Skip to main content

பரிதவிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் - லதா சரவணன் எழுதும் 'இப்படியும் இவர்கள்' #30

Published on 19/05/2020 | Edited on 20/05/2020

 

கத


ஜூன் 1 முதல் 10 வகுப்புத் தேர்வுகள் தொடங்கப் போவதாக அறிவித்த போது தொலைந்து போன தன் 60 நாட்களை ஏதாவது டைம் மெஷின் ஏறி மீட்டுக் கொண்டு வந்துவிடமாட்டோமா? என்றுதான் ஏங்கி இருக்கும் ஒவ்வொரு பிள்ளைகளின் மனமும். சாதாரண தேர்வு என்றாலே பயப்படும் நிலையில் தொடர்பு சாரா விடயமென இத்தனை நாட்கள் விடுமுறையில் அவர்களின் மனம் ஏற்கனவே உழண்டு போய் இருக்கிறது.
 


தற்போது மாற்றப்பட்ட பாடத்திட்டங்களும் "பத்தாம் வகுப்பு, நல்லாப்படி" என்ற வாசகங்களும் "நீ இத்தனை வருஷம் என்ன படிச்சி கிழிச்சேன்னு... இப்பத்தானே தெரியும்" என்ற பார்வைகளுக்கும் மத்தியில் தொடர் வகுப்புகள், பயிற்சிகள் எதுவும் இல்லாமல், கரோனாவின் அச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களின் நடுவில் தன்னைத் தேர்வுக்குத் தயார் படுத்திக்கொள்ள இந்த 60 நாள் நிச்சயம் பயணளிக்கவில்லை. 50, 100 என்ற எண்ணிக்கையின் போதே அவர்களின் கரங்களில் தேர்வுத் தாளை நீட்டிருக்கலாம். ஆனால் அப்போதைய உள்ளிருப்பை வலியுறுத்திவிட்டு ஆயிரக் கணக்கிற்கு மேல் எண்ணிக்கையில் மணிக்கொரு சிவப்புக்கட்டம் போட்ட பிரேக்கிங் நியூஸ் என்ற கொட்டை எழுத்துகளில் கலர் கலராக கரோனா உருண்டையைக் கண்டு அச்சப்படும் போது தூய்மைப்படுத்தப்பட்ட 10 பேர் மட்டும் கொண்ட தேர்வு அறைக்கு வர அவர்கள் சுணங்குவது நியாயம் தானே.

நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட போது பெற்றோர்கள் யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்பதைக் காரணமாகச் சொல்லியிருந்தார்கள். உண்மையில் இந்தத் தேர்வை நிறுத்த எங்கு யாரைப் போய்ப் பார்ப்பது என்று பெற்றோர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் தங்கள் மகன் அல்லது மகளின் பள்ளித் தோழர்களின் பெற்றோர்களிடம் என்னப்பா செய்வது? ஒருவருஷம் போனாலும் பரவாயில்லை நான் அவளை அனுப்பப் போவதில்லை என்று சொல்லும் வாசகங்களே நமது செவிப்பறை வந்து அறைகிறது. பள்ளியின் வகுப்புக் கட்டணம் விடுமுறை என அறிவிக்கும் பள்ளியின் குறுஞ்செய்தி நமது பள்ளி பாதுகாப்பாக இருக்கிறது. பிள்ளைகளை நம்பி அனுப்புங்கள் என்று அனுப்பிவிடாதா என பெற்றோர்கள் மென்திரையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசாங்கம் சொல்லிவிட்டது என்பதால் நிர்வாகமும் தேர்வை நடத்தும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.
 

 


மாவட்ட ஆட்சியாளர்களின் கண்காணிப்பின் பேரில் தேர்வு மையம் இருக்கிறது. பள்ளி கல்லூரிகள் இப்போது திறக்கும் எண்ணம் இல்லை 10 ஆம் வகுப்பில் சில மாணவர்களுக்கு கரோனா தொற்று உள்ளது என்று மாறி மாறி செய்திகளின் சாரலில் நனையும் போது நிச்சயம் இந்தத் தேதியும் கடைசி நொடியில் மாறிவிடும் அதனால் படிக்கவேண்டுமா என்று பிள்ளைகள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். மாறாக பரிட்சை நெருங்கிவிட்டது படி என்றும் சொல்லும் பெற்றோரை "இத்தனை நாள் வாசலுக்கே அனுப்பமாட்டேன்னு சொல்லிட்டு! இன்னைக்கு எக்ஸாம் ஹால் போகச் சொல்றீங்க? அப்போ உங்களுக்கு எங்கள் உயிரை விடவும் எக்ஸாம்தான் முக்கியமா?" என்று கேள்வி கேட்கிறார்கள் பிள்ளைகள்.

இவ்வளவு ஏன், என் மகள் கூட சூழ்நிலைக்கு மட்டும் கட்டுரைகள் எழுதுகிறீர்கள் என்று கேட்டுவைத்தாள். இதையும் மீறி நாம் புத்தி சொல்லி அரசாங்கம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள் என்று சொன்னால், நாளைக்கு நான் போகும் போது எனக்கும் கரோனான்னு அவங்க ஏதாவது சொல்லிட்டா என்னைத் தனியா இல்லை கொண்டு போயிடுவாங்க. கேள்வித்தாளும், ஆன்ஸர் பேப்பரும் எல்லாமே மாறி மாறித்தானே வரும் அதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டா தொடர்ந்து பத்து நாள் பயமா இருக்கு என்று மிரளும் கண்களைச் சந்திக்கும் போது நான் உன்னை அனுப்பலைடா என்று கட்டிக் கொள்ளத்தான் தோன்றுகிறது. காரணம் அந்தப் பயம் நமக்கே இருக்கிறது.
 

ரச

 

http://onelink.to/nknapp


முதல் ஒரு வாரம் பள்ளிகளைத் திறந்து முதலில் பெற்றோர் ஒருவரை அழைத்து பள்ளியும் தேர்வு நடத்தும் இடமும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை வரவழைக்க முயலவேண்டும். கடந்து போன இந்த 60 நாட்கள் விடுமுறை அல்ல. மன சுழற்சியில் தடுமாற்றம் உள்ள பயத்தின் ஒரு பகுதி அந்த அச்சத்தைப் போக்க ஒரு படி எடுத்து வைத்தால் மாணவர்கள் மறவாமல் தேர்வுக்களம் நுழைவார்கள். பொதுத் தேர்வுகளில் ரிப்பன், பாக்ஸ், எக்ஸாம் பேட், என்று எதுவும் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பள்ளிப் பிள்ளைகள் மாஸ்க், க்ளவுஸ், சானிடைஸரோடும் வர அனுமதிக்க வேண்டும். ஆன்லைனில் பள்ளி பாட வகுப்புகளோடு ஒரு அரைமணி நேரம் பிள்ளைகளுக்குத் தைரியம் சொல்லி பயம் விரட்ட ஆன்றோர்களையும், ஆசிரியர்களையும் பேச வைக்கலாம். அப்போது அவர்கள் பயம் சற்று தெளியும்.

அதைவிடவும் முக்கியம் பெற்றோர்களுக்கு பணக்கஷ்டம், நெடுநேர உடல் உழைப்பு, மனரீதியான உளைச்சல் எல்லாம் இந்த 60 நாளில் இருப்பதைப் போல பிள்ளைகளுக்கும் இருக்கும் அதனால் அளவுகடந்த பயத்தோடு தேர்வு எழுதும் பிள்ளைகளை மேலும் கண்டதையும் சொல்லி பயமுறுத்த வேண்டாம். நம் கண்டிப்பையும், கசப்பையும் காட்டும் தருணம் இது அல்ல, பிள்ளைகளுக்கு ஊக்கம் கொடுங்கள். முடிந்தளவு தேர்வெழுது மதிப்பெண் முக்கியம்தான் ஆனால் அதுவே வாழ்கையில்லை என்று உணர்த்துங்கள்.


 

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.