Skip to main content

'ஹார்மோன் ஊசி போட்டாத்தான் உன் பையன் வளருவான்' விதி கொடுத்த சவால்... வென்று வந்த மெஸ்ஸி - வென்றோர் சொல் #26

Published on 29/12/2020 | Edited on 31/12/2020

 

Lionel Messi

 

களத்தில் 22 வீரர்கள் இருந்தாலும் அந்த ஒரு வீரர் அடிக்கின்ற 'கோல்'-ஐ காண்பதற்கு மட்டும் அனைவரும் கூடுதல் ஆவலுடன் காத்திருப்பார்கள். தட்டுவதற்கு ரசிகர்களின் கைகள் தயாராக இருக்கும். மைதானம் அதிரக் கூச்சல் போடுமளவுக்குத் திரண்டு வந்த ஓசை, தொண்டைக் குழியிலிருந்து பாய்வதற்குத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டு இருக்கும். அதைவிடுத்து, பல கோடிக்கணக்கான ரசிகர்கள் தனது உடலில் இருந்து அரை இன்ச் தலை முன் நகர்ந்து இருப்பதை அறியாமல் தொலைக்காட்சி முன் அமர்ந்து, கொண்டாடத் தயாராக இருப்பார்கள். அவ்வீரரின் கால் கட்டுப்பாட்டில் இருந்த பந்து, கோல் கம்பிக்குள் நுழைந்ததும் மேலே குறிப்பிட்ட அனைத்தும் நடக்கும். இது எதையும் பொருட்படுத்தாத அவ்வீரர், தனது இரு கைகளை உயர்த்தி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பார். இறந்து போன தனது பாட்டி, தான் அடித்த 'கோல்'-ஐ கண்டு மகிழ்ச்சியடைந்துவிட்டார் என்பதை உறுதி செய்தபின்னரே மைதானத்தில் தனது கொண்டாட்டத்தை ஆரம்பிப்பார். ஆம், கால்பந்து உலகு கண்ட மகத்தான ஆளுமைகளில் முதன்மையானவரான மெஸ்ஸியே அவ்வீரர் ஆவார்.

 

அர்ஜெண்டினா நாட்டில் கூலித் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர் லியோனல் மெஸ்ஸி. அவரது தந்தைக்கு கால்பந்தாட்டத்தின் மீது இருந்த அதீத காதலால், அவர்கள் வீட்டருகே இருந்த ஒரு கிளப் அணியில் பகுதிநேரப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். அவரது தந்தைக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த குடும்பமுமே கால்பந்தாட்டத்தின் மீது அதிகப்படியான ஆர்வம் கொண்டிருந்ததால், மெஸ்ஸிக்கு கால்பந்து உலகு எளிதாக அறிமுகமானது. 4 வயதாக இருக்கும் போதே தனது தந்தை பயிற்சியளிக்கும் 'கிராண்டோலி' கிளப்பில் இணைந்து விளையாட ஆரம்பிக்கிறார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவருக்கு, 8 வயதில் 'நியூவெல் ஓல்ட் பாய்ஸ்' கிளப் அணியில் வாய்ப்பு கிடைக்கிறது. தான் வசித்து வந்த பகுதிகளில் பிரபலமான வீரராக வலம் வந்து கொண்டிருந்த மெஸ்ஸிக்கு, 11 வயதாக இருக்கும் போது வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டு உடல் வளர்ச்சி நின்று போகிறது.

 

இதனையடுத்து, மாதம் ஒன்றுக்கு ஆயிரம் டாலர் வரை செலவாகும் சிகிச்சை எடுத்துக் கொண்டால், இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம். இல்லையென்றால், உடல் உயரம் இத்தோடு நின்று விடும் என மருத்துவர்கள் கூற, மெஸ்ஸியின் தந்தையோ அதிர்ந்து போகிறார். தன் மகனுக்குள் இருக்கும் அதீத திறமை மற்றும் ஆர்வம் காரணமாக மருத்துவ உதவி தேட முடிவுசெய்கிறார். அர்ஜெண்டினா நாட்டில் இருந்த அனைத்து கால்பந்தாட்ட கிளப் வாசல்களிலும் ஏறி இறங்குகிறார். மெஸ்ஸி மாதிரியான ஒரு வீரரரை தங்கள் கிளப்பிற்காக எடுத்துக்கொள்ள அனைவரும் விரும்பினாலும், மலைக்கவைக்கும் அளவிலான சிகிச்சைக்கான தொகை அவர்களை யோசிக்க வைத்தது. விஷயம் அறிந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட கிளப்பான பார்சிலோனா கிளப், 'அர்ஜெண்டினா நாட்டை விட்டு ஸ்பெயின் நாட்டிற்கு வரவேண்டும்' என்ற நிபந்தனையுடன் மெஸ்ஸிக்கான சிகிச்சை செலவை ஏற்க சம்மதம் தெரிவித்தது. தனது கனவிற்காகத் தாய்நாட்டை விட்டு 13 வயதில் முதல்முறையாக ஸ்பெயின் நாட்டிற்கு விரைகிறார் மெஸ்ஸி. அதன்பின், கால்பந்து வரலாறு மெஸ்ஸியின் காலடியில் பணிந்தது உலகம் அறிந்ததே.

 

Lionel Messi

 

"நான் முதலில் 'கிராண்டோலி' கிளப்பிற்காக விளையாடினேன். பின்னர் 'நியூவெல் ஓல்ட் பாய்ஸ்' கிளப்பிற்காக விளையாடி வந்தேன். பின்னர் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டது. நான் விளையாடி வந்த அணியில் இருந்து போதிய அளவிலான உதவி கிடைக்கவில்லை. என் தந்தை தனக்குத் தெரிந்தவர் மூலமாக ஸ்பெயின் நாட்டில் முயற்சித்தார். பின் அவர்கள் என்னைச் சோதனை செய்தார்கள். மொத்தம் 15 நாட்கள் அச்சோதனை நடைபெற்றது. அதன்பிறகு, அவர்கள் கிளப்பில் சேர்த்துக் கொண்டதோடு, எனக்கான சிகிச்சை செலவையும் ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் அணியிலேயே நான்தான் மிகவும் குள்ளமாக இருப்பேன். எனது குறையை மறைக்க வேண்டுமென்றால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதுதான் ஒரே வழி என்று முடிவெடுத்தேன். மற்றவர்களை விட அதிகப்படியான நேரம் பயிற்சியில் ஈடுபட்டேன். காலை முழுவதும் கையில் கால்பந்துடன் இருக்கும் நான், இரவானால் ஹார்மோன் ஊசிகளுடன்தான் இருப்பேன். என்னுடைய ஹார்மோன்கள் தூண்டப்பட்டு சரியான வளர்ச்சியை எட்டுவது வரை இது தொடர்ந்தது. பின்னர் இளைய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பிரதான அணியில் இடம் கிடைத்தது" 

 

இதுவரை மெஸ்ஸி அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 600-க்கும் மேலாகும். கால்பந்தாட்ட உலகின் உயரிய விருதாகக் கருதப்படும் தங்கப்பந்து விருதை 6 முறையும், தங்கக் காலணி விருதை 6 முறையும் வென்று அசத்தியுள்ளார். பொதுவாக மெஸ்ஸி மேடைகளிலோ அல்லது ஊடகங்களிலோ பேசுவது என்பது மிக அரிதானது. அவரது வெற்றியின் ரகசியம் குறித்துக் கேட்டபோது, என்னுடைய 'தனித்தன்மைதான்' என்ற பெரிய உண்மையை எளிமையாகக் கூறினார். மேலும், ஆரம்பக்காலங்களில் பார்சிலோனா அணியின் மேனேஜரோடு தனக்கு நடந்த சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார். அதில், "நான் விளையாடும் முறையில் அவர் என்னிடம் மாற்றுக்கருத்து கூறிக்கொண்டே இருப்பார். பந்தை வேகமாகக் கடத்த வேண்டும், இந்த முறை கூடாது என்பார். அந்த நேரத்தில் நான் சரியென்று கேட்டுக்கொள்வேன். ஆனால், மைதானத்தில் எனது பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதனால், அவர் அணியில் இருந்த காலம் வரை எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தபோதும் எனது பாணியை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை". ஒருவேளை மெஸ்ஸி தனது பாணியை அன்று மாற்றியிருந்தால்?

 

ad

 

பொதுவாக வெற்றிகள் வந்து உயரத்துக்குச் செல்லும் போது, பழையவற்றை மறக்கக் கூடாது என்பது பலராலும் முன்வைக்கப்படும் அறிவுரை. இதை இன்றளவும் மெஸ்ஸி தனது வாழ்வில் கடைப்பிடிப்பது மேன்மைக்குரியதே. ஆரம்பக் காலங்களில் தெருவில் விளையாடும்போது, தன்னை ஊக்கப்படுத்திய மற்றும் தனக்கான முழு ஆதரவாக இருந்த தனது பாட்டிக்காக, இன்று தான் அடிக்கும் ஒவ்வொரு 'கோல்'-ஐயும் அர்ப்பணிக்கிறார் என்றால் இது மேன்மையான குணம்தானே?

 

மெஸ்ஸியிடம் நாம் கற்றுக்கொள்வதற்கான விஷயங்கள் நிறைய இருந்தாலும், இந்த மேன்மைக் குணம் அதில் முதன்மையானது. கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!  

 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.