Skip to main content

குடிகாரத்தந்தை, விலகிப்போன அம்மா, போதைக்கு அடிமை... இப்படி இருந்த ஒருத்தர் எப்படி ஆனார் தெரியுமா? ஜானி டெப் | வென்றோர் சொல் #8

Published on 06/08/2020 | Edited on 06/08/2020

 

johnny depp

 

 

ஜானி டெப் என்ற நிஜப்பெயர் வேண்டுமானால் கொஞ்சம் பரிட்சயம் இல்லாத பெயராக இருக்கலாம். ஆனால் 'கேப்டன் ஜாக் ஸ்பேரோ' என்ற இம்மனிதனின் நிழல்பெயர் சொன்னால் தெரியாதவர்களின் எண்ணிக்கை குறைவு. 2003ம் ஆண்டு வெளியான 'பைரேட்ஸ் ஆப் தி கரேபியன்' எனும் ஒற்றை திரைப்படம் இம்மனிதனை உலகின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்த்தது. ஜானி டெப்பின் கடந்த காலத்துயரம், வாழ்வின் வலிகள், தோல்விகள், அன்பிற்காக அவர் ஏங்கிய ஏக்கம் என அத்தனைக்கும் இறுதி அத்தியாயம் எழுதிய படமாகவும் அவருக்கு அது அமைந்தது. இன்று நாம் பார்க்கும் ஜானி டெப்பின் தொடர் வெற்றிகள், அங்கீகாரம், கைத்தட்டல்கள், விருதுகள் இவையெல்லாம் அவர் வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் என்றால், குடிகாரத்தந்தை, விவாகரத்து வாங்கிய அம்மா, பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடவேண்டிய சூழ்நிலை, போதைக்கு அடிமையானது, இசைக்கலைஞனாக வேண்டும் என்ற கனவு கைகூடாமை, நடிகராக நடித்த படங்களில் பெரிய அங்கீகாரம் இல்லாமை, மனைவி விட்டுச் செல்லுதல் என்பவை தான் அவரது வாழ்வின் முதல் அத்தியாயம்.

 

சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாக பிறந்தவர் ஜானி டெப். தந்தைக்கு நிரந்தர வேலை இல்லாத காரணத்தால் அவர் குடும்பம் அடிக்கடி இடமாற்றம் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் தந்தை குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால் தினமும் குடித்துவிட்டு ஜானி டெப்பையும் அவரது தாயாரையும் தாக்குவதையே வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் தாயார் விவாகரத்து வாங்கி விட ஜானி டெப்பின் வாழ்க்கையின் இருண்ட பக்கம் தொடங்கியது. பெற்றோர் விவாகரத்து இவரை மன அழுத்தத்தின் உச்சத்திற்கு கொண்டுசெல்கிறது. அதற்கு தீர்வாக போதையை தேடிச் செல்ல அவரது வாழ்க்கையும் திசைமாற தொடங்கியது. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இசை மீதான தன் காதலை கைவிடவில்லை. தாய் பரிசளித்த கிட்டாரும், கையுமாகவே எப்போதும் இருக்கிறார். பள்ளித் தலைமையாசிரியர் இவரின் இசைத்திறமையைக் கண்டு வியந்து தொடர்ந்து முயற்சிக்க சொல்கிறார். தலைமையாசிரியரின் பாராட்டு அவர் மனசுக்குள் பட்டாம்பூச்சியை பறக்க விட, பள்ளிப்படிப்பை கைவிட்டு விட்டு பல இசைக்குழுக்களில் சேர்ந்து வாசிக்க தொடங்குகிறார். அதிலும் போதிய வருமானம் இல்லாமல் தெருக்களில் பேனா விற்பனை, கேஸ் நிரப்புவது, டிஷர்ட் அச்சடிப்பது என பகுதிநேர வேலையாக கிடைக்கிற வேலைகள் அத்தனையும் செய்கிறார். அந்த நேரத்தில் இசைக்குழுவில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அந்த பெண் ஜானி டெப்பிற்குள் ஒளிந்துள்ள நடிகனை கண்டுபிடித்து அவருக்கு அடியாளம் காட்டி, நடிகராக இருக்கும் தன் நண்பர் ஒருவருக்கு அறிமுகப்படுத்தியும் வைக்கிறார். பின் நடிப்பதற்கு வாய்ப்பு தேடுகிறார். நடிகனாக நடித்த படங்களும் பெரிய அளவில் அங்கீகாரத்தை கொடுக்காமல் இருந்தபோது 'டிஸ்னி' நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வருகிறது.

 

'பைரேட்ஸ் ஆப் தி கரேபியன்' திரைப்படத்தில் 'ஜாக் ஸ்பேரோ' கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அழைப்பு அது. படம் வெளியாவதற்கு முன்பு வரை அது ஒரு சிறிய கதாபாத்திரம்தான். "உங்கள் ஒவ்வொரு மூச்சையும் அனுபவித்து வாழுங்கள்" என்பது ஜானி டெப்பின் புகழ் பெற்ற வாசகம். அதன்படி சிறிய பாத்திரமாக இருந்தாலும் சரியென்று பழங்காலக் கடற்கொள்ளையர்கள் பற்றி நிறைய படித்து கதைக்கேற்ப தன்னை தயார்ப்படுத்தினார். படம் வெளியானது.. மற்ற முக்கிய கதாபாத்திரங்களை விட ஜானி டெப்பின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு இன்று உலக அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக உச்சாணிக்கொம்பில் கொண்டு போய் அவரை நிறுத்தியது. 

 

"தோல்வியடைந்தாலோ அல்லது விரக்தியடைந்தாலோ 'இது ஒரு மோசமான நாள் மட்டும்தான்... மோசமான வாழ்க்கை அல்ல' என்று நினைத்துக்கொள்ளுங்கள். தொடர் உழைப்பு வெற்றியை உங்கள் கைகளுக்கு அருகே கொண்டு வரும். நாம் அனைவரும், ஒன்று, கடந்த காலத்தை நினைத்து வருந்துகிறோம், இல்லையென்றால் எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நிகழ்காலம் வீணாகிக் கொண்டு இருக்கிறது. வெற்றியோ, பணமோ உங்களை மாற்றாது, உண்மையிலேயே நீங்கள் யார் என்பதை அது வெளிக்காட்டும்" என்கிறார் நம் நேசத்துக்குரிய 'ஜாக் ஸ்பேரோ' ஜானி. மனதில் வைத்துக்கொள்வோம். இனி நமக்கு ஒரு தோல்வி நேர்ந்தால், அது ஒரு நாள்தான், அதுவே நம் வாழ்க்கை அல்ல. அடுத்த நாள் வெற்றி வரும்.

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.