Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் ‘மாயப் புறா’ - ஓர் அன்பின் தொடர்கதை! #02

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

maayapuraa series part 2

 

'வருசம் முழுதும் வெள்ளாமை செய்து, விளைந்த  வயலை வெள்ளாடு மேய்ந்த கதையாக.' ஊருக்குப் போகலாம் என்று கிளம்பிய தனது குடும்பத்திற்கு,  இப்படி ஒரு சோதனை வரும் என்று அலமேலு எதிர்பார்க்கவில்லை. ஊருக்கு போகவேண்டும் என்று சொல்லும் போதே "முன்னாடி நீவேணும்னா சங்கவியோட போறியா? நான் பின்னால வர்றேன்" என்று பெருமாள் அரைமனதுடன் தான்  சம்மதித்தார். 

“இல்லைங்க. செல்வத்தண்ணன் உங்களத்தான் அதிகமா எதிர்பார்க்கும்.  நாம சேர்ந்தே போகலாம்களே” என்று படாதபாடு பட்டு பெருமாளைச் சம்மதிக்க வைத்திருந்தாள் அலமேலு. தேரு நிலையைவிட்டு கிளம்பினால் போதும் என்ற நினைப்பில் கிளம்பிய அவளுக்கு இப்படி ஒரு சோதனை வரும் என்று அலமேலு நினைக்கவில்லை. 

 

வீட்டைப் பூட்டிக் கொண்டு எல்லோரும் வாசலில் இறங்கிய போது, மஞ்சள் பையை இடுப்பில் சொருகிக் கொண்டு, தலையில் சிறு மூட்டையைச் சுமந்தபடி, திருவாரூர் தேராட்டம் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தார் அலமேலுவின் மாமியார் பவுனு. தெருவோர ஒற்றை பனைமரம் முறிந்து தலையில் விழுந்தது போல அதிர்ச்சியில் உறைந்தார் அலமேலு. 

 

பெருமாளைப் பார்த்ததும், "என்னை பெத்த ராசா, உன்னை பாக்காம  சோறு தண்ணி இறங்கலை ராசா. ஆத்தாளைப் பாரு, செக்கு உலைக்கையா மழமழன்னு இருந்தவ, ஈர்க்குச்சியா இளைச்சு வந்திருக்கேன்"- என்று  முந்தானைத் தலைப்பை மூக்கில் வைத்து உறிஞ்சினாள். 

"வாம்பா,  எனக்கும், நீ தம்பி வூட்டுக்குப் போன பத்து நாளா உன் நெனப்பாகவே இருந்துச்சு " என்று பாசத்தோடு தபேலா வாசித்தார் பெருமாள்.

’பாவி மவளே, உன் நெனப்புல ஈர வெறகை வச்சு எரிக்க. எங்க அண்ணன் வீட்டுக்குப் போற நேரத்துல வந்து, காவலுக்கு நின்னுட்டியே’ என்று மனதிற்குள் மாமியாரைத் திட்டிக் கொண்டே,

"வாங்க அத்தை, நல்லாருக்கீங்களா?" என்று ஒப்புக்கு கேட்டு வைத்தாள் அலமேலு. 

" நீ கேட்கலைன்னு குறை தான்.. " என்று இழுத்தாள் பவுனு.

" பாட்டி" என்று பவுனின் கையை ஆதரவாக வந்து  பிடித்துக் கொண்டாள் சங்கவி. மறுபடியும் பூட்டப்பட்ட வீடு திறக்கப்பட்டது.

’கிழவிய விட்டுட்டும் போகமுடியாது. இழுத்துக்கிட்டும் போகமுடியாது’ என்று மனதிற்குள் முனகினாள் அலமேலு. பயணம் நின்றது.

 

வீட்டிற்குள் அனைவரும் வந்து பேசினர். மறுநாள் காலை அலமேலுவும் சங்கவியும் முன்னதாகக் கிளம்புவதென்றும், பெருமாள் திருமண நாள் அன்று வருவதாகவும், முடிவு செய்தனர்.

"தரையில் சுற்றும்  பம்பரமாக இருந்தாலும், வானத்தில் பறக்கற பட்டமாக இருந்தாலும் ஆட்டம் ஒருநாள் அடங்கி தான் ஆகணும்" இது புரியாத அலமேலு, அண்ணன் வீட்டிற்கு போவதில் தலைகால் புரியாமல் பரபரத்துக் கொண்டிருந்தாள். கணவருக்கு  சமைத்துப் போடுவதற்கு மாமியார்  இருக்கிறாள் என்ற தைரியத்தில்  ஊருக்கு கிளம்ப தயாரானாள் அலமேலு.

 

மறுநாள் அதிகாலையிலேயே  எழுந்த அலமேலு, வாசல் தெளித்து அரிசி மாவில்  கோலம் போட்டார்.

"அதிகாலையில் கோலம் போடும் போதே பெண்கள்  மனநிலையை தெரிந்துகொள்ளலாம். கோலம் நல்லா ஜாங்கிரி மாதிரி சுற்றி சுற்றி போட்டார்கள்  என்றால்  அவர்கள் தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதையே தெருவை அடைத்து பூக்கோலம் போட்டார்கள் என்றால் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார்கள் என்று பொருள். இரண்டு கோடு இழுத்து நட்சத்திரம் போட்டார்கள் என்றால்   சோகமா இருக்கிறார்கள் என்றும், வாசலைப் பெருக்கிப் பக்கத்து வீட்டு வாசல்ல தள்ளினார்கள் என்றால் , கோபமாக சண்டை போடுற மனநிலையில் இருக்கிறார்கள் என்றும் நம்மைப் போன்ற உளவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

 

அலமேலு போட்ட கோலம் ஜாங்கிரி ஜாங்கிரியாய் அவள் மன மகிழ்வை எடுத்துக்காட்டியது. அடுத்து அலமேலு, அடுப்பை மெழுகிப் பளிச்சென்று பூக்கோலம் போட்டு அவசரமாகப் போய், நன்கு உயரமா இருக்கும் பித்தளைப் பால் பாத்திரத்தில்  நுரை பொங்கப் பொங்க, பாலைக் கரந்து அடுப்பில் வைத்துவிட்டு சங்கவியை எழுப்பினாள்.

"சூரியன் சுள்ளுனு முகத்துல அறையறது கூட தெரியாம, பொட்டைப் புள்ளைக்கு  இவ்வளவு நேரம் என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு" என அவள் சுப்ரபாதத்தை ஆரம்பித்தாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டே மாட்டுத் தொழுவத்தில் சாணம் அள்ளிப்போட்டு பெருக்கிக் கொண்டிருந்த மாமியார் பவுனு "தங்கத்தில் தொட்டில் கட்டி, வைர கெண்டியில பால் குடிச்சு , வானத்து நிலாவுல ஓடிப்பிடிச்சு  விளையாடிய,  எட்டு ஊரு  சீமையில இல்லாத  உடம்பொறப்பைப் பார்க்கப் போறாப் பாரு. ஒன்னு விட்ட அண்ணனுக்கே இந்த ஆட்டம் போடுறாளே. ஒரே ரத்தத்தில் பொறந்தவளா இருந்தா என்ன பண்ணுவா?" என்று மாமியார்க்காரி பவுனு சொன்னது அலமேலுவின் காதில் விழுந்தது.

"ஒட்டுத் திண்ணையில் ஒன்னா கை பிடிச்சு  வாழ்ந்த ஒத்துமையான குடும்பம் எங்களது. ஓட்டைப் பானை சட்டிய தூக்கிகிட்டு,  ஊரு ஊரா குடும்பம் பண்ணவங்களுக்கு  தெரியுமா பங்காளி பாசம்?" என்று பதிலுக்கு  சொடுக்கெடுத்தாள் அலமேலு.

 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சங்கவி "அம்மா.. காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா மகாபாரதத்தை. பாட்டி  நீயும் உன் ஓட்டை வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்ட. போய் யாராச்சும் சுடுதண்ணி போடுங்க. குளிக்கணும்” சங்கவி சொன்னதும், கொல்லைப்புரத்தில் இருக்கும் கல் அடுப்பை மூட்டி, வேலங்கட்டையையும், கம்பந் தட்டையும் வைத்து எரிய வைத்து, தண்ணீரைச் சூடு பண்ணிக் கொண்டே, "அம்மா... சங்கவி, நீச்ச தண்ணி கொஞ்சம் எடுத்தாம்மா" என்று குரல் கொடுத்தாள் பவுனு.

 

இந்தக் கோரிக்கைக் குரல், பேத்தி  சங்கவிக்கு இல்லை. மருமகள் அலமேலுவுக்கு  என்று மாமியாருக்கும் மருமகளுக்கும் தெரியும். 

"பாட்டி, இந்த காலங்காத்தால நீச்ச தண்ணி எதுக்கு?  அம்மா கறந்த பாலை இழைய  காய்ச்சி, மதுராந்தகம் லட்சுமி கபேயில் வறுத்து அரைத்த காபி கொட்டையில் மணக்க மணக்க பில்டர் காபி போடுறாங்க. அதைக் குடிங்க" என்று சொல்லும்போதே நாவில் காபியின் சுவையை உணர்த்தினாள் சங்கவி.

"உங்க அம்மா இதோ எனக்கு காபி கொண்டு வர்றா பாரு" என்று பவுனு சொல்லும் போதே, அலமேலு டம்ளரில் டபாராவை  கவிழ்த்து மூடிய காபியைக் கொண்டுவந்து வைத்தாள்.

"ரெண்டு பேரும் ஊருக்குத்தான் வெறும் வாயை மெல்றீங்களா? உள்ளுக்குள்ள  பாசமா தான்  நகமும் சதையுமா ஒட்டிக்கிட்டு இருக்கீங்க" என்று ஆச்சரியப்பட்டாள் சங்கவி.

"சங்கவி, மாமியா.. மருமக உறவுங்கறது களத்துல அடிச்சு தூத்தற பதரு, நெல்லு  மாதிரியான உறவில்லை. வயக்காட்டு ஏர்கலப்பைல  மாட்டி சிக்கி தவிச்சாலும், வயலை விட்டு போகாத நண்டு மாதிரியான உறவு" என்று வாழ்வின் எதார்த்தத்தை சொன்னாள் பவுனு. 

"அடியேய்... அங்க என்ன கதை அளந்து கிட்டு.  காலைல 8 மணிக்கு குமரன் பஸ்ஸை பிடிச்சாகணும்.  சீக்கிரமாக கிளம்பு" என்று மகளை விரட்டினாள் அலமேலு.

 

காலைல இட்லியும் வரமிளகாய்ச் சட்னியும் வைத்து, மதியத்திற்கு மொச்சை கருவாட்டு குழம்பு செய்து வைத்திருந்தார் அலமேலு. இந்த குழம்பைச் சுண்ட வச்சு, மாமியாரு நாலுநாள் ஓட்டிடுவாங்கன்னு கணக்குப் போட்டாள். 

 

கிளம்பிய நிலையில், ”கல்யாணத்துக்கு அத்தைக்காரிங்கிற முறையில சீர் செய்யணும்” என்று புருஷனிடம் பணம் கேட்டாள் அலமேலு. பெருமாள், அலமேலுவை ஏற இறங்க பார்த்தார். 

"ஒன்றுவிட்ட அத்தைதானே நீ. இதுக்கே நலுங்கு வைக்கணுமா?" 

"ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு, குலத்துக்கு ஒரு கொடியா பொறந்தவ நான். நலங்கு வைக்காம சிறக்குமா கல்யாணம். எனக்கும் கைல நாலு காசு இருந்தா, நான் ஏன் உங்கக்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கப்போறேன்”- என கண்ணை கசக்கினாள் அலமேலு. 

"சரி சரி அழுது ஆர்பாட்டம் பண்ணாத.” என்றபடி, கூடத்தைத் தாண்டி உள்ளறைக்குள் சென்று, பழைய இரும்புப் பெட்டியை திறந்து, துணிகளுக்கு அடியில் இருந்து "எலி வளையில் காத்திருந்து திருடி வந்தது" போல இருந்த,  ஒரு துண்டை எடுத்தார்.  எட்டாய் மடித்து வைத்த துண்டில் அதைவிட,  எட்டாய் மடித்துச் சொருகி வைத்திருந்த பணத்தை எடுத்து, அதிலிருந்து 200 ரூபாயை கொடுத்து..

"ஒரு கால் காசு வரிசை வெச்சிடு. துணிமணி சீர்செனத்திக்கு, உங்க போக்குவரத்துக்கு மீதி பணத்தை வச்சிகோங்கன்னு" என்று அதற்கு பட்ஜெட்டும் போட்டார்.

 

அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அடுக்களை வந்த அலமேலு ’கால் காசு வரிசை வச்சா,  அரை பவுனுக்குக் கூட விதி இல்லாத வக்கத்தவன்னு அண்ணிக்காரி சொல்லிக் காட்டுவா. என்ன பண்றது’ ன்னு நினைத்தவள், ஏதோ யோசனை வந்தது போல, பின் வாசல் வழியா வடக்குத்தெரு மாரிசெட்டி வீட்டிற்கு சென்றாள்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முந்தானையில் முடிந்திருந்த " கல்லு வச்ச லட்டுக் கம்மலை செட்டியார் கிட்ட கொடுத்து அடமானம் வச்சு மேலும் 250 ரூபாய் வாங்கிக்கொண்டு, வந்த சுவடு தெரியாமல் வீட்டுக்கு வந்தாள்.

 

அதற்குள்  சங்கவி மூட்டை முடிச்சு எல்லாம் கட்டி வைத்திருந்தாள். ” 8 மணி குமரன் பஸ்சை பிடிக்கணும்மா” என்றாள் அவசரமாக.  

 

ஊர் எல்லையில் இருக்கிற ஆலமரத்தடிக்கு அலமேலுவும் சங்கவியும் நடந்தார்கள். அங்குதான் பஸ் நிற்கும். எல்லையில் குடிசை போட்டு இருந்த குறவர்கள்  கூட்டம் ஒன்று, சங்கவியைப் பார்த்ததும் சூழ்ந்துகொண்டது. "ஆத்தா.. மகமாயி..  மவராசி.. முகத்துல கல்யாணக் களை வந்திடுச்சி. சீக்கிரம் நேரம் கை கூடுது” என்று அதில் ஒரு குறப்பெண் குறி சொல்ல ஆரம்பித்தாள்.

"அட, பொழப்பப் பார்த்துகிட்டு போவியா. காதுல மூக்குல இருக்கறதுதான், ஒத்த சங்கிலி இல்லை கழுத்துக்கு. இதுல கல்யாணக் களையாம் கல்யாணக் களை."என்று விரக்தியாக சொன்னாள் அலமேலு.

"ஆத்தா... ஜக்கம்மா சொல்றா. நான் சொல்லல தாயீ, கல்யாணம் கூடுச்சின்னா எனக்கு ரவிக்கைத் துண்டு குடு  தாயீ" என்றாள் அவள் தீர்மானமாக.

 

அதைக் காதில் வாங்காமல் பஸ் வருகிறதா என்று சங்கவியும் அலமேலுவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

பிளஸ் டூ முடித்துவிட்டு மேல காலேஜுக்கு போகவேண்டும் என்று நினைத்திருந்தாள் சங்கவி. அலமேலுவுக்கோ ’ இந்த வருஷம் சங்கவி படிப்பை முடித்ததும், கட்டிக் கொடுத்துடணும்’ என்ற எண்ணம் இருந்தது. 

 

நாம நினைச்சு  என்ன பண்றது? இருக்கிற நாலு காணிய வெச்சு விவசாயம் பண்ணி, கஞ்சி குடிக்கத்தான் முடிந்ததே தவிர, நகை நட்டு சீர் செனத்தின்னு சேர்த்து வைக்க முடியலை. ஒத்த புள்ளங்கறதால காடு கழனி இருக்குன்னு யாராவது கல்யாணம் பண்ணாத்தான் உண்டு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே தூரத்தில் ஹாரன் சத்தம் கேட்டது.

 

சங்கவி இரண்டு கைகளிலும் இரண்டு பைகளை தூக்கிக்கொண்டாள். அலமேலு தலையில், சின்ன சிப்பத்தில் உளுந்து மூட்டையும் இடுப்பில் ஒரு சின்ன பையில் துவரையும் கட்டி எடுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏற முயன்றாள்.

 

பஸ்ஸின் மேல்மாடி முழுதும் ஹவுஸ் புல்லாக இருந்தது. சென்னையில் ஓடும் கூவம் ஆற்றை விட நாற்றத்துடன் பஸ்ஸில் வியர்வை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஒன்றின் மீது ஒன்று வைத்து அடுக்கிய வெற்றிலை கட்டுகள் மாதிரி பஸ்ஸினுள் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

 

ஒரு வழியாக எப்படியோ பஸ்ஸில் ஏறி மாம்பாக்கம் வந்து  சேர்ந்தனர். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழித்து சங்கவி மாமன் வீட்டிற்கு வருகிறாள். வீட்டிற்கு சுண்ணாம்பு அடிப்பதற்காக வாசலிலேயே, சுண்ணாம்புக்கல் பெரிய பெரிய சாலில் ஊறவைக்கப் பட்டிருந்தது. தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு நான்கு பேர் பின்புறம் சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தனர். 

 

நடுவாசலில் சும்மா ’மதுரைவீரன்’ சிலையாட்டம், சிவப்பு  கலரில்  வாசலை அடைத்துக் கொண்டு "டம டம டம டமா,’ என்று சத்தம் போட்டுத் தெரு நாயை எல்லாம் ஓடவிடுமே, புல்லட் வண்டி. அது நின்றுகொண்டிருந்தது. புல்லட்டைப் பார்த்ததும் பையைத் தரையில் போட்டுவிட்டு, கையை முகவாயில் முட்டுக் கொடுத்துக் கொண்டு அதை "ஆ" என வேடிக்கை பார்த்தாள் சங்கவி.

 

எவ்வளவுதான் படிய வாரினாலும் சீப்புடன் போராடி அடங்க மறுக்கும் சுருட்டை முடி. கன்னத்துப் பளபளப்பை லேசாக மூடி மறைக்கும் தாடி. முழங்கையைத் தாண்டி சுருட்டி விடப்பட்ட வெள்ளாவியில் வெளுத்த சட்டை, என  பார்க்க மட்டுமில்லாமல், பார்த்ததும் கவரும் பளீர் கண்கள் கொண்ட ஒரு உருவம் வீட்டிலிருந்து வெளியே வந்தது. அவர்கள்  நிற்பதைக் கூட கவனிக்காமல்  அது புல்லட்டில்  அநாயசமாக ஏறி கிக்கரை உதைத்தது.

"டேய்.. அசோக்  மதியம் சாப்பிட  வருவியா?” என்று கேட்டுக் கொண்டே அத்தை வெளியே வந்தாள்.

 

சிறகுகள் படபடக்கும்....
 

 

சாம்பவி சங்கர் எழுதும் ‘மாயப் புறா’ - ஓர் அன்பின் தொடர்கதை! #01

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)