Skip to main content

தமிழை இரண்டாம் அலுவல் மொழியாகக் கொண்டிருந்த வடமாநிலம்! - முதல்வரை தெரியுமா?

Published on 12/11/2019 | Edited on 27/11/2019

நம் 'முதல்வரை தெரியுமா' தொடரில் இந்தியா முழுவதுமுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடந்து புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும்பொழுது புதிதாகப் பதவியேற்கும் முதல்வர் குறித்தும் அந்த மாநிலத்தின் அரசியல் வரலாறு குறித்தும் சுருக்கமாகப் பார்த்து வருகிறோம். ஒரு இடைவெளிக்குப் பிறகு, சமீபத்தில் தேர்தல் நடந்த ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்கள் குறித்துக் காணலாம். மஹாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வராத நிலையில், ஹரியானாவில் தன் பாணியில் சுமூகமாக ஆட்சி அமைந்துவிட்டது பாஜக.

 

chandigarh capital complex



இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலம் ஹரியானா. மனித உடலில் மூக்கு எங்குள்ளதோ, அதேபோல்தான் இந்திய வரைப்படத்தில் மூக்காக அடையாளப்படுத்தப்படும்  மாநிலம் ஹரியானா. ஹரியானா என்பது கடவுளின் வசிப்பிடம் என்கிறார்கள். கடவுள் மட்டுமா அங்கே வசிக்கிறார் என்றால் ஆட்சி அதிகாரத்துக்காக கடவுளையே விலைபேசி விற்பவர்களும் அந்த மாநிலத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானாவின் தலைநகரம் சண்டிகர்தான், பஞ்சாப் மாநிலத்திற்கும் தலைநகரம். அதாவது இரண்டு தலை ஒரு வாய் என்பது போல். ஒரு காலத்தில் பஞ்சாப் மாகாணத்தோடு இருந்த பகுதியைத்தான் 1966ல் பிரித்து ஹரியானா என்கிற மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலம் பிரிக்கப்படும்போது சண்டிகர் நகரை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என இரண்டு மாநில மக்களும் முட்டிக்கொண்டனர். கடைசி வரை யாருக்கு தீர்வு என்பது வராததால் சண்டிகரை, இரு மாநிலத்தவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்து சண்டிகரை தனி ஒன்றிய பிரதேசமாக்கிவிட்டார்கள். தலைநகரத்துக்காக சண்டை போட்டுக்கொண்டது போல், இன்னொரு விவகாரத்திலும் இந்த மாநில மக்கள் முட்டிக்கொண்டு மோதினார்கள். அது மொழி பிரச்சனை.

 

 

haryana jats



பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிந்தாலும் ஹரியானாவில் இந்தி அலுவல் மொழியாக்கப்பட்டது. பஞ்சாபி பேசியவர்கள் அதிக அளவில் இருந்தனர். அதனால் இந்தியோடு பஞ்சாபியை இரண்டாவது அலுவல் மொழியாக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். இந்தி பேசுபவர்களே தலைமை பதவிகளில் அதிக அளவில் இருந்ததால் அவர்களால் பஞ்சாபி வளர்வதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்காக ஒரு திட்டம் வகுத்தார்கள். அப்போது, தமிழகத்தில் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு தமிழ் மீது எவ்வளவு பாசம் பாருங்கள் எனக்காட்ட வேண்டும் என்பதற்காக, (உண்மையில் பஞ்சாபியை ஹரியானாவில் இருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக) ஹரியானாவின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழை அறிவித்தார் அப்போது முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்சால். அலுவல் மொழியாக இருந்தாலும், அது நடைமுறையில் கிடையாது. இத்தனைக்கும் அந்த மாநிலத்தில் சுமார் 15 ஆயிரம் என்ற அளவிலேயே தமிழர்கள் இருந்தார்கள். 2010ல் தமிழுக்கு பதில் இரண்டாவது அலுவல் மொழியாக பஞ்சாபியை அறிவித்துள்ளார்கள்.


இந்த மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 85 சதவிதம் பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், 8 சதவிதம் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மீதியுள்ள 7 சதவிகிதமே மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். உலகத்தின் பிரபல பல நிறுவனங்களுக்கு ஹரியானாவில் தொழிற்சாலை உண்டு. அதேபோல் புகழ்பெற்ற கைத்தறி ஆடைகளுக்கு  ஹரியானாவின் பானிபட் நகரம் பிரசித்திபெற்றது. இத்தனை பெரிய தொழிற்சாலைகள், அதன் அலுவலகங்கள் ஹரியானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தாலும் விவசாயம்தான் இந்த மாநிலத்தின் முக்கிய தொழில்.

 

 

devilal



ஹரியானா சட்டமன்றத்தில் 90 இடங்கள் உள்ளன. இதில் 46 இடங்களை பிடிப்பவர்கள் அரியணையில் ஏற முடியும். வெற்றியை தீர்மானிப்பவர்களில் இந்துக்களின் ஜாட் சாதியை சேர்ந்தவர்களே பிரதானம். 30 சதவிதம் அச்சாதியை சேர்ந்தவர்களே. அதற்கு அடுத்ததாக பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். மாநிலத்தில் 15 ரிசர்வ் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யார் வெற்றி பெற்றாலும் லால்களை ஒதுக்க முடியாது. இந்தியாவின் துணை பிரதமராக இருந்தவர் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் நிறுவனர் சௌத்ரி தேவிலால். ஹரியானாவின் மிக முக்கிய பலம் வாய்ந்த சாதியான ஜாட் சமுதாயத் தலைவர்களுள் மிக முக்கியமானவர் தேவிலால். இவர்களது குடும்பத்தை தவிர்த்துவிட்டு ஹரியானாவின் அரசியல் வரலாற்றை எழுதிவிட முடியாது. அந்தளவுக்கு மாநிலத்தில் நங்கூரம் பாய்ச்சி அமர்ந்துள்ளார்கள்.

தேவிலால்க்கு நான்கு மகன்கள். அதில் கடைசி மகன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். மற்ற மகன்கள் பிரதாப் சிங், ஓம் பிரகாஷ் சௌதாலா, ரஞ்சித் சிங். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசங்களை அனுபவித்தவர்களான தேவிலாலும் அவரது சகோதரர் சகிப்ராமும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கினர். சுதந்திரக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தேவிலாலின் இளைய சகோதரர் சகிப் ராம், எம்.எல்.ஏவாகத் தேர்வாகி மக்கள் பணியாற்றினார். சுதந்திரக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் இயங்கி வந்த ஒருமைப்பாட்டு கட்சி என்கிற கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார்கள். சுதந்திரத்துக்குப் பின்பு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விவசாயிகளின் பெருந்தலைவராக தேவிலால் மாறினார். விவசாயிகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தினார், வைத்த கோரிக்கைகளில் வெற்றியும் பெற்றார். இந்நிலையில்தான் தனி மாநில கோரிக்கை, போராட்டமாகத் தீவிரமடைந்தது.

தமிழக மக்களுக்கு வாரிசு அரசியல் புதிதல்ல. ஆனால், நாமே வியக்கும் அளவுக்கான வாரிசு அரசியல், குடும்ப அரசியல் அங்கு நடக்கிறது. அந்தக் கதையையெல்லாம் தொடர்ந்து படிக்க...

அடுத்த பகுதி...

மாநிலத்தின் பாதி தொகுதிகள் குடும்பத்துக்கு, மீதிதான் கட்சிக்கு!

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.