Skip to main content

துப்பறியச் சென்ற பெண்ணிடமே அத்துமீறல்; கண்டுகொள்ளாத காதலி - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 05

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Lady Detective Yasmin  Case Explanation  04

 

தன்னுடைய துப்பறியும் அனுபவங்கள் பலவற்றையும் துப்பறிவாளர் யாஸ்மின் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

தொழிலதிபர் ஒருவரும் அவருடைய மனைவியும் நம்மிடம் கேஸ் கொடுக்க வந்தனர். அவர்களுடைய பெண் நன்கு படிக்கக் கூடியவள். படிப்பதற்காக வெளியூர் சென்ற பெண் மீண்டும் ஊருக்கு வர மறுத்தாள். தான் ஒரு பையனைக் காதலிப்பதாகவும் அவன் ஒரு மருத்துவர் என்றும் பெற்றோரிடம் கூறினாள். அவள் பிடிவாதமாக இருந்ததால் அந்தப் பையன் குறித்து விசாரித்து சொல்லுமாறு அவளுடைய பெற்றோர் என்னிடம் வந்தனர். கிளினிக் சென்று விட்டு அதன் பிறகு வீட்டுக்குச் செல்லும் சாதாரண பையனாகத் தான் அவன் தெரிந்தான். 

 

இன்னும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினோம். எங்கள் டீமில் இருந்து ஒரு பெண்ணை அவனிடம் வேலைக்குச் சேர்த்து விட்டோம். அவன் ரெகுலராக செல்லும் வீட்டை கவனித்தபோது அங்கு வயதானவர்கள் யாரும் இருப்பது போல் தெரியவில்லை. அப்போது தான் தெரிந்தது அங்கு இருந்தது அவனுடைய மனைவி மற்றும் குழந்தை என்று. எங்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அதை அந்தப் பெற்றோரிடம் தெரிவித்தோம். ஒருநாள் நாங்கள் அனுப்பிய பெண்ணிடமே அவன் தவறாக நடக்க முயன்றான். அவன் கேரக்டரும் சரியில்லை என்பது தெரிந்தது. 

 

நடந்தவற்றை அந்தப் பெண்ணிடம் சொன்னபோது அவள் நம்பவில்லை. தன்னுடைய காதலால் அவனை மாற்றி விட முடியும் என்று நம்பினாள். நாங்கள் கிளினிக்கில் வேலைக்கு அனுப்பிய பெண்ணை இந்தப் பெண்ணோடு பேச வைக்க முடிவு செய்தோம். தன்னிடம் அவன் அத்துமீறியது பற்றி அவளிடம் இந்தப் பெண் கூறினார். நடந்த அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும், உன்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் இந்தப் பெண் பதில் கூறினாள். நாங்கள் அனுப்பிய பெண்ணுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

தாங்கள் இருவருமே தங்களுக்குப் பிடித்தவரோடு இருப்பதற்கு எப்போதும் பரஸ்பரம் சம்மதிப்போம் என்றும், இதைத் தாங்கள் தவறாக நினைத்ததில்லை என்றும் கூறினாள். அவனுக்குத் திருமணமானது கூட தனக்குத் தெரியும் என்று கூறினாள். இந்தப் பெண்ணுக்கு தலையே சுற்றியது. வெளிநாட்டு கலாச்சாரத்தில் கூட இப்படி இருக்குமா என்று தெரியவில்லை. இந்தியாவுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது. இருப்பது ஒரு வாழ்க்கை, அதை நமக்குப் பிடித்தது போல் வாழ வேண்டும் என்று அந்தப் பெண் முடிவு செய்தாள். யார் சொன்னாலும் அவள் கேட்கவில்லை. அதன் பிறகு அவள் தனியாக ஹாஸ்டலில் வாழத் தொடங்கினாள். அவனுடைய தொடர்பும் தொடர்ந்தது. நாங்களும் மேற்கொண்டு இந்த வழக்கை தொடராமல் விட்டுவிட்டோம்.
 

 

 

Next Story

பெண்களை ஆசையாக பேச வைப்பது; சபலம் உள்ள ஆண்களிடம் ஆட்டையைப் போடுவது  - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 42

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 detective-malathis-investigation-42

பெண்களுக்கு ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

எங்களிடம் வந்திருந்த நபர் சுமார் 90 லட்சம் பணத்தை எங்கேயோ ஏமாந்து கொடுத்திருக்கிறார். அதாவது, ஒரு கிளப் தங்களிடம் மெம்பராக இருந்தால் நிறைய விதமான சலுகைகள் உள்ளன. எனவே மெம்பராக இணையுங்கள் என்றும், உங்களைப் போல நிறைய பெரிய இடத்து நபர்களும் இதில் மெம்பர்களாக இருப்பதாகச் சொல்லி, கிளப்பிற்கு சென்றதும் பெண்களை பேச வைத்து, பழக வைத்து காசை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகச் சொன்னார். மிகப் பெரிய நபர் எனவே போலீசிடம் செல்லாமல் என்னிடம் வந்தார். இவர் தான் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்களை வேறு சேர்த்து விட்டிருந்தார். இந்த கிளப்பில் நிறைய பெண்களுடன் பேசியும் இருக்கிறார். தன்னை இப்படி ஏமாற்றியவர்களை பற்றி தெரிய வேண்டும் என வந்தவரிடம், நமக்கு தேவையான  தகவல்களை வாங்கினோம்.

இவர் சுதாரித்ததும் அந்த கிளப் நம்பரை மாற்றியுள்ளது பற்றி தெரிய வந்தது. சரி அவரிடம் பேசிய பெண்களின் நம்பர்களை வாங்கி, இவர் பேசினால் அவர்கள் சொன்ன இடத்திற்கு வருவார்கள் என்பதை உறுதி செய்து, தொடர்பு கொண்ட பெண் அங்கே வந்ததும் அங்கிருந்து அவரை பின் தொடர்ந்தோம். அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிகிறார் என்பது புரிந்தது. இதுபோல பெண்களை வைத்து அந்த நிறுவனம் ஏமாற்றவே இப்படி பெண்களை நியமித்து இருக்கின்றனர் என்பதை கண்டறிந்தோம். நாம் பின் தொடர்ந்த அந்த பெண்ணும் வெறும் சம்பளத்திற்காக மட்டுமே இந்த வேலையே செய்திருக்கார் என்று தெரியவந்தது.

இவரிடம் விஷயத்தைச் சொல்லி அவர் அவ்வளவு தொகையை எந்த வங்கிக்கு அனுப்பினாரோ அந்த  வங்கி  கிளைக்குச் சென்று அக்கவுண்டின் சில தகவலை வாங்கச் சொன்னோம். அவர் போய் பார்த்ததில் அந்த கணக்கு பணம் வந்த அடுத்த இருபது நிமிடத்தில் தொகையை பல கணக்கிற்கு மாற்றிவிட்டு அக்கௌண்ட் 'நில்' என  வந்திருக்கிறது. இவர் கூட சேர்ந்து பன்னிரண்டு பேரின் தொகை கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் ஏமாற்றி கணக்கும் மூடிவிட்டனர். ஒரு டீம் செட் செய்து முதலில் பெரிய தொகையாக ஒரேடியாக வாங்காமல், சிறு சிறு தொகையாக வாங்கி அதை சிறிது காலம் கழித்தே பெரிய தொகையாக அதிகரித்துள்ளனர்.

இவர் கிளப் முகவரி பற்றி தெரிந்து ஆரம்பத்திலே சுதாரிக்க ஆரம்பிக்கவும் அவர்கள் எல்லா தொடர்பையும் துண்டித்து விட்டனர். அதனால் தான் அவர்களை ட்ரேஸ் செய்ய முடியவில்லை. தொடர்பு கொண்ட அந்த கால் சென்டர் பெண்ணை மட்டும் கண்டு பிடிக்க முடிந்தது. இவர் குடும்பத்திடமிருந்து மறைத்து கெட்ட வகையில் ஆசைப்பட்டதால் அது அவர்களுக்கே பெரிய மோசடியாக விளைந்துவிட்டது. பெரிய இடத்து நபர்கள் என்பதால் போலீஸ் என்று சென்றால், பத்திரிகை வரை சென்று பெயர் கெட்டுப் போய்விடும் என்று விட்டனர். இதுபோல ஆன்லைனில் தள்ளுபடி, சுலபமாக கோடிக்கணக்கில் லோன் வாங்கித் தருகிறோம் என்றும் விளம்பரம் செய்து தொடர்பு கொள்ளும் நபர்களை நம்புவது மிகப்பெரிய நஷ்டத்தில் போய் முடியும். மக்களின் விழிப்புணர்வினால் மட்டுமே இதுபோல ஏமாற்றுபவர்களை உருவாக்காமல் தடுக்க முடியும்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது