Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #23

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

maayapura part 23

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் தோன்றியபோது முதலில் உருவானது வைரஸ், பாக்டீரியா, அமீபா  போன்ற  ஒரு செல் உயிரினங்கள் தான். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கியமானது மனித இனம். மனிதன் தோன்றிய பிறகு அனைத்தையும் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தான். வேகமான விஞ்ஞான வளர்ச்சி, உலகின் திசையெங்கும் தொழிற்புரட்சி என இந்த 200 ஆண்டுகளில் இயற்கையைப்  புரட்டிப் போட்டான். அனைத்தும் இயற்கையை மீறிய மனித செயல்களாக மாறியது. விண்ணையும் மண்ணையும் ஆராய்ந்தான்  எப்பொழுது இடி இடிக்கும், எப்பொழுது மழை பெய்யும், எப்போது நிலநடுக்கம் வரும், எப்பொழுது சுனாமி வரும் என்று இயற்கையின் சீற்றங்கள் அத்தனைக்கும் அட்டவணை வைத்திருக்கிறான் மனிதன்.

 

இயற்கையை அறிய தெரிந்த மனிதனுக்கு தன்னை அறிய தெரியவில்லை. நம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது விடை அறியா வினாவாக கேள்விக்குறியாகவே இருக்கிறது. உலகையே வென்று தன் ஒருவனின் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று உயிர்களை கொன்று குவித்த மாவீரன் அலெக்சாண்டருக்கு  தன்னை ஒருவன் விஷம் வைத்து கொல்வான் என்பது தெரியவில்லை. கலிங்கப் போரில் வென்ற சாம்ராட் அசோகருக்கு தான் புத்த மத போதகராக மாறப் போகிறோம் என்பது தெரியவில்லை. எத்தனையோ மதங்கள், இனங்கள், கடவுள்கள் என்று மாறிமாறி வந்து போய்க் கொண்டிருக்கின்றன. எதனாலும் மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அடுத்த செயலுக்கு அறிவிப்பு கூற இயலவில்லை. அப்படி கூற முடிந்திருந்தால் மகிழ்வோடு துள்ளி குதித்து  வந்த மல்லிகாவிற்கு "விழப்போகிறாய்"  என மனம் எச்சரிக்கை மணி அடித்திருக்கும்; கவனமாக நடந்து வந்திருப்பாள்.   

 

தரை வழுக்கும் என காலை அழுத்தி வைத்து நடந்து வந்திருப்பாள். இப்படி வேரோடு சாய்ந்த மரம் என விழுந்து இருக்கமாட்டாள். விழுந்த சத்தம் கேட்டு முதலில் ஓடி வந்தது சங்கவி தான்.

"அக்கா.. என்னாச்சு" என்று பதறினாள்.

"ஐயோ  எல்லாரும் ஓடி வாங்களேன், அக்கா விழுந்துட்டாங்க" என்று அடித்தொண்டைக் கிழிய கத்தினாள். சங்கவியின் கத்தலைக்  கேட்டதும் அனைவரும் ஓடி வந்தனர். "மல்லிகா ..என்னாச்சு என்று பதற்றமான குரலில் கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தனர்.

" பாவி மக யார் கண்ணு பட்டதோ தெரியலை எங்க வீட்டு வாரிசை சுமந்த தேரு குடைசாய்ந்து நிக்குதே" என்று கதறினாள் தங்கம்.

"வேற யாரு கண்ணு இந்த மூதேவி கண்ணுதான். வெள்ளிக்கிழமை கழுவி மொழுகலைன்னா வீதில போற மகாலட்சுமி வீட்டுக்குள்ள வராதா?" என்று கத்தினான் மணி. இது எதையும் காதில் வாங்காத சங்கவி வேகமாக ஓடிப் போய் தண்ணீர் எடுத்து வந்து மல்லிகாவிற்கு குடிக்கக்கொடுத்தாள். மல்லிகா வயிறைப்  பிடித்து கொண்டு "வலிக்குது"  என்று அழுதுகொண்டே கூறினாள்.

 

நாகம்மாவும் ,புவனாவும் மல்லிகாவின் கைகளை பிடித்துக்கொண்டு "அழாதே" என்று ஆறுதல் கூறினார்கள் அதற்குள் தனம்மா பாட்டி மல்லிகாவின் நாடியைப் பிடித்துப் பார்த்து "சிறிய உசுரு பிழைக்குமான்னு தெரியல" என்று சொன்னதும்,

" அடிப்பாவி வேண்டுமென்றே  தண்ணியை ஊத்தி என் வாரிசை அழிச்சிட்டியே. உன்னை சும்மா விடமாட்டேன்னு", சங்கவியை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தான் மணி. அதற்குள் செல்வம் மணியை மடக்கி "தம்பி பொண்டாட்டி மேல கையை வைக்கறது பெரிய தப்பு, எதுவாயிருந்தாலும் வாயாலேயே பேசு  ஆத்திரம் தீர திட்டு அதுக்காக அடிக்க கூடாது"ன்னு சற்று தள்ளி அழைத்துச் சென்றார்.

" மணி மாமா, மல்லிகா விழனும்னு தான் வெள்ளிக்கிழமை கழுவுற மாதிரி தண்ணியை ஊத்தி விட்டு இருக்கா" என்று புவனா அவள் பங்குக்கு பெட்ரோல் ஊற்றினாள்

"ஆமாம் புவனா இந்த எமன் வேணும் தான் செய்து இருக்கு, என் புள்ளைக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா  உன் சாவு என் கையில் தான்" என்று கறுவினான் மணி. அதற்குள் பனைவெல்லம் போட்டு சுக்கு  கசாயம் எடுத்து வந்து தந்தாள் தங்கம் .

"என் மருமவ வயித்தில இருக்கிற என் பேரனுக்கு ஒன்னும் ஆக கூடாது ஐயனாரப்பா... உனக்கு ஆளும் குதிரை வாங்கி விடறேன்" என்று ஐயனார் அப்பனுக்கு லஞ்சம் கொடுத்துக் கொண்டிருந்தார் தங்கம். 

 

வெளியிலிருந்து வந்த அசோக்குக்கு வீட்டின்  நிலையைப் பார்த்ததும் புரிந்து விட்டது "என்னம்மா அண்ணியை  டவுனில் இருக்கிற டாக்டரிடம் கூட்டிகிட்டு போகாம வைத்தியம் பார்த்துகிட்டு இருக்கீங்க "என்று கத்திவிட்டு வில்லு வண்டியை கட்ட போனான்.

"மாமா வில்லு வண்டி வேணாம் மேடு பள்ளம் தூக்கிப்போடும் டவுனில் கார் இருந்தா எடுத்துட்டு வர்ரீங்களா" என்று கேட்டாள் சங்கவி.

" ஏதாவது நடக்கிற கதையைப் பேசு  டவுனுக்கு போய் கார் எடுத்துட்டு வருவது எல்லாம் முடியாத வேலை" என்று முட்டுக் முட்டுக்கட்டை போட்டாள் புவனா.

"மாமா என் கூட வாங்க என்று அசோக்கின் கையை பிடித்துக்கொண்டு வாசலில் இறங்கி நடந்தாள்.
நடந்தாள் என்று சொல்வதைவிட ஓடினாள்  என்றுதான் சொல்ல வேண்டும் அவ்வளவு  வேகமான நடை.

"சங்கவி  எங்கடி அழைச்சிட்டு போற" என்று கையை உதறிக் கொண்டே கேட்டான் அசோக். 

"மாமா ..3வது தெரு முனுசாமி டவுனில் வாடகை கார் ஓட்றாராம்  அவர் காரில் அழைச்சுகிட்டு  போகலாம்" என்று கூறினாள்.

"கண்டிப்பா அவன் வர மாட்டான் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி தான் வரப்பு தகராறில் அவனை புரட்டி எடுத்தேன். இப்ப அவன் கிட்ட கார்  கேட்டா கொடுப்பானா?"என்று சந்தேகத்தை கிளப்பினான் அசோக்.

"கேட்டுத்தான் பார்ப்போமே உள்ளூர் ஜனங்களுக்கு உதவாமலா போவாங்க" என்று பேசிக்கொண்டே அந்த முனுசாமி வீட்டிற்கு வந்தனர். வாசலில் நின்று "அண்ணா... அண்ணா" என்று குரல் கொடுத்தாள்  சங்கவி.

" யாரது" என்று கேட்டுக்கொண்டே வெளியில் வந்த முனுசாமி அசோக்கை பார்த்ததும் பயந்து உள்ளே திரும்பினார்.

"அண்ணா  கொஞ்சம் கார் வேண்டும்" என்று கூறி திரும்பியவனை தடுத்து நிறுத்தினாள் சங்கவி."கார் எல்லாம் வராது"என்று கறாராக சொல்லிவிட்டான். 

"அங்க ஒருத்தர் உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க தயவுசெய்து வாங்கண்ணா" என்று இரு கைகளையும் கூப்பி சொன்னாள் சங்கவி.

 

சங்கவி கெஞ்சுவதைப் பார்த்ததும் சற்று தயங்கினான். "மாப்பிள்ளை உன்னை அடிச்சது தப்புதான் என்னை மன்னிச்சிடு தயவுசெய்து வண்டி எடுத்துட்டு வா" என்று பணிவாக பேசினான் அசோக்.

 

அசோக் மன்னிப்பு கேட்டதும் முனுசாமி மனமிரங்கி காரை எடுத்துக்கொண்டு வந்தான். வீட்டில் அனைவரும் என்ன செய்யறதுன்னு தெரியாமல் மல்லிகாவைச்  சுற்றி நின்றுகொண்டு மல்லிகாவுக்கு தைரியம் சொல்லிக்கிட்டு இருந்தார்கள். மல்லிகா வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். 

"ஆவாரங்காட்டுல அரவங்கொத்தி, அரளிப் பூ காட்டுல விஷம் வடிஞ்சுதாங்கற" கதையா தரையில் தண்ணிப்பட்ட குற்றம் புள்ளையை இந்த பாடு படுத்துதுன்னு" பாட்டி ஒருபக்கம் புலம்பிக் கொண்டிருந்தார்கள். 

 

காரைப் பார்த்ததும் அப்படியே தூக்கிக்கொண்டு வந்து காரில் படுக்க வைத்தார்கள். தங்கம் மல்லிகாவின்  தலையை தன் மடியில் வைத்துக் கொண்டார். தனக்குத் துணையாக நாகம்மாவை கூப்பிட்டார் தங்கம். எனக்கு ரத்தக்கொதிப்பு இருக்கு என்னால வர முடியாதுன்னு சொல்லிவிட்டார் நாகம்மா.

 

சங்கவி "நான் வரேன்னு" பின்னாடி சீட்டில் ஏறிக்கொண்டாள். முன்னாடி மணியும் அசோக்கும் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல உட்கார்ந்து கொண்டார்கள். காரில் ஏறிய சங்கவி ஏதோ நினைவுக்கு வந்தவளாக காரிலிருந்து இறங்கி உள்ளே ஓடினாள். இந்த நேரத்தில் இவள் எங்கே போகிறாள்? என்று குழம்பினார்கள். டிரங்கு பெட்டியில் அடியில் வைத்திருந்த ஐந்து ரூபாய் பத்து ரூபாய் தாள்களை  எடுத்துக்கொண்டு ஓடி வந்து அசோக் கையில் கொடுத்தாள். அப்போதுதான் அசோக்குக்கு புரிந்தது பாக்கெட்டில் காசில்லாமல் ஜம்பமாக  காரில் உட்கார்ந்து கொண்டோம் என்று நினைத்தான். 

 

மல்லிகா வலியில் துடித்தாள். "கொஞ்சம் பொறுத்துக்கம்மா டவுன் ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்"னு ஆறுதல் சொன்னார் தங்கம், அந்த ஹாஸ்பிடல் ஓடு போட்ட பழங்காலத்து கட்டிடமாக இருந்தது. மல்லிகாவை இறக்கி நடக்கவிடாமல் அலேக்காக தூக்கி வருவது போல கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

டாக்டர் மல்லிகாவை சோதித்துப் பார்த்துவிட்டு, "கருவைக்  காப்பாற்ற முடியாது. நீங்க உடனே செங்கல்பட்டு ஆஸ்பிட்டலுக்கு  அழைச்சிட்டு போங்க" ன்னு சொல்லிட்டு  வலி குறைவதற்கு ஊசி போட்டு அனுப்பினார்கள். செங்கல்பட்டுக்கு போறதுக்கு பணம் அதிகமாக செலவாகுமே என்ன பண்றது யாரிடம் கேட்பது  என்று  புரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.  மல்லிகாவோ  காரில் வலியுடன் துடித்துக்கொண்டிருந்தாள். திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாக  காசிச்செட்டி கடைக்கு ஓடினான் அசோக். செட்டியாரிடம் கெஞ்சி கூத்தாடி கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு வந்தான்.

 

கார் வேகமாக செங்கல்பட்டு நோக்கி பாய்ந்தது. தங்கம்  மனதிற்குள் "இரண்டு உயிர்களையும் காப்பாற்று தெய்வமே" என்று வேண்டிக்கொண்டாள். சங்கவியும் மனதிற்குள் "பெரியபாளையத்தம்மனுக்கு  வேப்பஞ்சேலை  உடுத்திக்கறேன்"னு   வேண்டிக் கொண்டாள். கார் செங்கல்பட்டு   மருத்துவமனை  வளாகத்திற்குள் சென்று நின்றது. அங்கு மக்கள் சிறு சிறு கூட்டமாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முகம் பட்டமரம் போல் கருத்திருந்தது. சிலர் வாய்விட்டு அழுது கொண்டிருந்தார்கள். கிழிந்த துணிகளை கட்டிக்கொண்டு தலையை சீவாமல் எண்ணையற்ற  சிக்கு முடியுடன்  சிலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்க்கும் போது பல வாரங்களாக இந்த  மருத்துவமனையே  கதி என்று இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. எமனிடம்   போராடி  தம் உறவுகளை மீட்கமாட்டோமா? என்ற சோகம்   அவர்கள் முகத்தில் இருந்தது. ஆம்புலன்ஸ் வருவதும் போவதுமான சத்தம் காதைக் கிழிப்பதை  விட மனதை என்னவோ செய்தது. நிறைய மருத்துவர்கள்  மருத்துவமனை  உள்ளே வருவதும் போவதுமாக இருந்தனர். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஓடிப்போய் என் சொந்தம் எப்படி இருக்குன்னு தெய்வ வாக்காக நினைத்து நலம் விசாரிப்பவர்களைப் பார்க்கும் போது  அவர்களின் அன்பு நெருப்பாறு போல மனதைச் சுட்டது. நர்சுகளும் வெள்ளை உடையில் உலவிக் கொண்டிருந்தனர். இதை பார்ப்பதற்கு வயல்வெளியில் நாரைகள் கொக்குகள் இருக்குமே அதை போல இருந்தது. மருந்து நெடி மூக்கில் சென்று வயிற்றுக்குள் வாக்கிங் போய்விட்டு  வாய் வழியாக வெளியே வந்தது. 

 

காரில் இருந்து இறங்கிய மணியும் அசோக்கும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றனர். அங்கு இருந்த மருத்துவரிடம் என்னவோ சொன்னார்கள். சொல்லிவிட்டு அங்கிருந்து கைகாட்டி காரை அருகில்  வரச்சொன்னார்கள். கார் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் வந்தது. தயாராக இருந்த ஸ்டெக்சரில் மல்லிகாவைப் படுக்க வைத்து உள்ளே அழைத்துச்சென்றனர். சங்கவியும் தங்கமும் ஸ்டெக்சரின்  பின்னாடியே ஓடினார்கள். அவர்களுக்குப் பின்னால் மணியும் அசோக்கும் வந்தனர். வளைந்து வளைந்து கொடைக்கானல் மலை ஏறுவது போல போய்க் கொண்டிருந்தது. ஒரு திருப்பத்தில் இருந்த கட்டிடத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்றதும் இவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு மல்லிகாவை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றார்கள். வெளியில் நால்வரும் என்ன செய்வது என்று தெரியாமல் இதயம் துடிப்பது   வாய் வழியே  வெளியே கேட்கும் அளவிற்கு நாக்கு வறண்டு போய் வாயை பிளந்து கொண்டு பயத்தில் உறைந்து போய் நின்றிருந்தனர்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)