Skip to main content

பாஜகவை சமாளிக்க இவர்தான் சரி? - முதல்வரைத் தெரியுமா? #11 

Published on 23/12/2018 | Edited on 06/01/2019

ஜோத்பூர் அருகிலுள்ள மகாமண்டீர் என்கிற இடத்தில் 1951 மே 3ஆம் தேதி   பிறந்தார்   அசோக். அப்பா, பாபு லஷ்மண் சிங் கெலாட். ஜோத்பூரில் பிரபலமான குடும்பம். மாலி கெலாட் என்கிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அசோக் சட்டம் பயின்றவர் எம்.ஏ பொருளாதாரம் படித்துள்ளார். படிக்கும்போதே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அசோக்கின் மனைவி சுனிதா. இவர்களுக்கு வைபவ் என்கிற மகனும், சோனியா என்கிற மகளும் உள்ளனர்.

 

ashok gehlot with his wife

அசோக் - சுனிதா



1971ல் கிழக்கு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு அகதியாக வந்தபோது, அவர்களுக்குக் காங்கிரஸ் கட்சியின் சார்பிலான உதவிகள் அனைத்தையும் பெற்றுத் தந்தவர் அசோக் கெலாட். இதனால் ராஜஸ்தான் மாணவர் காங்கிரஸ் பிரிவின் தலைவராக்கப்பட்டார். 1985 முதல் 1999 வரை மாநிலத் தலைவராக இருந்தார் அசோக். 1980ல் இருந்து 1999 வரை எம்.பியாக, மத்திய இணையமைச்சர், மத்திய அமைச்சர் என பதவியில் அடுத்தடுத்து இருந்து வந்தார். மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தாலும், எம்.எல்.ஏ தேர்தலில்   அவர் என்றும் நின்றதில்லை.

1998 சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தானில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று பாஜகவை தோற்கடித்திருந்தது காங்கிரஸ். யாரை முதல்வராக்கலாம் என்கிற உள்கட்சி மோதல் டெல்லியில் நடைபெற்றது. அப்போது சோனியாகாந்தி குடும்பத்துக்கு நெருக்கமாகயிருந்த, மத்திய அமைச்சர் அசோக் கெலாட் முதல்வர் பதவியை ஏற்கும்படி ஆனது. எம்.எல்.ஏவாகத் தேர்வாவதற்கு முன்பே ராஜஸ்தான் சட்டசபையில் தனக்கான   உயர்ந்த நாற்காலியை பெற்றுக்கொண்டார். முதல்வர் பதவியில் இருப்பவர் 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏவாக வேண்டும் என்பதற்காக ஒரு தொகுதி எம்.எல்.ஏவை ராஜினாமா செய்யவைத்து அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார். 2003 வரை பதவியில் இருந்தார். 2003ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்றது. பழைய ராணியான வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராகப் பொறுப்பு ஏற்றார். 2008 வரை எதிர்கட்சித் தலைவராக இருந்தார் அசோக்கெலாவட்.

2008 டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சர்தார்புரா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்வான அசோக் கெலாட் இரண்டாவது முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 2013 டிசம்பர் 13 வரை அந்தப் பதவியில் இருந்தார். இரண்டாவது முறையாக முதல்வர் பதவியில் இருந்த காலத்தில் சம்பாதித்ததை கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியல் பனாமா பேப்பர்ஸ் என்கிற பெயரில் வெளிவந்தபோது, அதில் காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் கெலாட் பெயரும் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. கட்சியில் ஓரம் கட்டப்பட்டார் அசோக் கெலாட்.


 

sachin pilot with rahul gandhi



2014 ஜனவரி 13ஆம் தேதி ஓரம்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் அசோக்கெலாட்க்கு பதில்   ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார் சச்சின் பைலட்.

சச்சின்... இவரது குடும்பமே விமானி குடும்பம். அவரது தந்தை ராஜேஷ் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். ராஜேஷ் இறந்ததைத் தொடர்ந்து அவரது மகன் சச்சினை காங்கிரஸ் கட்சிக்குள் இழுத்துப்போட்டார் ராகுல். ராகுலின் நண்பரான சச்சின், 2009ல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி இணையமைச்சராக பதவி வகித்தார். 2014ல் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக வேட்பாளார் சன்வார்லால் என்பவரிடம் தோல்வியை சந்தித்தார் சச்சின். அதன்பின் மாநில அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தினார். சச்சின் பைலட், பைலட் உரிமம் வைத்திருப்பவர், சிறந்த விளையாட்டு வீரர், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கற்றவர்.

 

rajesh pilot

ராஜேஷ் பைலட்



2018 ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் தலைவராக காங்கிரஸால் அடையாளம் காட்டப்பட்டவர் சச்சின் பைலட். காங்கிரஸ் வென்றால் அவர்தான் முதல்வர் எனச்சொல்லப்பட்டது. கடுமையான தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆளும் கட்சியாக இருந்த பாஜகவுக்கும், ராணியாகவே வாழ்ந்த முதல்வர் வசுந்தராவின்   பேச்சுக்கும் தேர்தல் களத்தில் பதிலடி தந்துவந்தார் சச்சின் பைலட். 

இந்தத் தேர்தலில் முன்னாள் முதல்வரான அசோக் கெலாட், சர்தார்புரா தொகுதியில் நின்றார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் சாம்பு சிங் என்பவர் நிறுத்தப்பட்டார். சுமார் 45 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் சாம்புவை அசோக் தோற்கடித்தார். இந்த தேர்தலில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்களே   தோற்றிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி பெருவெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் சச்சின் பைலட் என அனைவரும் நினைத்திருக்க, ஓரம் கட்டி வைக்கப்பட்ட அசோக் கெலாட்டை மீண்டும் முதல்வராக்கியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. துணை முதல்வராக சச்சின் பைலட்டை தேர்வு செய்துள்ளனர். 2019 எம்.பி தேர்தலில் சீனியர் ஒருவர் முதல்வர் பதவியில் இருந்தால்தான் பாஜகவின் தகிடுதத்தங்களை தவிர்க்க முடியும் என்பதால் ஓரம் கட்டிவைக்கப்பட்ட அசோக் கெலாட் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலுக்குப் பின் முதல்வர் மாற்றம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.

பழைய மொந்தையில் புதிய கள் என்பார்கள் கிராமத்தில். ராஜஸ்தானில் மொந்தையும் பழையது, கள்ளும் பழையது. பெரும் சவால்கள் முதல்வர் முன் உள்ளன. 

அடுத்த பகுதி:

இந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா? #12 

முந்தைய பகுதி:

எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே முதல்வரானவர் கதை!  - முதல்வரைத் தெரியுமா? #10 

 

 

 

 

 

 

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்பப் பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசிய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியா? பதிலளித்த கார்கே

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில்,  இந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார். அதே சமயம், ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. 

Kharge replied Rahul Gandhi Contest in Amethi Constituency?

இந்த நிலையில், இன்று (27-04-27) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். 

அப்போது அவர், “பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், மோடி நாட்டுக்காக நிறைய வேலை செய்துள்ளார் என்று கூறுகிறார். நான் அதிகம் பேச விரும்பவில்லை. காங்கிரஸ் இந்தியாவை சுதந்திரமாக்கியவர்களின் கட்சி. இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும், இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க ஒருபோதும் போராடவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்பினோம். நேருவுக்கு ஒன்றுமில்லை, இந்திரா காந்தி ஒன்றுமில்லை, லால்பகதூர் சாஸ்திரி ஒன்றுமில்லை, மோடிதான் எல்லாம் என தேசப்பற்றைப் பற்றி பாஜகவினர் எவ்வளவோ பேசுகிறார்கள்.

2014க்குப் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது, அதற்கு முன் நாடு சுதந்திரம் அடையவில்லை என்ற எண்ணத்தை கூட வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் அவரது வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன. இதில் வருத்தம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு, தலைவர்களாக மாறியவர்களும் இதையே சொல்கிறார்கள். காங்கிரஸ் மிகவும் மோசமாக இருந்திருந்தால், உங்கள் வாழ்நாளில் 30-40 வருடங்களை ஏன் தேவையில்லாமல் செலவழித்தீர்கள்?. இவர்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் அவர்களும் இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தியை விமர்சிக்கிறார்கள் எனப் பேசினார். இதனையடுத்து, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்கே, “சில நாட்கள் பொறுத்திருங்கள். எல்லாம் தெளிவாகிவிடும்” எனக் கூறினார்.