Skip to main content

"ஒப்புக்காக மற்றவர்கள் வாயை அடைத்தாலும் என் புகுந்த வீட்டினரின் எதிர்பார்ப்பும்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #9

Published on 02/11/2019 | Edited on 12/02/2020

திருவேற்காட்டில் ஒரு தனியார் மருத்துவ மனையில் மருந்துகளின் நெடியையும் மீறி என் வயிற்றில் கலைந்த சிசுவின் இரத்த வாசனையோடு பேசுகிறேன். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு சுபயோக சுபதினத்தில் எனக்குத் திருமணம். ஹனிமூன், விருந்து, இத்தனை காலம் பழகிய மண்ணில் இருந்து வேரொடு பிய்த்து எறிந்து புதிய இடத்தில் காலூன்றியது என நாட்கள் இறக்கைகட்டிப் பறந்தாலும் நான் முதல் மாதம் வீட்டுக்கு தூரம் என்று நிற்கும் போது உறவினர்களின் புருவம் நெறிபடுவதைக் கண்டேன். என்ன உம் மருமக இன்னும் நல்ல சேதி சொல்லலையா என்ற கேள்விகள் எனக்கு நேராகவும் மறைமுகமாகவும் வீசப்பட்டது.

பெண்பிள்ளை, பூப்படைதல், கல்யாணம், மகப்பேறு என்ற எதிர்பார்ப்புகளோடே கவனிக்கப்படுகிறாள் எப்போதும் எத்தனை கால மாற்றங்கள் வந்தாலும்! என்னக்கா கல்யாணமாகி ஒரு மாசந்தானே ஆகுது. சின்ன சிறுசுங்கதானே இன்னும் கொஞ்சநாள் சந்தோஷமா இருந்திட்டு அப்பறம் பிள்ளைப் பெத்துக்கட்டும் இப்போ ஒண்ணும் அவசரமில்லை என்று ஒப்புக்காக மற்றவர்கள் வாயை அடைத்தாலும் என் புகுந்த வீட்டினரின் எதிர்பார்ப்பும் அதுதான் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு நா பொழுது போகாம ஊர்சுற்றி, சரம்சரமா பூவைச்சி அலங்கரிச்சிட்டு என்ன புண்ணியம் இன்னும் உன் வயிறு திறக்கலையே பேசாம ஆஸ்பத்திரிக்கு போய் பாக்குறீயா? விசாரிப்புகளுக்கு மத்தியில் அன்னையின் மடியில் படுத்துக்கொண்டு விசும்பினேன்.

 

jhk



நீ ஒண்ணும் கவலைப்படாதே உங்க அக்காவுக்கும் நாலைந்து மாசம் பிறகுதான் பிள்ளையுண்டாச்சு நானும் கூட அப்படித்தான் பட்டிக்காட்டிலேயே ஒண்ணும் கேட்கலை, ஆனா உங்க வீட்டு ஆளுங்களுக்கு ரொம்பத்தான் அவசரம். அம்மா தன் குடும்ப பெருமையை விளங்க வைக்க வெளிநாட்டில் கட்டிக்கொடுத்த அக்காவிற்கு பேசி கரு தங்குவதற்கு மாத்திரைகளை அனுப்பிடச் சொன்னாள்.

ஏம்மா டாக்டரைப் பார்க்காம மாத்திரை சாப்பிடலாமா?

இப்போ உங்க மாமியார்க்கு தெரியாம போக முடியாதேடி இலேசுபாசா தெரிந்தாலும் மூக்கு வேர்த்திடும் அப்பறம் எல்லாருக்கும் கஷ்டம் தான். வெளிநாட்டு மருந்து அப்படியொன்னும் கெட்டதா இருக்காது. விலையும் அதிகம்தான். அம்மா என்ன உனக்கு கெடுதலா செய்யப்போறேன். அந்த வார்த்தைகளின் வீரியம் மருந்தின் வீரியத்தை மறக்கடிக்கச் செய்ததென்னவோ உண்மைதான். சொல்லிவைத்ததாற் போல், நான் மறுமாதமே விலக்காகவில்லை. கண்கொத்திப் பாம்பாய் மூன்றாவது மாதம் நான்கு நாட்கள் தள்ளியும் நான் விலக்காமல் இருப்பதால் என்னம்மா நாள் தள்ளிப் போயிருக்குப்போல என் அத்தையின் முகமெல்லாம் புன்னகையும் சிறு சந்தேகமும்.

ஆமாம் அத்தை எனக்கு நெட்டி முறித்து திருஷ்டி எடுத்தபடியே, எல்லாம் அந்த கருமாரியம்மனின் செயல் பார்த்தியா இரண்டு வாரம் தொடர்ந்து தொட்டில் கட்டியதால் தான் இந்த பிச்சையை ஆத்தா உனக்குக் கொடுத்திருக்கா, நான் உண்ட மாத்திரைகளின் வீரியமா அல்லது என் கணவரின் வீரியமா என்பதை யோசியாமல் நானும் அன்றே அம்மனுக்கு ஒரு விளக்குப் போட்டேன். வீட்டிலேயே ஒரு சின்ன யூரின் டெஸ்ட் அதன்பிறகு டாக்டரிடமும் ஒரு கன்பர்மேஷன். மகள் உண்டானதில் கர்வம் தொனிக்க அம்மா என் புகுந்த வீட்டு உறவுகளைப் பார்த்த பார்வைகள், மசக்கையின் அதிகாலை அவஸ்தைகளில் நான் நன்றாகவே கவனிக்கப்பட்டேன்.

45 நாட்களின் முடிவில் ஸ்கேன், வயிறு முட்ட தண்ணீர் ஆனாலும் இப்போதே உருவம் தெரியுமா என்ற எதிர்பார்ப்பும் அக்காவின் துணைக்கு வந்தபோது கர்ப்பையின் வாயிலில் துடித்த அந்த முழுமை பெறா சிசுவின் அசைவுகள் இப்போதும் நினைவில் இருந்து நீங்காமல் நானும் ஒரு ஜீவனை சுமக்கிறேன் என்னை மட்டுமே நம்பி என் வயிற்றில் ஒரு உயிர் அந்த பிள்ளைக்கு பேர் வைத்து அது என்ன படிக்கவேண்டும் எப்படி வளர்க்க வேண்டும் என்பது வரை மெளனமாய் மனதின் பட்டியலில் என் பேரைக் கூப்பிடுகிறார்கள் ஸ்கேன் முடித்துவிட்டு வந்து மீண்டும் தொடர்கிறேன். ஸ்கேன்லே குழந்தை எந்த பொசிஷன்ல இருக்குன்னு தெரியலை. அதனால், கொஞ்சம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம். சில நேரம் நாள் தள்ளிக் கூட தெரியும் உனக்கு பிசிஓடி பிரச்சினை இருக்காம்மா லாஸ்ட் டேட் என்னைக்கு என்று சில கேள்விகளைக் கேட்டபின் நான்கைந்து நாட்களாக என் கைகள் அனைத்திலும் ரத்த சோதனையினால் ஏற்பட்ட பொத்தல்கள்.

 

 

jhk



மருத்துவரின் அறிவுரைப்படி ரத்தப்பரிசோதனைக்கு கிளம்பும் சமயம் ஏம்மா, என்ன இது உன் புடவையில் சிகப்பா மாமியாரின் கலவரக்குரல் மறுபடியும் குளித்து உடை மாற்றினேன். அத்தை எனக்கு விலக்கு வரமாதிரியிருக்கு என்று என் குரல் அழுகை கலந்திருந்தது. அதெல்லாம் ஒண்ணுமில்லை சில பெண்களுக்கு பிரசவம் வரைக்கும் கூட தீட்டு படுமாம். பயப்படாதே நாம இப்பவே டாக்டரை பார்க்கப் போகலாம். சென்னை வடபழனி பஸ்ஸாண்ட்டுக்குப் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய மருத்துவமனை அங்கே மறுபடியும் சோதனைக் கூண்டின் எலியைப் போல என்னாகுமோ என்ற அச்சம் மனதை பிராண்டிட நான் ஸ்கேன் எடுக்கும் படுக்கையில், 

அன்னைக்கு பார்த்த அதே கண்டிஷன் தான் கர்ப்பபையில் கரு இருக்கு ஆனா அது முழுமையா இல்லைன்னு நினைக்கிறேன் இப்போ ரத்தப்போக்கு வேற அதிகமாக இருக்கு ஒருவேளை.... எல்லாரும் கூடிப்பேசி அபார்ஷன் பண்ணலான்னு முடிவு செய்தார்கள். என் கனவுகள் அனைத்துமே மணல் கோட்டையைப் போல கரைந்து போனது. அடி வயிற்றில் சுரீர் என்று வலி இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் வீட்டிற்கு இந்த முறை உடம்பை கொஞ்சம் தேத்தி அனுப்புங்கோ என்று அம்மாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டேன் நான். எதை நினைச்சும் கவலைப்படாதேம்மா இப்படி சுத்தப்படுத்திட்டா கூட உடனே நின்னுடும். அப்புறம் எங்க சைடுல யாருக்கும் சொல்லலை நீங்களும் தெரிவிக்கவேண்டாம் என்று நாசூக்காக எச்சரித்துவிட்டு நகர்ந்தார் மாமியார்.

இரண்டு மூன்று நாட்கள் எந்த வித சிக்கலும் இல்லை ஆனால் அடிவயிற்றில் மட்டும் வலி கதறிக்கொண்டே இருந்தது. கனவுகள் பொய்த்துப் போன கவலையில் நான் இந்தா மோஷன் போலைன்னு சொன்னீயே கொஞ்சம் விளக்கெண்ணையை குடி சூட்டு வலியாத்தான் இருக்கும். பேசாமல் குடித்தேன் யாருக்கும் சொல்லவில்லை என்றாலும் சில சாதாரண பார்வைகளே பரிதாபப் படுகுழியில் தள்ளின. அதற்குமேல் வலி பெருகிக்கொண்டே இருந்தது. அடுத்த சில மணி நேரங்களில் அருகிலிருந்த மருத்துவமனை அவரசத்தைப் பூசிக் கொண்டது. ஐ.சி.யூ கேரில் தேடிப்பிடிக்க நரம்பில்லாமல் கழுத்தின் இடது பக்கத்தில் சலைன் ஏற என் வயிற்றில் கர்ப்பை டியூப்பில் குழந்தை வளர்ந்திருக்கிறது அதை சரியாக கவனிக்காததால் தவறான மருத்துவத்தால் கருப்பையில் இல்லாத குழந்தை சுரண்டி கலைக்கப்பட்டு இருக்கிறது. குழாயில் வளர்ந்த குழந்தை கவனிக்கப்படாமலேயே இருந்திருக்கிறது. அந்த ட்யூட் வெடித்து விட்டதாம் இரண்டாக கட்டான அதை வெட்டி எறிந்து விட்டார்கள். அடுத்த முறை நான் குழந்தை உண்டானால் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று! சிரமமாம்.

 

 

kl



பத்துநாட்களாக மருத்துவமனை வாசம்தான் இன்னும் இரண்டொரு நாளில் வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இருந்தாலும் மனம் முழுக்க பயம் என்னை நம்பி வந்த அந்த சின்னஞ்சிறிய உயிர் என் கண்முன்னே இரத்தமாய் ஆஸ்பத்திரி ட்ரேயில்! யாருடைய அவசரமோ என்மீது விழுந்து இருக்கிறது. எல்லாரும்தான் பிள்ளை உண்டாகிறாங்க அய்யய்யோ இந்த பொண்ணுக்கு இப்படியா ஆகணும் என் வாயில் குழைந்த ரசம் சாத்தை கரண்டி கொண்டு ஊட்டியபடியே என் அத்தை புலம்பிக்கொண்டிருக்க, நான் மட்டும் சுவடில்லாத என் வயிற்றை தடவிக்கொண்டேன். கையை அசைக்காதேம்மா இப்பத்தான் வீக்கம் குறைஞ்சிருக்கு இன்னும் நியூட்டிஷன் போடணும். உடல் முழுவதும் ரணமாய் வலித்தது.

பெரிய ஆஸ்பத்திரின்னு போனா இப்படியா தப்பா வைத்தியம் பார்ப்பாங்க நீ நல்லபடியா வீட்டுக்கு வா நான் அவங்க மேல கேஸ் போடப்போறேன் கணவரின் குரல். யாரையும் பார்க்க திராணியின்றி உயிரின்றி கரைந்த அந்த சிசுவை நான் அறியாமலே வயிற்றுச் சுவரை அலங்கரிக்க வந்த ஓவியம் கலைந்ததை எண்ணி கதறிக்கொண்டு!


 

Next Story

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய பரபரப்பு கடிதம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Wife who lost her husband passed away in Chennai

சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.

பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.

இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.

இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5  பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.

இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில்  தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.

அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.