Skip to main content

மிரட்டல் தர்பார்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #4

Published on 02/11/2019 | Edited on 02/11/2019


“என்ன விளையாடுறீங்களா?”

வெறி பிடித்தவர்போல் கத்தினார் ஹிட்லர்.

“நான் சொன்னதை ஏற்காவிட்டால், மூன்றே நாளில் ஜெர்மனியை முடக்கிவிட முடியும். அதிரடிப்படையிடம் ஜாடை காட்டினால் ஜெர்மனி நாசமாகிவிடும்” மிரட்டினார் ஹிட்லர். நிஜமாகவே ஸ்லெய்ச்சரும், பாப்பெனும் மிரண்டு விட்டார்கள். தனிப்பட்ட விதத்தில் மரியாதையானவர் ஹிட்லர். எல்லோரிடமும் பணிவாகவும், அன்பாகவும்தான் பேசிப் பார்த்திருக்கிறார்கள். சாத்தான் புகுந்தது போல் மேடையில்தான் பேசிப் பார்த்திருக்கிறார்கள்.

அப்படி என்னதான் நடந்தது?

ஹிட்லரின் நிபந்தனைகளை ஏற்க முடியாது. வேண்டுமென்றால் துணை பிரதமராக நியமிக்கலாம். பிரஷ்யாவுக்கான உள்துறை அமைச்சர் பதவியை விட்டுத்தரலாம் என்று ஹிண்டன்பர்க் கூறியதாக ஹிட்லரிடம் வந்து ஸ்லெய்ச்சரும், பாப்பெனும் தெரிவித்தனர்.

அதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம். நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சி. 230 இடங்களை கையில் வைத்திருக்கும் கட்சி. அதன் தலைவருக்கு துணை பிரதமர் பதவிதான் தரமுடியும் என்றால், ஹிட்லர் ஆவேசப்பட மாட்டாரா? அவர் அதிகாரத்திற்கு வருவார். நமக்குக் காரியங்களை சாதகமாக முடித்துத் தருவார் என்று தொழிலதிபர்கள் அவர் மீது ஏராளமான முதலீடு செய்துள்ளனர். மூன்று ஆண்டுகளில், அடுத்தடுத்து நான்கு தேர்தல்களைச் சந்திக்க முடிந்திருக்கிறது என்றால் சும்மாவா?

 

v



இப்போதும் தனது பதவிக்கனவு தகர்ந்து போவதை ஹிட்லரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஸ்லெய்ச்சரும், பாப்பெனும் சென்றுவிட்டனர். ஹிட்லர் வேர்த்துப் போயிருந்தார். அவரது கட்சித் தலைவர்கள் மவுனமாக இருந்தனர். எழுந்து, அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.

“இந்த முறை என்ன வந்தாலும் சரி. நமக்கு பதவி இல்லையென்றால் நாடாளுமன்றம் நடக்கக் கூடாது” டேபிளில் ஓங்கிக் குத்தினார். அதே நாள் மாலையில் குடியரசுத்தலைவர் ஹிண்டன்பர்க் ஹிட்லருக்கு அழைப்பு விடுத்தார். அந்தச் சந்திப்பு காரசாரமாக இருந்தது. “உங்கள் நடவடிக்கை சரியில்லை. மிரட்டல் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வன்மம் நாட்டுக்கு நல்லதல்ல. அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் எல்லை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. எல்லோரையும் அனுசரித்துப் போகும் பக்குவமான மனநிலைக்கு வரப்பாருங்கள். இப்போதைக்கு எனது விருப்பப்படி துணை பிரதமராகி, அரசு செயல்பட ஒத்துழைப்புத் தாருங்கள்”

86 வயது முதியவர் ஹிண்டன்பர்க் அறிவுரை கூறினார். “முடியாது. பாப்பென் அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது. எனக்கு பிரதமர் பதவி அல்லது மீண்டும் தேர்தல்” 44 வயது ஹிட்லர் அழிச்சாட்டியமாக பேசிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாஜிக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் கோயரிங் எழுந்து, பாப்பென் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக அறிவித்தார்.
 

 

gh



அதற்கு அவசியமில்லை என்றார் பிரதமர் பாப்பென். நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், மீண்டும் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

போச்சுடா

1928ல் தேர்தல். அப்புறம் 1930ல் ஒரு தேர்தல். 1932ல் அடுத்தடுத்து இரண்டு சுற்று குடியரசுத்தலைவர் தேர்தல். மீண்டும் அதே ஆண்டு ஜூலையில் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்தல். இப்போது தேர்தல் முடிந்து இரண்டே மாதங்களில் மீண்டும் தேர்தல். மக்கள் அலுத்துப் போனார்கள். தேர்தல் என்றாலே வெறுத்துப் போனார்கள். கோயபல்ஸ் புதிய வாக்குறுதிகளைத் தயாரிக்க முடியாமல் பொய்களைத் தேடிப்பிடிக்க வேண்டியிருந்தது. நாஜிக் கட்சியினரை உசுப்பிவிட முடியாமல் திணறினார். முன்புபோல பிரச்சாரத்தில் உக்கிரம் இல்லை.

பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போதே ஹிட்லருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சித் தகவல். அவரை மிகவும் நேசித்த ஈவா பிரவுன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு விரைந்தார் ஹிட்லர். ஈவா பிரவுனின் அருகிலேயே இருந்தார். தேர்தல் பிரச்சாரம் மந்தமாகியது.

 

 

jh



ஈவா பிரவுனின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

ஜெலி மரணத்திற்கு பின்னர் ஹிட்லர் மாறியிருந்தார். பார்க்கிற ஆளிடமெல்லாம் தனது அன்புக்குரிய ஜெலி இறந்துவிட்டதைப் பற்றியே பேசினார். அவளைப் பற்றி பேச்சு வந்தாலே, ஹிட்லரின் கண்கள் கசிந்துவிடும். ஜெலி உயிரோடு இருக்கும்போது, ஈவா பிரவுனுடன் உல்லாசமாக சினிமாவுக்குப் போன ஹிட்லர், அவளுடைய மரணத்திற்கு பின்னர் அரசியலில் தீவிரமாகிவிட்டார். அனேகமாக மறந்தே விட்டார். அவளைப் பார்த்தாலும் லேசான புன்னகையுடன் விலகிவிடுவார். தனியே சந்திப்பதில்லை. ஹிட்லரைக் கவரும் தனது முயற்சி நிறைவேறாததால், தற்கொலைக்கு முயன்றாள். ஹிட்லரின் காதல் மனம் அப்போது வெளிப்பட்டது. தனது எதிர்காலமே இந்தத் தேர்தலில்தான் இருக்கிறது என்றபோதும், அவர் ஈவா பிரவுனின் அருகிலேயே இருந்தார்.

தேர்தல் முடிவு நாஜிகளுக்கு இழப்புதான். சென்ற தேர்தலைக் காட்டிலும் 20 லட்சம் வாக்குகள் குறைவு. 34 இடங்கள் பறிபோயிருந்தன. ஆனால், இப்போதும் 196 இடங்களுடன் அதுதான் பெரிய கட்சியாக இருந்தது. ஆட்சி அமைக்கும் நாடகம் மீண்டும் தொடங்கியது. பாப்பென் ஓய்ந்துபோனார். அவரால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறமுடியவில்லை. “ஸாரி பிரசிடென்ட். என்னால் முடியவில்லை. வேறு ஏதாவது ஏற்பாடு செய்யலாமா என்று பாருங்கள்” எதிர்பார்த்தது போலவே ஹிட்லரை அழைத்தார் ஹிண்டன்பர்க். மீண்டும் தன்னைப் பிரதமராக்கும்படி கேட்டார் ஹிட்லர். மீண்டும் அவரது கோரிக்கையை மறுத்தார் ஹிண்டன்பர்க்.

ஆனால், இந்தமுறை நட்புரிமையோடு பேசினார். கூட்டணி அரசு அமைக்க ஒத்துழைப்பு தரவேண்டும்  என்றார். எல்லாவகையிலும் அவருக்கு உரிய பங்கு வழங்கப்படும் என்றார்.

 “நோ”

நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிட்டு வந்தார் ஹிட்லர். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அறிக்கையுடன் போய் ஹிண்டன்பர்க்கைப் பார்த்தார் ஹிட்லர். “நாடாளுமன்ற ஜனநாயகம் தோற்றுவிட்டது. அமைச்சரவைக் குழுவின் தலைவராக என்ன நியமியுங்கள். நாட்டில் வேகமாக கம்யூனிஸம் பரவி வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த நாஜிகளால்தான் முடியும்”

 

jk



அறிக்கையின் சுருக்கம் இதுதான். ஆனால், ஹிண்டன்பர்க் இதற்கும் மறுத்துவிட்டார். முந்தைய நிலையிலேயே உறுதியாக நின்றார். அரசு இயந்திரம் முடங்கிப்போய் கிடந்தது. இந்தச் சமயத்தில் நாட்டின் மிக முக்கியமான தொழில் அதிபர்களும், வங்கி உரிமையாளர்களும், நிலச்சுவான்தார்களும் வர்த்தகர்களும் ஹிண்டன்பர்க்கைச் சந்தித்தனர். “ஹிட்லரை பிரதமராக்குங்கள். வியாபாரத்திற்கு அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” அவர்களது கோரிக்கை ஹிண்டன்பர்க்கை மீண்டும் குழப்பியது. ஸ்லெய்ச்சரையும், பாப்பெனையும் அழைத்தார்.

“என்ன செய்யலாம் சொல்லுங்கள்” “நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடலாம். அவசர சட்டங்கள் மூலம் ஆட்சியை நடத்தலாம். ராணுவத்தையும் காவல்துறையையும் வைத்துக் கொண்டு அரசியல் கட்சிகளை ஒடுக்கிவிடலாம். மன்னராட்சிக் காலத்தைப்போல மேட்டுக்குடியினரையும் தொழில் அதிபர்களையும் வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தலாம்”

“இதைத்தானே ஹிட்லர் வேறு பாணியில் சொல்கிறார். இதெல்லாம் சாத்தியமில்லை. எனக்கு வயதாகிவிட்டது. இந்தக் கேடுகெட்ட வேலை பெரிய தொல்லையாக இருக்கிறது” நொந்துபோய் சொன்னார் ஹிண்டன்பர்க். “நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்”

திடீரென்று குண்டைத் தூக்கிப்போட்டார் ஸ்லெய்ச்சர். பாப்பெனுக்கு வியப்பு. “பாப்பெனுடைய திட்டத்தை ஏற்க முடியாது. கிரிகோர் ஸ்ட்ராஸர் தலைமையில், நாஜிக் கட்சியைப் பிளந்து பெரும்பான்மை ஆதரவுடன் நான் ஆட்சி அமைக்கிறேன். எனக்கு வாய்ப்பு அளியுங்கள்” ஹிண்டன்பர்க் காதில் வாங்கவில்லை. அவர் பாப்பெனுக்கு ஆதரவாக இருந்தார்.

“நீங்கள் அரசு அமைக்கும் முயற்சியைத் தொடங்குங்கள்” ஹிண்டன்பர்க் அறையிலிருந்து வெளியேறினார். பாப்பெனுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார் ஸ்லெய்ச்சர். அடுத்தநாள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பாப்பெனுக்கு ராணுவம் ஒத்துழைப்பு வழங்காது என்று அறிவித்தார் ஸ்லெய்ச்சர். பாப்பென் ஆடிப்போய் விட்டார். மீண்டும் ஹிண்டன்பர்கிடம் ஓடிவந்தார். கன்னங்களில் கண்ணீர் வழிய நின்றார். “என் அன்பான பாப்பென். இப்போதைய நிலையில் உள்நாட்டுப் போர் உருவானால் அதற்கு பொறுப்பேற்கும் நிலையில் என் வயது இல்லை. ஸ்லெய்ச்சரின் அதிர்ஷ்டத்தையும் ஒருமுறை பார்த்துவிடலாம்”
என்று ஆறுதல் கூறினார் ஹிண்டன்பர்க்.
 

j



டிசம்பர் 2 ஆம் தேதி ஸ்லெய்ச்சர் பிரதமரானார். அதைத் தொடர்ந்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறத் தொடங்கின. கிரிகோர் ஸ்ட்ராஸரை ரகசியமாக சந்தித்தார் ஸ்லெய்ச்சர். துணை பிரதமர் பதவி, பிரஷ்யாவின் உள்துறை அமைச்சர் பதவி ஆகியவற்றை விட்டுத்தருவதாக உறுதியளித்தார். திரைமறைவில் என்ன நடக்கிறது என்பதை பாப்பென் மூலம் தெரிந்துகொண்டார் ஹிட்லர். ஸ்ட்ராஸர் கட்சியின் நிறுவன தலைவர்களில் ஒருவர். அவரா இப்படிச் செய்தார். ஹிட்லரால் நம்ப முடியவில்லை. உடனே அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. கட்சியின் முக்கிய தலைவர்களும் வந்திருந்தனர்.

“இதோ பாருங்கள். உங்கள் வீம்பு, பிடிவாதம் ஆகியவற்றால் கட்சிக்குத்தான் இழப்பு. மூன்றே மாதங்களில் 20 லட்சம் வாக்குகளை இழந்திருக்கிறோம். 34 இடங்களை பறிகொடுத்திருக்கிறோம். குறைந்தபட்சம் புதிய அரசுக்கு ஒத்துழைப்பாவது தருவதுதான் நல்லது”

ஸ்ட்ராஸரா இப்படிப் பேசுவது?

அவருடைய கருத்துக்கு கோயரிங்கும், கோயபல்சும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை ஹிட்லர் ஆதரித்தார். ஸ்ட்ராஸர் தனது அத்தனை பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்து விட்டார்.
இதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆடிப்போய் விட்டார். தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் போவதாக வெறிபிடித்தவர் போல துப்பாக்கியை எடுத்தார். மற்றவர்கள் சாந்தப்படுத்தினர்.

ஸ்ட்ராஸரின் ஆதரவு ஸ்லெய்ச்சருக்கு கிடைக்கவில்லை. அவர் ஏமாந்துவிட்டார். ஸ்ட்ராஸர் இத்தாலிக்குச் சென்றுவிட்டார். “ஜெர்மனி ஒரு ஆஸ்திரிய நாட்டவரின் கைகளுக்குப் போகப்போகிறது. அதுவும் கடைந்தெடுத்த பொய்யரிடம் சிக்கப்போகிறது” என்று எழுதினார் ஸ்ட்ராஸர். “கோயரிங்கிற்கு ஏதேனும் கிடைத்தால் போதும். வாயை மூடிக்கொள்வார்” இதுவும் ஸ்ட்ராஸரின் கருத்துதான். ஆனால், ஸ்ட்ராஸர் “செத்துப்போன சடலம்” என்று கோயபல்ஸ் எழுதினார்.

ஸ்ட்ராஸரின் பொறுப்புகளை தனது நண்பர் ருடால்ப் ஹெஸரிடம் ஒப்படைத்தார் ஹிட்லர். அதன்பிறகு அமைதியாகிவிட்டார். ஸ்லெய்ச்சரின் அரசுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்றுதான் எல்லோரும் கருதினர். ஆனால், ஜனவரியில் மீண்டும் ஜெர்மன் தொழிலதிபர்கள் ஹிண்டன்பர்க்கை சந்தித்து ஹிட்லரை பிரதமராக்குங்கள் என்று வற்புறுத்தினர். அதைத் தொடர்ந்து பாப்பெனும் ஹிட்லரை ரகசியமாகச் சந்திக்க விரும்பினார். அந்தச் சந்திப்பின்போது, ஸ்லெய்ச்சரை பதவியிலிருந்து விரட்ட ஹிட்லருடன் ஒத்துழைப்பதாக தெரிவித்தார். ஹிட்லருக்கும் பாப்பெனுக்கும் சம மரியாதை இருக்கும் வகையிலான அரசு அமைக்கலாம் என்றார்.

இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட ஹிட்லர், தனக்குத்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதைத் தெரிந்துகொண்டவுடன் ஹிண்டன்பர்கிடம் ஓடிவந்தார் ஸ்லெய்ச்சர். பாப்பென் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக புலம்பினார். அவரை யாரும் நம்பவில்லை. யாருடைய ஆதரவையும் பெற முடியவில்லை. பாப்பெனை அழைத்துப் பேசினார். நடந்தவற்றை அறிந்தவுடன், மேற்கொண்டு பேசி முடிவுக்கு வரும்படி கூறினார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி ஹிண்டன்பர்கிடம் மன்றாடினார் ஸ்லெய்ச்சர். அவர் மறுத்துவிட்டார்.

“வேறு வேலையில்லையா?”

இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, லிப்பி என்ற சிறிய மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் நாஜிக் கட்சியினர் தீவிரமாக கவனம் செலுத்தினர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து அங்கு குவிந்த நாஜிக் கட்சியினரின் தீவிரமான பிரச்சாரம் காரணமாக, கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளைப் பெற்றனர்.

இதை நாஜிகள் ஊதிப்பெரிதாக்கினர். தங்கள் செல்வாக்கு அதிகரிப்பதாக பறைசாற்றினர். 1933 ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ஹிண்டன்பர்கின் மகன் ஆஸ்கரும், பாப்பெனும் வங்கி உரிமையாளர் ஒருவரின் வீட்டில் சந்தித்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், ஆஸ்கர் ஹிட்லரின் வாக்குறுதிகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். இதற்குள் ஸ்லெய்ச்சர் தன்னால் முடிந்தவரை ஆதரவு கோரி அலைபாய்ந்தார். முடியவில்லை. கடைசியாக ஹிண்டன்பர்கிடம் வந்த அவர் மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி வேண்டினார். அவர் மறுத்துவிட்டார்.

ஜனவரி 30 ஆம் தேதி ஹிட்லரை வரவழைத்தார் ஹிண்டன்பர்க். பிரதமர் பதவியை அளிப்பது என்று   முடிவு செய்திருந்தார். அப்போது கடைசி நிமிட முட்டுக்கட்டை விழுந்தது. கன்சர்வேடிவ் கட்சியின் தலவைர் ஹியூஜென்பர்க், ஹிட்லருக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். “அவசரப்படாதீர்கள். ஹிண்டன்பர்க் தனது முடிவைத் தெரிவிக்கும் வரையாவது பொறுமையாக இருங்கள்.” ஹிட்லர் சாந்தமாகப் பேசினார். குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம். ஹிண்டன்பர்க் தனது அறையிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தார். உடனே, ஹிண்டன்பர்க் வாழ்க என்று முழக்கமிட்டது கூட்டம்.

முக்கிய தலைவர்கள் ஹிண்டன்பர்க்கின் அறைக்கு வெளியே காத்திருந்தனர். வெளியே வந்த ஹிண்டன்பர்க், “உங்களை பிரதமராக நியமிக்கிறேன்” என்றார். மதியம் பதவி ஏற்பு நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. “ஜெர்மானியர்களின் நலன்களுக்காக எனது சக்தியை பயன்படுத்தி உழைப்பேன். ஜெர்மனியின் அரசியல் சட்டத்தையும், மக்கள் நலச்சட்டங்களயும் பாதுகாப்பேன். அனைத்துக் குடிமக்களின் உரிமைகளையும் அவர்களுக்குரிய நீதியையும் நிலைநாட்டுவேன்” இந்த வாசகங்களைக் கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். ஹிட்லரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். “நாம் சாதித்துவிட்டோம்” உணர்ச்சி கொப்புளிக்க கூறினார் ஹிட்லர். வெளியே காத்திருந்த மக்கள் திரள்  “ஹிட்லர் வாழ்க” என்று  கோஷமிட்டது.

 

Next Story

போலீஸ் ஸ்டேஷனாக மாற உள்ள ஹிட்லரின் வீடு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு முடிவு செய்துள்ளது. பல யூதர்களை கொன்று குவித்தவர் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர். அவருக்கு சொந்தமான ஆஸ்திரியாவில் பிரனவ் ஆவ் இன் என்னும் நகரத்தில் உள்ள அவரது பிறந்த வீட்டை ஆஸ்திரியா அரசு காவல் நிலையமாக மாற்றவுள்ளது.



முன்னதாக ஆஸ்திரியா அரசு இந்த கட்டிடத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி அதனை அகதிகளுக்கான மறுவாழ்வு மையமாக மாற்ற முயற்சித்தது. ஆனால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு, கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த கட்டிடத்தை 8,10,000 யூரோக்களுக்கு ஆஸ்திரியா அரசு கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இதனை காவல் நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

ஹிட்லர் ஒலிம்பிக்ஸ்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #7

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

சர்வாதிகாரி ஆகி விட்டால் போதுமா? சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளினைப் போலவே, உலகப் பத்திரிகைகள் ஹிட்லரை சித்தரித்து வந்தன. 1935 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹிட்லரை இது மிகவும் கவலையடையச் செய்தது. நாஜிகளின் கொடூரமான அட்டூழியங்கள் உலகப் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. ஹிட்லரையும், அவரது அரசையும் கிழிகிழியென்று கிழித்தெறிந்தன. இனப்படுகொலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது. கோயபல்சும், கோயரிங்கும், ஹிம்லரும், ருடால்ப் ஹெஸ்ஸும் ஹிட்லரை இறகுப்பந்துபோல பயன் படுத்துவதாக கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. மற்றொரு பக்கம் ஹிட்லரின் பேச்சுக்களை அலசி ஆராய்ந்து, அவர் போருக்கு தயாராகி வருவதாக கட்டுரைகள் எழுதப்பட்டன.

ஹிட்லருக்கு போர் புரியவேண்டும் என்ற எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனால், ஜெர்மனியின் தொழில்வளத்திற்கு கச்சாப் பொருள்களை வெளிநாட்டில் இருந்துதானே வாங்கியாக வேண்டும்? கொஞ்சம் அடக்கி வாசித்து, பிறகு எகிறலாமே. தொழில் அதிபர்கள் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்துவிட்டார். வெளிநாடுகளுக்கு ஜெர்மன் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக கச்சாப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடிவு செய்தார். அதற்கு, வெளிநாடுகளின் மதிப்பைப் பெற வேண்டுமே.
 

fgh



பிரான்சிடம் பேசிப் பார்க்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால், ஹிட்லரை முட்டாள் என்று கூறிவிட்டார் பிரான்ஸ் பிரதமர். அமெரிக்காவிடம் கேட்கலாம் என்றால், அங்குள்ள யூதர்களின் தயவைப் பெற்றதாக ஆகிவிடும். அது தற்கொலைக்குச் சமம். என்ன பிரிட்டனைத் தாஜா செய்ய முடியுமா பார்க்கலாம். அது சாத்தியமானால் தப்பிவிடலாம் என்று முடிவு செய்தார். அதேசமயத்தில், பிரிட்டனும் ஜெர்மனியுடன் உறவுகளைப் புதுப்பிக்கலாம் என்று நினைத்திருந்தது. ஆங்கிலேயர்கள் தூய்மையான ஆரியர்கள் என்பது ஹிட்லரின் எண்ணம். இந்திய சுதந்திரப் போராட்டத்தையே மட்டமாக பேசியவர் ஹிட்லர். “இங்கிலீஷ் ஜாதி தூய்மையானது. அது களங்கமுற்று அரசு எந்திரம் நொறுங்கிப் போனால், அல்லது, பலமான எதிரி உருவானால் மட்டுமே பிரிட்டனை ஜெயிப்பது சாத்தியம். இந்தியத் தலைவர்களால் இங்கிலாந்தை எதிர்த்துப் போராட முடியாது. மற்ற வல்லரசுகளின் கீழ் இருப்பதை விட இங்கிலாந்தின் கீழ் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது”

இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பற்றி ஹிட்லரின் கருத்து. அதனால்தான், விடுதலைப் போராட்ட காலத்தில், ஹிட்லருடைய அடிப்பொடிகளாக இந்தியாவில் உருவான ஒரு கூட்டம், விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க முன் வந்ததோ என்னவோ? பிரிட்டன் மீது இவ்வளவு உயரிய மதிப்பு வைத்திருக்கும் ஹிட்லர, அந்த நாட்டின் உறவை விரும்பியதில் வியப்பேதும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரிட்டனின் பத்திரிகைகள் கடுமையாக  எதிர்த்தன. அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலோர், பிரதமர் சாம்பர்லின் உள்பட ஹிட்லருடன் உறவை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்தனர். இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள ஹிட்லர் தயாராக இருந்தார். ஆனால், மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அனுமதி மறுத்துவிட்டார்.
 

 

gh



அடால்ப் என்ற வார்த்தை வொல்ப் என்ற ஆங்கில வார்த்தையின் மருவல் என்று கூறுவார்கள். அதாவது ஓநாய் என்று அர்த்தம். இதை ஹிட்லரே அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொள்வார். பிரிட்டனுடன் உறவு என்ற தந்திரத்தைக் கையில் எடுத்தபோது, தன்னை ஓநாய் என்று அவர்கள் நினைப்பார்கள், ஆனால், நான் நரி என்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை என்று நண்பர்களிடம் கூறினார். பிரிட்டனின் மன்னர், இங்கிலாந்துக்குள் வர ஹிட்லருக்கு அனுமதி மறுத்தாலும், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜான் சைமன் ஹிட்லரைத் தவறாக எடைபோட்டு விட்டார். மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று ஹிட்லர் பேசியதை அவர் நம்பினார். அதைத் தொடர்ந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக ஜெர்மனியும் ராணுவபலத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிப்பது தவறில்லை என்று கருத்துத் தெரிவித்தார்.

“நாங்கள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க மாட்டோம். அதேசமயம், வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் கீழ்  ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய ஸார்லாந்து உள்ளிட்ட பகுதிகளை மட்டுமே திரும்பக் கேட்கிறோம். எங்களுடைய விவசாய வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் இது மிகவும் அவசியம்” என்று நைச்சியமாக பேசிவந்தார் ஹிட்லர். சுமூகமான சூழல் உருவான நிலையில், ஜான் சைமனை பெர்லின் வரும்படி அழைத்தார் ஹிட்லர். இந்த முடிவு பிரிட்டனில் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால், அந்தச் சந்திப்புத் தேதி நெருங்கும் நிலையில் ஹிட்லர் திடீரென்று பல்டியடித்தார். “ஜெர்மன் மீண்டும் ஆயுத உற்பத்தியைப் பெருக்கப் போகிறது. அதற்கான திட்டங்களைத் தயாரித்து வைத்துள்ளது. ஏற்கெனவே, கணிசமான அளவில் ராணுவபலத்தை ரகசியமாக அதிகரித்துள்ளது”

 

jk



இப்படித் தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்று பிரிட்டனில் வெளியிடப்பட்டு விட்டது. இது ஜெர்மனியை அவமானப்படுத்தும் செயல் என்று ஹிட்லர் ஆவேசப்பட்டார். கடைசியில், அந்தச் சந்திப்பு நடக்காமலேயே போயிற்று. மார்ச் 16 ஆம் தேதி, ஜெர்மன் ராணுவத்திற்கு புதிதாக ஐந்துலட்சம் வீரர்களைத் தேர்வு செய்யும் வகையில் சட்டம் இயற்றினார் ஹிட்லர். “இன்றுடன் வெர்சைல்ஸ் உடன்படிக்கை செத்துவிட்டது. பிரான்சும் பிரிட்டனும் எதிர்க்கட்டும் பார்க்கலாம். அவர்களுக்கு அந்தத் துணிச்சல் இருக்கும் என்று நான் நம்பவில்லை. நாடாளுமன்றத்தில் ஹிட்லர் முழங்கியது உண்மைதான். பிரான்சும், பிரிட்டனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அடுத்த ஒரே ஆண்டில், ஜெர்மனியின் ராணுவபலம், பிரான்சுக்கு நிகரானது. 20 ஆண்டுகளுக்கு அப்புறம் இந்த பலத்தை மீண்டும் பெற்றது ஜெர்மனி.

1936 மார்ச் மாதம் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ராணுவம் விலக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ரைன்லாந்தை ஜெர்மன் தன்வசப்படுத்தியது. யாரும் மூச்சுக்கூட விடவில்லை. இப்போதைக்கு போர் வராது என்று சாதாரணமாக நினைத்திருந்த பிரிட்டன், தனது படைபலத்தை குறைக்கத் தொடங்கியிருந்த காலம் அது. ரைன்லாந்தைக் கைப்பற்றி மூன்றே மாதங்கள்தான். ஜூலை மாதம், ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அந்த நாட்டின் தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோ, இத்தாலி அதிபர் முசோலினியிடம் உதவி கேட்டார். ஆனால், அவர் அப்போது எத்தியோப்பியா மீது போர் தொடுத்திருந்தார். இதை ஜெர்மனி பயன்படுத்திக் கொண்டது. பிரான்கோவுக்கு உதவ ஒப்புக் கொண்டது. பிறகென்ன அடுத்த சிலநாட்களில் ஜெர்மனியின் கையில் ஸ்பெயின். ஜெர்மனியின் லாகவாமான இந்தத் தந்திரம் முசோலினிக்கு பிடித்துவிட்டது. அவர், ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
 

ghj



இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், பெர்லின் நகரம், ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு ஜரூராகத் தயாராகி வந்தது. 1936 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எத்தனையோ அல்லல்களைத் தாண்டி மிக கவனமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, ஹிட்லரே கவனித்தார். விளையாட்டு அரங்கை அவரே வடிவமைத்தார். ஆனால், யூதர்களயும், ஜிப்ஸிகளையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்துவரும் நாஜி அரசாங்கம் நடத்தும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், செக்கோஸ்லாவாகியா, ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகளில் யூதர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். யூத விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கக் கூடாது என்று யூத அமைப்புகள் தடை விதித்தன. ஏற்கெனவே, ஜெர்மனியில் அனைத்துத் தடகள விளையாட்டுகளிலும் யூதர்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்தனர். ஆரியர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதா வேண்டாமா என்று அமெரிக்கா பரிசீலனை செய்துவந்தது. பெர்லினுக்கு ஒரு குழுவை அனுப்ப, அது முடிவு செய்திருந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். சர்வதேச நன்மதிப்பைப் பெறுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். கோயபல்ஸ் தனது திறமையை இந்தப்பக்கம் திருப்பினார். ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகள் குறித்து பக்கம்பக்கமாக செய்திகள் வெளிவரும்படி பார்த்துக் கொண்டார். “யூதர்களுக்கு அனுமதி இல்லை” என்று எழுதி வைக்கப்பட்டிருந்த போர்டுகள் எல்லா இடங்களிலும் அகற்றப்பட்டன. ஜெர்மன் அரசு நிர்வாம் சிறப்பாக செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டன. ஹிட்லரின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் விளம்பரச் செய்திப்படங்களை பிரமாண்டமான முறையில் எடுத்துக் கொடுக்கும் பணியில் லெனி ரீபென்ஸ்டால் என்ற பெண்மணி ஈடுபட்டிருந்தார்.

அவருடைய படங்கள், ஹிட்லரின் தேர்தல் வெற்றிக்கும், வெளிநாட்டினர் மத்தியில் செல்வாக்கைப் பரப்புவதற்கும் பெரிய அளவில் உதவியாக இருந்தன. யூதர்களுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டன. இது நாடகம் என்று ஈனஸ்வரமாக எழுந்த குரல்கள், ஆரவாரக் கூச்சலுக்கு மத்தியில் எடுபடாமல் போயிற்று. பெர்லின் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பது என்று அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து உலக அளவில் எழுந்த எதிர்ப்புகள் அனைத்தும் ஒடுங்கிவிட்டன. 11 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. ஹிட்லர் தனது படை பரிவாரங்களுடன் பிரமாண்டமான அரங்கிற்குள் நுழைந்தார். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து, வலது கையை உயர்த்தி “தலைவர் வாழ்க” என்றனர். வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அசந்துவிட்டனர். இப்படி ஒரு தலைவனா?

 

hj



மொத்தம் 49 தடகளக் குழுக்கள் பங்கேற்றன. ஜெர்மனியின் சார்பில் 348 வீரர்கள் கலந்துகொண்டனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா சார்பில் 312 பேர் பங்கேற்றன. பெரும்பகுதி பதக்கங்களை ஜெர்மனி வாரிக்குவித்தது. ஹிட்லர் நடுநிலையாளர் போல தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இந்தப் போட்டி ஜெர்மனியின் உலகளாவிய அந்தஸ்த்தை உயர்த்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதைப் புறக்கணிக்கமால் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் கலந்துகொண்டது தவறு என்று பின்னாளில் பேசப்பட்டன. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்ததுதான் தாமதம். ஹிட்லரின் என்ஜினீயரிங் மூளை வேகமாக திட்டங்களைத் தீட்டத் தொடங்கியது. யூதர்கள் மீதான வெறித்தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. கொத்துக் கொத்தாக அள்ளிச் சென்றனர். ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டனர். அங்கு கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். சாப்பாடு இல்லாமல் உயிர் இருக்கும்வரை உழைத்துவிட்டு செத்துப்போகும்படி விடப்பட்டனர்.

ஏற்கெனவே, நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தன. இப்போது, ஹிட்லரின் கவனம் ரயில்பாதைகளில் திரும்பியது. பிரிட்டனின் தி கிரேட் ரயில்வேக்கு சொந்தமான பாதைகள்தான் உலகில் அகலமானவையாக கருதப்பட்டு வந்தன. அதைவிட அகலமான ரயில்பாதைகளை ஹிட்லர் வடிவமைத்தார். குறைந்த விலையில் ஜெர்மானியர்களுக்கு கார் வழங்குவதற்காக வோல்ஸ்வேகன் காரை ஹிட்லரே வடிவமைத்தார். கட்டிடங்கள், சிறிய ரக விமானங்கள், நவீன பீரங்கிகள் என ஹிட்லரின் மூளையில் உதித்த எல்லாவற்றையும் உருவாக்க திறமையாளர்கள் நிறைந்திருந்தனர். ஹிட்லர் சொல்வார். விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், தொழிலாளர்களும் செய்து முடிப்பார்கள்.

வெளி உலகினருக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்று. முதல் இரண்டு ஆக்கிரமிப்பு அளித்த போதை குறைவது போல தெரிந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். வெற்றியால் உண்டாகும் போதை குறைய அனுமதித்தால் சோர்ந்து விடுவார்கள். என்ன செய்யலாம்? தனது ஓவிய ஆர்வத்தை புரிந்துகொள்ளாமல், கல்லூரியில் சேர்க்க மறுத்த வியன்னா ஓவியக் கல்லூரி நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்வு ஹிட்லரின் நெஞ்சில் இன்னமும் வடுவாக இருந்தது.

“ஜெர்மனியுடன் இணைந்து விடுங்கள்”

1938 ஆம் ஆண்டு 12 ஆம் தேதி ஆஸ்திரிய அரசுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தார் ஹிட்லர். வேண்டுகோளை ஏற்பதாக தெரியவில்லை. “எனக்கு ஆஸ்திரியா வேண்டும்” ராணுவத்திடம் கேட்டார் ஹிட்லர். ஜெர்மன் ராணுவத்தின் அணிவகுப்பைப் பார்த்ததுமே, ஆஸ்திரியா ஹிட்லரின் சட்டைப்பையில் வந்து விழுந்து. இதைப் பார்த்ததும் செக்கோஸ்லாவாகியா மிரண்டுவிட்டது. அடுத்து ஹிட்லரின் குறி தன்மீதுதான் இருக்கும் என்று நடுங்கியது. ஜெர்மனிடம் இருந்து எடுத்துத் தரப்பட்ட சுடடன்லாந்தை மீண்டும் ஒப்படைத்து விடும்படி செக் அதிபர் பெனோஸுக்கு தகவல் அனுப்பினார் ஹிட்லர்.

அமைதியான முறையில் அந்தப் பகுதியை மட்டும் கொடுத்திருக்கலாம் அவர். பிடிவாதம் செய்தார். மூன்று மாதங்கள் வரை பேச்சுவார்த்தை என்ற பேரில் இழுத்தடித்தார். ஹிட்லர் பொறுமை இழந்தார். ஜெர்மன் ராணுவம் உத்தரவுக்காக காத்திருந்தது. ஹிட்லர் “ம்” என்றால் எந்த நாட்டையும் கவ்விக் கொண்டுவந்து அவர் காலடியில் போட தயாராக இருந்தது ராணுவம். செக் அதிபருடன் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே, இத்தாலிக்குச் சென்றார் ஹிட்லர். ரோம் நகரில் இத்தாலி சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். செக்கோஸ்லாவாகியா மீது படையெடுக்கும் பட்சத்தில்  முசோலினி எதிர்ப்பு தெரிவித்து விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அவரே அந்தச் சமயத்தில் எத்தியோப்பியா மீது படையெடுத்த களைப்பில் இருந்தார்.

இருவரும் பரஸ்பரம் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டனர். இதை அறிந்ததும், தனக்கு உதவி செய்யும்படி பிரிட்டனையும், பிரான்சையும் மன்றாடியது செக்கோஸ்லோவாகியா. ஏதேனும் செய்யுங்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரான்ஸ் பிரதமர். அவர் அனுப்பிய தந்தியின் நகலை இணைத்து, ஹிட்லருடன் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டார் சாம்பர்லின். சாம்பரிலின் அனுப்பிய தந்தியைப் பார்த்ததும் ஹிட்லரின் உதட்டோரத்தில் எகத்தாள புன்னகை தோன்றின. “நான் வருவதை ஏற்க மறுத்த பிரிட்டிஷ் சிங்கம், இப்போது, என் சந்திப்புக்கு நேரம் கேட்கிறது”

தனக்குள் சொல்லிக்கொண்டார் ஹிட்லர். எல்லாம் ஹிட்லரின் நேரம். பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வயது 70. இதுபோன்ற பயணத்தையெல்லாம் தவிர்த்து வந்தார். பெர்லினில் சந்திக்கலாம் என்றுதான் சாம்பர்லின் நினைத்திருந்தார்.

ஆனால், ஓபர்ஸல்ஸ்பர்க் மலையை ஓட்டிய பெர்காப் நகரில் சந்திக்க ஹிட்லர் ஏற்பாடு செய்தார். அங்கு செல்வதற்கே ஏழுமணி நேரம் அவர் பயணம் செய்ய வேண்டும். 1938 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அந்தச் சந்திப்பு நடந்தது. ஹிட்லர் மட்டுமே பேசினார். சாம்பர்லின் கேட்டுக் கொண்டிருந்தார். ஜெர்மனிக்கான பிரிட்டிஷ் தூதர் இருவருக்கும் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். ஜெர்மனியின் உரிமைகளைப் பற்றியே அவர் விவரித்தார். “எங்களிடமிருந்த எடுக்கப்பட்ட பகுதிகளைத்தான் கேட்கிறோம். நம் இரு நாடுகளுக்கு இடையே ஏதேனும் பிரச்சனை என்றால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” பேச்சுவார்த்தை முடிந்தது. மீண்டும் சந்திப்போம். நல்லதோர் முடிவெடுப்போம் என்று சாம்பர்லின் தெரிவித்தார். “இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே ஹிட்லர்” வியந்தபடியே லண்டன் போய்ச் சேர்ந்தார் சாம்பர்லின்.