடுகளுடன் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் இணைந்தன. மேலும் 11 துறைமுகங்களை வர்த்தகத்திற்கு திறந்துவிட சீனா ஒப்புக் கொண்டது.

தவிர, தலைநகர் பெய்ஜிங்கில் வெளிநாட்டவர் வந்து போகவும், கிறிஸ்தவ மிஷனரி நடவடிக்கைகளை அனுமதிக்கவும் சீனப் பேரரசர் ஒப்புதல் அளித்தார். அபின் கடத்தலை சட்டபூர்வமாக்கவும் பேரரசர் நிர்ப்பந்திக்கப்பட்டார். இருந்தாலும் 1859 ஆம் ஆண்டுவரை, சீன அரசு, பிரிட்டிஷ் அதிகாரிகள் பெய்ஜிங்கிற்குள் நுழைவதை தொடர்ந்து தடைசெய்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டனும் பிரான்ஸும் பெய்ஜிங்கிற்குள் தங்கள் பீரங்கிப் படையை அனுப்பி துவம்சம் செய்தன. பேரரசரின் கோடைக்கால மாளிகையை எரித்து தரைமட்டமாக்கின. இதையடுத்து அந்த நாடுகளுக்கு கூடுதல் சலுகைகளை பேரரசர் வழங்க வேண்டியதாயிற்று. ஓரங்களில் உள்ள முக்கியத் துறைமுகங்களை மட்டுமில்லாமல், தலைநகர் பெய்ஜிங்கிலேயே குடியிருப்பு உரிமைகளை அன்னியர்கள் பெற்றார்கள்.

இது சீனாவின் உள்ளடங்கிய மாகாணங்கள் பலவற்றுக்கு தெரியவே இல்லை. முக்கியமாக ஹூனானில் இதன் பாதிப்பு எதுவுமேயில்லை. அந்த மக்கள் வெளிநாட்டவர்கள் மீது தீவிரமான பகையுணர்வு கொண்டிருந்தனர். அவர்கள் சீனர்களிலேயே தனித்தன்மை மிக்கவர்களாக இருந்தனர். சீனாவின் பிற மாகாணங்களைச் சேர்ந்த மக்களையே அவர்கள் நம்பவில்லை. மாவோவின் தாத்தா காலத்தில் தெய்பிங் கலகம் சீனாவையே உலுக்கியது. இந்தக் கலகத்துக்கு முக்கியமான நபர் ஹுங் ஸியு சுவான். இவர், 1844 ஆம் ஆண்டு சீனாவின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர். அப்போதிருந்து அவர் சீனாவை ஆண்ட மஞ்ச்சு பேரரசை வெறுத்தார். கடவுளிடமும், மூத்த சகோதரரான யேசு கிறிஸ்துவிடமும் தான் பேசியதாக மக்களிடம் கூறத் தொடங்கினார். அவர்கள் சீனாவில் மஞ்ச்சு பேரரசை தூக்கியெறிந்துவிட்டு, அவர்களுடைய சிலைகளை சீனாவுக்கு வெளியே வீச வேண்டும் என்று தனக்கு உத்தரவிட்டதாக அவர் பிரச்சாரம் செய்தார். மஞ்ச்சு பேரரசுக்குப் பதிலாக தாய்பிங் டியென்க்வோ என்ற புதிய பேரரசை நிறுவப் போவதாக அவர் பேசினார். இதற்கு, பரிசுத்தமான அமைதி நிறைந்த சொர்க்க பேரரசு என்று பொருள்.
 

vb



அவர் தனக்கு ஆதரவாக நான்கு ராணுவ தளபதிகளை சேர்த்துக் கொண்டார். மஞ்ச்சு இன மக்களை கொன்று குவித்தனர். தொடக்கத்தில நான்கிங் மாகாணத்தை அவர்கள் கைப்பற்றினார்கள். அங்கிருந்து சீனாவின் கால் பகுதியை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சீனாவின் மொத்த ஜனத் தொகையில் பாதிப்பேர் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் வசித்தனர். எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று சீனா சீரழிவின் உச்சத்திற்கு சென்றது. மஞ்ச்சு இன மக்கள் பெரும்பகுதியாக வாழ்ந்த ஹூனான் மாகாணத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். எண்பது நாட்கள் நடைபெற்ற இந்த முற்றுகையை ஹூனான் மாகாண மக்கள் உறுதியுடன் தாக்குப்பிடித்தனர். அந்த மாகாணத்தின் ராணுவ தளபதியாக இருந்த ஸெங் காஃபேன் தாய்பிங் ராணுவத்தை எதிர்த்து முறியடித்தார்.

இந்தக் கலகம் 1851 ஆம் ஆண்டு முதல் 1864 ஆம் ஆண்டுவரை நீடித்தது. தாய்பிங் அமைப்பினரிடம் இருந்த நான்கிங் சீன ராணுவத்தின் வசம் வந்ததும், தாய்பிங் தலைவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு பிறகுதான் தன்னைத்தானே பலப்படுத்திக் கொள்ளும் இயக்கம் தொடங்கியது. நவீன ஆயுதங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டது. சீனாவை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களை எதிர்த்து போராடவும், கன்பூசியனிஸ வாழ்க்கை முறையை பாதுகாக்கவும் நவீன ஆயுதங்கள் தேவை என்ற சிந்தனை வளர்ந்தது. ஆனால், 1894 ஆம் ஆண்டு, அதாவது, மாவோ பிறந்த மறு ஆண்டு, குய்ங் பேரரசு மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது.
 

Next Story

மாபெரும் அரசியல் குழப்பத்தில் சீனா! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #9

Published on 10/12/2019 | Edited on 06/01/2020


சிலமாதங்களுக்கு முன்புதான் ஒரு வம்சாவளி அரசு தகர்க்கப்படுவதை மாவோ கண்கூடாக பார்த்தார். ஆனால் இப்போது மேட்டுக்குடியினரின் சூழ்ச்சிகள் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தன. புரட்சியின் பயன்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஹூனான் ஆளுநர் டான் யாங்கெய் விரட்டப்பட்டது மாவோவுக்கு பிடிக்கவில்லை. அவர் நல்ல மாற்றங்களை கொண்டுவந்ததாக மாவோ நினைத்தார். கோமின்டாங் கட்சிக்கு எதிரான சண்டையில் சாங்ஷா நகரில்  இருந்த பெரிய வெடிமருந்து கிடங்கு பயங்கரமாக வெடித்து  சிதறியது. ஹூனானில் உள்ளவர்களுக்கு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக குடியரசுத் தலைவரின் ஆதரவாளர்களில் இருவர் கிடங்கிற்கு தீ வைத்தார்கள். கோமின்டாங் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, மாவோவின் மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 

n



ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த ஆண்டுகளில் மாவோ சிறந்த எழுத்தாளராகவும் உருவாகி கொண்டிருந்தார். சாங்ஷாவில் ஜியாங் நதி என்ற நாளிதழைப் படித்து வந்தார். அதில்தான் முதன்முறையாக அவர் சோசலிசம் என்ற வார்த்தையைப் பார்த்தார். சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சீன சோசலிஸ்ட் கட்சியை ஜியாங் காங்கூ என்பவர் நிறுவினார். அந்தக் கட்சியின் கொள்கைகள் மாவோவை கவர்ந்தன. "அரசாங்கம் இல்லை; குடும்பம் இல்லை; மதம் இல்லை; தகுதிக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற ஊதியம்." இது ஆற்றல் மிகுந்த கருத்து என்று தனது தோழர்களுக்கு மாவோ எழுதினார். அவருடைய கடிதங்களுக்கு சில நண்பர்கள் பதில் எழுதினார்கள்.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மாவோ படித்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் தனது கவனம் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு யுவான் ஜிலியூ, யேங் சாங்ஜி என்ற  இரண்டு பேராசிரியர்கள் உதவி செய்தார்கள். அவர்களில் யுவான், மாவோவின் எழுத்துக்களை கேலி செய்வார். ஒரு பத்திரிக்கையாளனின் எழுத்துக்களைப் போல இருப்பதாக அவர் கிண்டல் செய்வார். இவர், பெர்லின், டோக்கியோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் படித்து திரும்பியவர். இவருடைய கிண்டல் காரணமாக செவ்வியல் மொழி நடையை மாவோ கற்றுக்கொண்டார்.

யேங் சாங்ஜி மாவோ மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் கருத்துமுதல்வாதி. உயர்வான ஒழுக்க நெறிகளை பின்பற்றியவர். நீதிதவறாத, வலிமையுள்ள, நேர்மையான, சமூகத்திற்கு பயன்படக்கூடிய மனிதர்களாக மாணவர்கள் மாறவேண்டும் என்று போதனை செய்வார். 1915 -ஆம் ஆண்டு சீனா மீது ஏகாதிபத்திய அரசுகள் கடுமையான நெருக்கடியை திணித்தன. அந்த நெருக்கடிகளுக்கு சீனா இழிவான விதத்தில் அடிபணிந்து வந்தது. மாவோவின் மனதில் அவநம்பிக்கை தீவிரமடைந்தது. அந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி, யுவான் ஷிகெய்யிடம் ஜப்பானின் இறுதி எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. 21 கோரிக்கைகள் என்று அது அழைக்கப்பட்டது.

 

 

jhk



ஜப்பானின் மிகாடோ தலைமையிலான அரசு, சீனாவை முழுவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக தெரிவித்தது. அத்துடன் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஷான்டுங் மாகாணத்தில் ஜப்பானுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருப்பதாக வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் சீன குடியரசுத்தலைவர் இதை ஏற்றுக் கொண்டார். இது ஒரு மிகவும் வெட்ககரமான நாள் என்று மாவோ எழுதினார். சீன அரசாங்கத்தை கண்டனம் செய்யுமாறு தனது சக மாணவர்களை கேட்டுக் கொண்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் யுவான் ஷிகெய் சீனாவின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டார். தனது அரசுக்கு ஹூங்க்ஸியான் என்று பெயர் வைத்து கொண்டார்.

இதையடுத்து சீனாவின் பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களுடைய எதிர்ப்பு காரணமாக புதிய பேரரசர் தனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார். மீண்டும் குடியரசுத் தலைவராக மாற முன்வந்தார். ஆனால் அதற்குள் காலம் கடந்து  விட்டது. 1916 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் இருந்து வந்த படைகள் தலைநகரை நெருங்கின. இதையறிந்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநரான டாங் ஸியாங்மிங் பேரரசரின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்தார். அதற்கும் அவகாசம் இல்லை. அடுத்த மாதமே அதாவது, ஜூன் மாதம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பேரரசர் யுவான் ஷிகெய் திடீரென்று மரணம் அடைந்தார். ஹூனானில் நிலைமை மோசமடைந்தது. அங்கு பேரரசர் யுவான் ஷிகெய்யின் ஆதரவாளரான டாங் ஸியாங்மிங் விரட்டப்பட்டார். தனது அரண்மையிலிருந்து விவசாயி வேடத்தில் அவர் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றார். அவர் போகும்போது அரசாங்க கருவூலத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டார்.
 

Next Story

எதிர்காலம் குறித்த குழப்பங்களின் முடிவில்… ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #8

Published on 07/12/2019 | Edited on 06/01/2020

புரட்சிக்குப் பிறகு ஹூனான் மாநிலம் வேகமாக மாறிவந்தது. சீனாவில் வம்சாவளி ஆட்சி திடீரென்று தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நம்பிக்கை பிறந்தது. சீனாவில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற யுவான் ஷிகெய் கொஞ்ச நாட்கள் வரை நல்ல பிள்ளையாக இருந்தார். தலைநகரில் நடப்பவை இன்னமும் மற்ற பகுதிகளுக்கு சென்று சேருவதில் தாமதம் நிலவியது. ஹூனானில் எழுத்து சுதந்திரம் இருந்தது. அந்த மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த டான் யாங்கெய் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அபின் பயிரிடுவதை தடை செய்தார். போதை மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டது. எழுத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பத்திரிகைகள் அமெரிக்காவையும் பிரிட்டனையும் கடுமையாக விமர்சனம் செய்தன. கல்விக்கு நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக அதிகரிக்கப் பட்டது.  நவீனப் பள்ளிகள் ஏராளமாக உருவாகின. இளம் பெண்களும் இளைஞர்களும் தங்கள் முடிகளை வெட்டிக் கொண்டார்கள். பெண்கள் முக்காடில்லாமல் வெளியிடங்களில் நடமாடினர்.

 

k



ராணுவத்திலிருந்து மாவோ விலகியபோது அவருக்கு 18 வயது ஆகியிருந்தது. அவரளவில் இந்த காலக் கட்டம் குழப்பம் மிகுந்ததாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் பலவிதமான விளம்பரங்கள் அவரைக் கவர்ந்தன. காவல்துறை பயிற்சிப்பள்ளியில் சேருவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதில் சேருவதற்கு பெயரை பதிவு செய்தார். ஆனால் அதற்காக அவரை பரிசோதிப்பதற்கு முன், சோப்புத் தயாரிக்கும் பள்ளியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தார். அந்தப் பள்ளியில் கல்விப் பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் உணவுக்கு உத்தரவாதமும் சிறிதளவு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அது ஒரு கவர்ச்சியான விளம்பரம். சோப் தயாரிப்பதால் ஏற்படும் சமூக நன்மைகளை அந்த விளம்பரம் விரிவாக விளக்கியிருந்தது. காவல்துறை பயிற்சி பள்ளியில் சேரும் முடிவை மாவோ கைவிட்டார். அதற்கு பதிலாக சோப் தயாரிப்பாளராக மாறுவது என்று முடிவு செய்தார். ஒரு டாலர் பணம் கட்டி தனது பெயரை பதிவு செய்து கொண்டார். இந்த சமயத்தில் மாவோவின் நண்பன் ஒருவன் சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அந்தப் பள்ளியில் சேரும்படி மாவோவை வற்புறுத்தினான். மூன்று ஆண்டுகளில் எல்லாவிதமான சட்ட நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம். படிப்பு முடிந்தவுடன் மாணவர்கள் வழக்குரைஞர்களாக மாறிவிடலாம் என்று ஒரு விளம்பரம் உறுதி அளித்தது. இந்த விளம்பர விவரங்களை விரிவாக குறிப்பிட்டு தனது செலவுக்கு பணம் அனுப்பும்படி மாவோ கடிதம் எழுதினார். இந்நிலையில் சீனா இப்போது பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மாவோவின் மற்றொரு நண்பர் யோசனை கூறினார்.

 

i



அதை தொடர்ந்து ஒரு வணிகவியல் நடுநிலைப்பள்ளியில் இன்னொரு டாலர் செலவு செய்து தனது பெயரை பதிவு செய்தார். அங்கு அவர் ஒரு மாணவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் இன்னொரு விளம்பரம் மறுபடியும் அவரை குழப்பியது. உண்மையில் உயர்நிலை வணிகவியல் பொதுப் பள்ளியில் படிப்பதுதான் நல்லது என்று அந்த விளம்பரம் தெரிவித்தது. இதையடுத்து அங்கும் ஒரு டாலர் கொடுத்து தனது பெயரை பதிவு செய்தார். தனது மகன் லாபகரமான தொழிலில் ஈடுபடப் போவதாக நம்பிய மாவோவின் தந்தை கல்விக் கட்டணத்துக்கான தொகையை அனுப்பி வைத்தார். உயர்நிலை வணிகவியல் பள்ளியில் மாணவனாக சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மாவோ. ஆனால் அங்கு பெரும்பாலான வகுப்புகள் ஆங்கில மொழிகளில் நடைபெற்றன. அரிச்சுவடியைக் காட்டிலும் சற்று கூடுதலாக மட்டுமே மாவோவுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே வெறுப்படைந்து அந்தப் பள்ளியிலிருந்து விலகினார்.

அதன்பிறகு மாவோவின் அடுத்தக் கட்ட சாகசம் தொடங்கியது. சாங்ஷா நகரில் இருந்த முதல் மாகாண நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். மிகவும் மதிப்பு வாய்ந்த அந்தப் பள்ளியில் சீன இலக்கியத்திற்கு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் மாவோ முதல் மாணவனாக தேறினார். தான் தேடியது கிடைத்து விட்டது என்று நினைத்தார். சில மாதங்கள் மட்டுமே அங்கும் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. சில வரம்புகளுக்கு உட்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டது. பள்ளியின் விதிமுறைகளும் மாவோவால் ஏற்க முடியாதவையாக இருந்தன. எனவே அங்கிருந்தும் அவர் வெளியேறினார். அதன்பிறகு சாங்ஷாவில் புதிதாக திறக்கப்பட்ட பொது நூலகம் அவரை கவர்ந்து இழுத்தது. அங்கேயே தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடத் தொடங்கினார்.

 

i



நூலகம் திறந்தவுடன் உள்ளே நுழையும் முதல் வாசகராக மாறினார். எடுக்கும் நூல்களை மிக கவனமாக வாசிப்பார். மதிய உணவை வாங்குவதில் கூட காலம் தாழ்த்துவார். நூலகம் மூடப்படும் வரை அங்கேயே இருப்பார். இந்த நாட்கள் மாவோவின் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் தனது மகன் வீணாக நாட்களை கழிப்பதாக மாவோவின் தந்தை கருதினார். எனவே அவருடைய மாதாந்திர செலவுகளுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். பணம் இல்லாதபோது நமது மனம் ஒருமுகப்படுகிறது. மாவோவுக்கும் அதுமாதிரியான சந்தர்ப்பம் வாய்த்தது. எல்லா இளைஞர்களையும் போல தனது வாழ்க்கைக்கு உதவும் தொழில் குறித்து அவர் சிந்தித்தார்.

ஆசிரியராக மாறுவது என்று முடிவு செய்தார். 1913-ஆம் ஆண்டு ஹூனான் மாகாண நான்காவது ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்தார். அங்கு சேருவதற்கு கல்விக் கட்டணம் தேவையில்லை என்ற விஷயம் மாவோவுக்கு ஆறுதலாக இருந்தது. நண்பர்களும் அங்கு சேரும்படி மாவோவை வற்புறுத்தினார்கள். தங்கும் இடத்திற்கும் உணவுக்கும் சிறு தொகை இருந்தால் போதும் என்பதால் மாவோ அங்கு சேரத் தயாரானார். தனது விருப்பத்தை தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்து கடிதம் எழுதினார். அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். பள்ளியில் சேருவதற்காக மாவோ ஒரு கட்டுரையை தயாரித்தார். அவருடைய நண்பர்கள் இருவரும் தங்களுக்கும் சேர்த்து கட்டுரைகள் தயாரிக்கும்படி மாவோவை கெஞ்சினார்கள்.

 

lk



மொத்தம் மூன்று கட்டுரைகளை மாவோ தயாரித்தார். அந்த மூன்று கட்டுரைகளும் பள்ளியில் ஏற்கப்பட்டன. மூவருக்கும் இடம் கிடைத்தது. உண்மையில் மாவோ மூன்று முறை அங்கு சேர தகுதி பெற்றார். இந்தப் பள்ளியில் சேர்ந்த சமயம் சீனாவின் அரசியல் திசை மாறிக்கொண்டிருந்தது. சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சி பெரிய மாற்றங்களை கொண்டு வர தவறிவிட்டது. மஞ்சுக்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது தவிர வேறு எதுவும் புதிதாக உருவாகவில்லை. சீனாவின் குடியரசுத்தலைவராக பொறுப்பு வகித்த யுவான் ஷிகெய் பழைய சர்வாதிகார அரசில் பணியாற்றியவர். அந்த அரசாங்கத்தைப் போலத்தான் அவருடைய அரசாங்கமும் செயல்பட்டது.

1912 -ஆம் ஆண்டு சன்யாட் சென் கோமின்டாங் என்று அழைக்கப்பட்ட தேசிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியை ஹூனான் மாகாண அரசு ஆதரித்தது. புரட்சி முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை யுவான் ஷிகெய் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் ஆட்சி நடத்தினார். அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சன்யாட் சென் போர்ப் பயணத்தை தொடங்கினார். இந்தப் போர்ப் பயணத்திற்கு சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்த ஐந்து மாகாணங்களும் ஜியெங்ஸீ மாகாணமும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தன. ஆனால் இந்த இரண்டாவது புரட்சி பெரிய அளவில் தீவிரமாக நடைபெறவில்லை. தெற்கு நோக்கி சென்ற புரட்சி படைகள் 1913-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுதோல்வி அடைந்தன. மாவோ வசித்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநர் டான் யாங்கெய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். அங்கு டாங் ஸியாங்மிங்  என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இந்தப் புரட்சி தோல்வி அடைந்த சில நாட்களில் கோமின்டாங் கட்சிக்கு சீனா முழுவதும் தடை விதிக்கப் பட்டது.