Skip to main content

பஸ் ஸ்டாண்டில் ஆரஞ்சு விற்று பள்ளிக்கூடம் கட்டிய ஹரேகலா ஹஜப்பாவின் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #43

Published on 09/11/2021 | Edited on 09/11/2021

 

harekala hajabba

 

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் அண்மையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேர்வானவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் 102 பத்ம ஸ்ரீ விருதுகள், 7 பத்ம விபூஷன் விருதுகள், 10 பத்ம பூஷன் விருதுகள் என மொத்தம் 119 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், 29 பெண்களும் ஒரு திருநங்கையும் அடக்கம். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் கல்வி, சமூகப் பணி, வணிகம், மருத்துவம், விளையாட்டு எனப் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், சமூகப் பணிக்காக பத்ம ஸ்ரீ விருதுபெற்ற ஹரேகலா ஹஜப்பா பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். ஆரஞ்சு பழ வியாபாரியான ஹரேகலா ஹஜப்பாவிற்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது ஏன்? அப்படி என்ன சாதித்திருக்கிறார் இவர்..?

 

கர்நாடக மாநிலம் மங்களூர் தாலுகாவில் உள்ள ஹரேகலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹஜப்பா. ஆரஞ்சு பழ வியாபாரியான ஹஜப்பாவின் குடும்பத்தில் மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் என மொத்தம் 5 பேர். கூடையில் ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொண்டு மங்களூர் நகரின் பஸ் ஸ்டாண்டில் விற்று, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் மூலமாக குடும்பத்தை நடத்திவந்தார் ஹஜப்பா. கல்விக்காக பள்ளி பக்கமே சென்றிடாத ஹஜப்பாவிற்கு தெரிந்த மொழி கன்னடம் மட்டுமே. ஒருமுறை, பஸ் ஸ்டாண்டில் ஆரஞ்சு பழத்தை விற்றுக்கொண்டிருந்த ஹஜப்பாவிடம் வெளிநாட்டு பயணி ஒருவர், ஒரு கிலோ ஆரஞ்சு என்ன விலை எனக் கேட்கிறார். ஆங்கிலம் தெரியாத ஹஜப்பா அவர் கேட்டது புரியாமல் தடுமாறுகிறார். அந்தத் தருணம் ஹஜப்பாவை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறது. படிப்பறிவு இல்லாமல் நான் சிரமப்படுவதைப்போல நம்முடைய கிராமத்தில் உள்ள எந்தக் குழந்தையும் எதிர்காலத்தில் சிரமப்படக்கூடாது என முடிவெடுத்த ஹஜப்பா, அதற்கான தீர்வாக கிராமத்தில் பள்ளி ஒன்றையும் தொடங்க முடிவெடுக்கிறார்.

 

அதே நேரத்தில் பள்ளி தொடங்குவது அவ்வளவு எளிதான ஒன்றும் இல்லை என்பதும் அவரது உணர்விற்கு எட்டுகிறது. உடனே தொடங்காவிட்டாலும் எதிர்காலத்தில் நம் ஊரில் நிச்சயம் ஒரு பள்ளி தொடங்கவேண்டும் என உறுதியாக எண்ணிக்கொண்ட ஹஜப்பா, தன்னுடைய தினசரி வருமானத்தில் இருந்து சிறு பகுதியை சேமிக்கத் தொடங்குகிறார். அப்போதைய ஹஜப்பாவின் தினசரி வருமானம் 150ரூபாய். அந்த 150 ரூபாயில் இருந்து சிறுகசிறுக சேகரித்த பணத்தைக் கொண்டு ஒருகட்டத்தில் பள்ளி தொடங்குவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார். ஹஜப்பாவின் இந்தச் செயல் கர்நாடக அரசையும், பல தனியார் தொண்டு நிறுவனங்களையும் வெகுவாக ஈர்த்தது. 2000ஆம் ஆண்டு சிறு பள்ளியாக தொடங்கப்பட்ட அப்பள்ளி, 2007ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக உயர்த்தப்பட்டது. ஆங்கிலம் தெரியாமல் வெளிநாட்டினர் முன் ஹரேகலா ஹஜப்பா தடுமாறியது 1978ஆம் ஆண்டு; அவர் முயற்சியால் பள்ளி தொடங்கப்பட்டது 2000ஆம் ஆண்டு. ஏறக்குறைய 22 ஆண்டுகள் சிறுகச்சிறுக சேகரித்து தன்னுடைய எண்ணத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். அதேபோல, வெறும் 28 பேருடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி தற்போது 175 குழந்தைகள் கல்வி பயிலும் 10ஆம் வகுப்புவரை கொண்ட அரசுப்பள்ளியாக உயர்ந்து நிற்கிறது.

 

harekala hajabba

 

பள்ளி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தனக்குள் ஏற்பட்டது குறித்து கூறும்  ஹரேகலா ஹஜப்பா, "ஒருநாள் மங்களூர் பஸ் ஸ்டாண்டில் நான் ஆரஞ்சு பழம் விற்றுக்கொண்டிருந்தபோது, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பழம் என்ன விலை என்று ஆங்கிலத்தில் கேட்டார். அவர் கேட்டது அப்போது எனக்கு புரியவில்லை. அந்த இடத்தில் அவருக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினேன். இது போன்ற தருணத்தை என் ஊரில் உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு பள்ளி தொடங்க வேண்டும் என முடிவெடுத்தேன். என்னுடைய வருமானத்தில் இருந்து சிறு தொகையை சேகரிக்க ஆரம்பித்து, ஐந்தாயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் பள்ளி கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்தேன். பின், நிதி கேட்டு நன்கொடையாளர்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்களின் வீட்டு வாசலுக்கு வெளியே நிற்பேன். அவர்கள் பார்த்துவிட்டு 'யார் நீ... என்ன வேண்டும்...' என்பார்கள். நான் பள்ளி கட்டுவதற்காக நிதி வேண்டும் என்பேன்.

 

என்னுடைய தோற்றத்தை வைத்து அவர்கள் என்னை வித்தியாசமாக பார்ப்பார்கள். பொய்யான காரணம் கூறி பணம் கேட்கிறேன் என்றும்கூட நினைத்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லியதும் முழுமனதுடன் அவர்கள் நன்கொடை கொடுப்பார்கள். அப்படித்தான் பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பித்தேன். தற்போது 10ஆம் வகுப்புவரை எங்கள் ஊர் பள்ளியில் உள்ளது. இனி எங்கள் ஊருக்கு 12ஆம் வகுப்புவரைக்கான பள்ளியையும் கல்லூரியையும் கொண்டு வருவதுதான் என்னுடைய இலக்கு. அதற்காக நிறைய பேர் நன்கொடை கொடுத்துவருகிறார்கள். மேலும், எனக்கு வரும் பரிசுத்தொகை அனைத்தையும் பள்ளி கட்டுவதற்கான நிதிக்கு செலவிடுகிறேன். பிரதமர் நரேந்திர மோடியிடமும் இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளேன்" என்கிறார்.  

     

மேலும், பத்ம ஸ்ரீ விருது பெற்றது குறித்து அவர் கூறுகையில், "நான் பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் கடை வரிசையில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு திடீரென ஒரு ஃபோன் வந்தது. அந்த முனையில் இருந்து பேசியவர் இந்தியில் பேசியதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு ஓர் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் ஃபோனை கொடுத்து பேச சொன்னேன். அவர் பேசிவிட்டு, எனக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இவையனைத்தும் கடவுளால் கிடைக்கப்பெற்றவை. இது மாதிரியான பின்புலத்தில் இருந்துவந்து இவ்வளவு பெரிய விருதை நான் பெறுவேன் என்றெல்லாம் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை" என்கிறார்.

 

இன்றும், காலையில் எழுந்து பள்ளியின் அனைத்து வகுப்பறைகளையும் திறந்துவைத்துவிட்டு, மங்களூருவிற்கு ஆரஞ்சு பழம் விற்க சென்றுகொண்டிருக்கும்  ஹரேகலா ஹஜப்பா, தன்னுடைய குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என இரண்டிலும் எந்த பிரதிபலனும் பாராமல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துவருகிறார். இதுவரை கர்நாடகாவிலேயே பெரும்பாலான மக்களால் அறியப்படாமல் இருந்த ஹரேகலா ஹஜப்பாவின் புகழை, இந்த பத்ம ஸ்ரீ விருது நாடறியச் செய்யட்டும். 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.