Skip to main content

சொந்த வீட்டில் திருட்டு; காதலுக்கு மரியாதை செய்த இளம்பெண் -டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 26

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

detective-malathis-investigation-26

 

சொந்த வீட்டிலேயே திருடிய பெண் குறித்த வழக்கு பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்

 

கூட்டுக்குடும்பமாக இருந்த ஒரு குடும்பத்திலிருந்து பெரியவர் ஒருவர் நம்மிடம் வந்தார். தங்களுடைய வீட்டில் கடந்த சில காலமாக பணம், நகைகள் காணாமல் போவதாக அவர் தெரிவித்தார். வீட்டில் யார் மீதும் அவரால் சந்தேகப்பட முடியவில்லை. இதை நாங்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறினார். அவர்கள் வீட்டில் உள்ள அனைவரையும் நம்மிடம் அறிமுகப்படுத்தினார். 20 வயது நிரம்பிய இளையவர்கள் நிறைய பேர் இருந்தனர். அப்போதே எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் வந்தது. விசாரித்து ரிப்போர்ட்டை மட்டும் தம்மிடம் கொடுக்குமாறு அவர் கூறினார். 

 

எங்களுக்கு சந்தேகம் வந்த நபரின் செயல்களை நாங்கள் கவனிக்க ஆரம்பித்தோம். அவருக்கு ஒரு ஆண் நண்பரோடு தொடர்பு இருந்தது. வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அந்த நண்பர். அவர்கள் இருவரும் வெளியே செல்லும்போது இந்தப் பெண் தான் முழுக்க முழுக்க செலவு செய்தார். இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வருகிறது என்று யோசித்தோம். அந்தப் பையன் புதிதாக பைக் ஒன்றை வாங்கினான். அதற்கு அவனுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பதை எங்களால் யூகிக்க முடிந்தது. அந்த நேரத்தில் வீட்டில் பணம் காணாமல் போனதும் தெரிந்தது. 

 

இதுபற்றி அந்தப் பெரியவரிடம் தெரிவித்தபோது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதனால் குடும்பம் பிரியக்கூடாது என்று அவர் நினைத்தார். அவருடைய ஒப்புதலுடன் அந்தப் பெண்ணிடம் நாங்கள் பேசினோம். தான் எதையும் திருடவில்லை என்று முதலில் அந்தப் பெண் தெரிவித்தார். அதன்பிறகு கோபத்துடன் உண்மையை ஒப்புக்கொண்டார். தான் அந்தப் பையனை விரும்புவதாகவும், தங்களுடைய குடும்பத்தின் வசதிக்கு ஏற்ப அவனையும் உயர்த்துவதற்காகத் தான் இதைச் செய்ததாகவும் அவர் கூறினார். இது தவறானது என்பதை அவருக்கு நான் புரியவைத்தேன். 

 

அந்தப் பையன் அவராகவே உயர வேண்டும், அதற்காக திருடுவது தவறு என்று கூறினேன். இதுபற்றி மற்றவர்கள் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அந்தப் பெரியவர் எங்களைக் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற இன்னொரு வழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பிறகு எங்களிடம் வந்தது. காவல்துறையினர் வந்து பிள்ளைகளை மிரட்டுவதாகவும், காவல்துறையிடம் சென்றது தவறு என்றும் கூறி அந்தக் குடும்பத்தினர் எங்களிடம் வந்தனர். அனைவரின் பிரச்சனையையும் தீர்த்து வைக்கும் சக்திவாய்ந்த குடும்பம் அது. யார் தவறு செய்தது என்பதைக் கண்டுபிடித்த நாங்கள், அவரிடம் வழக்கை வாபஸ் வாங்கச் சொன்னோம். அவரும் வாபஸ் வாங்கினார். பிரச்சனை முடிந்தது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” - கார்த்தி சிதம்பரம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Karthi Chidambaram says Enforcement should be pulled and closed

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று (01-12-23) திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று (02-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த விவகாரம் எந்த வகையிலும் எனக்கு வியப்பு அளிக்கவில்லை. என்னை பொறுத்தவரை ஊழல் அதிகாரிகளால் இருக்கும் இயக்கம் தான் இந்த அமலாக்கத்துறை. பல பேர் பெரும் பணம் கொடுத்து தான் இந்த துறையிலே சேர்வார்கள். அவர்கள் லஞ்சம் கொடுத்து தான் இந்த துறையிலே சேருகிறார்கள். அதனால், லஞ்சம் பெற்று தான் அவர்களுடைய முதலீட்டை திருப்புவதற்காக இந்த செயலில் ஈடுபடுகிறார்கள்.

 

அமலாக்கத்துறையினர், சம்பந்தமே இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியோ அல்லது சம்மன் அனுப்பியோ அவர்களை எல்லாம் மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள். அதனால்,  பல தொழிலதிபர்கள் வேறு வழியின்றி லஞ்சத்தை கொடுக்கிறார்கள். எனவே, இது அவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை தான். அங்கித் திவாரி போல் அங்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால், இந்த அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்” என்று கூறினார்.  

 

 

 

Next Story

காதல் முறிவை தாங்காத காதலன்; மாணவியை கொன்று ஏரியில் வீசிய வெறிச்செயல்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

the boyfriend who lost his ex-girlfriend and dumped her on the lake shore in italy

 

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஹுலியா சியோஷெத்தின் (22). இவர் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், பிலிப்போ டுரிடோ (22) என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹூலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர். 

 

இந்த நிலையில், ஹூலியா படித்து வந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இந்த விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க ஹூலியா, கடந்த 16ஆம் தேதி வணிக வளாகத்திற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி, வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய ஹூலியா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில், பதட்டமடைந்த அவரது பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், இத்தாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

அந்த விசாரணையில், ஹூலியா வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஹூலியா வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலர் பிலிப்போவின் கார் வந்துள்ளது. அதன் பின், பிலிப்போ ஹூலியாவை கொடூரமாக தாக்கி அவரது காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிலிப்போவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடலுக்கு பின்பு பிலிப்போவை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், தன்னுடனான காதலை ஹூலியா முறித்ததால், ஆத்திரமடைந்த பிலிப்போ ஹூலியாவை ஆள் நடமாட்டமில்லாத ஏரிக்கரைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு ஹூலியாவை கொடூரமாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், ஹூலியாவின் உடலை அந்த ஏரிக்கரையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் அந்த ஏரிக்கரைக்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்த ஹுலியாவின் உடலை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.